பக்கம்:கம்பன் சுயசரிதம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத்தொண்டைமான்

9


திருப்புங்கள். அப்போது தெரியும் சார் இது கம்பனின் சுயசரிதம்தான் என்று”. இப்படி சாஸ்திரியார் சொல்லிவிட்டு அவர் இடத்திற்குப் போய்விட்டார்.

அன்று முழுவதும், கிட்டத்தட்ட நான்கு ஐந்து மணி நேரம் உட்கார்ந்து ஏட்டைப் புரட்டினேன். ஏடு ஏடாகப் படித்தேன். அற்புதமான பாக்களிலே அந்த நூல் முழுவதும் எழுதப்பட்டிருந்தது. பாக்களைப் படிக்கப் படிக்க, அவைகளை முன்னமேயே படித்திருப்பது போல ஒரு உணர்ச்சி உண்டாகிக் கொண்டே இருந்தது. முதலடியைப் படித்த உடனேயே பல பாக்கள் எனக்கு முன்னமேயே தெரிந்த பாட்டுக்களாகத் தோன்றிற்று. இன்னும் சில பாட்டுக்கள் எத்தனையோ வருஷகாலமாக எங்கள் தலைவர் - அமரர் ரஸிகமணி அவர்கள் நாவில் நின்று நடம் ஆடி, அவர்களுடன் சேர்ந்து மற்றவர்களையும் ஆடச் செய்து ஓர் இன்ப லாகிரியை உண்டாக்கி இருக்கிறதே என்று தோன்றிற்று. ஒருவேளை இதெல்லாம் என்னுடைய பிரமையோ என்று நினைத்தேன். திரும்பவும் கண்ணைக் கசக்கிக் கொண்டு, கண்ணாடி அணிந்து கொண்டு, புரட்டினேன், புரட்டினேன். கிட்டத்தட்ட ஐயாயிரம், ஆறாயிரம் பாடல்களுக்கு மேல் படித்துப் பார்த்துவிட்டேன். ஒன்றும் தெரியவில்லை, அது கம்பனின் சுய சரித்திரம் என்று சொல்வதற்கு.

சாஸ்திரியார் பேரிலோ கோபம் கோபமாக வந்தது எனக்கு. அவரிடம் போனாலோ, சும்மா அமைதியாகயிருந்து படியுங்கள் தம்பி! அவசரப்படாதீர்கள் என்கிறார். அவர் இருந்த இருப்போ, படித்து முடித்தாலொழிய என்னை வெளியே போக விடமாட்டார் போல் இருந்தது. திரும்பவும் ஏடு கிடந்த இடம் சென்று உட்கார்ந்து மறுபடியும் புரட்டினேன் ஏடுகளை.

அப்படிப் புரட்டிக் கொண்டிருந்தபோது, ஒரு பெரியவர், வயது அறுபதுக்கு மேலிருக்கும் கம்பீரமான நடைபோட்டுக்