பக்கம்:கம்பன் சுயசரிதம்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத்தொண்டைமான்

91

தன் கையில் உள்ள குடையையும் தொப்பியையும் தூர எறிந்துவிட்டு, மண்டியிட்டு, கூப்பிய கையராய்த் தொழுதுகொண்டு இருக்கிறார். பக்கத்தில் உள்ளவர்கள் துரை வழுக்கி விழுந்துவிட்டார் போலும் என்று எண்ணி அவரைத் தூக்கிவிட முனைகிறார்கள். அவரோ ‘அடே! முட்டாள்களே, அதோ பாருங்கள், அதோ பாருங்கள். கலிங்கல்களின் இரு பக்கத்திலும் தேஜோமயமாக இரண்டு வீரர்கள் அல்லவா நின்று காவல் புரிகிறார்கள். அவர்கள் வில்லேந்தி நிற்கின்ற அழகுதான் என்ன? முகத்தில்தான் எத்தனை மந்தஹாசம்’ என்று கூவவே ஆரம்பித்து விடுகிறார். பக்கத்தில் நிற்கும் பக்தர்களுக்கு ஒன்றுமே தெரியவில்லை. கலெக்டருக்குக் கிடைத்த கோதண்டராமன் தரிசனம் அவர்களுக்குக் கிடைக்கவில்லை. கலெக்டரும் மக்களும் ஊர் திரும்புகிறார்கள். அன்று ஏரிக்கரை உடையவில்லை. ஏன் அந்த வருஷமே உடையவில்லை. கலெக்டரும் தான் சொன்ன சொல்லை நிறைவேற்ற மறக்கவில்லை. ஜானகிக்கு ஒரு கோயிலை அவருடைய மேற்பார்வையிலேயே கட்டி முடித்துக் கொடுத்து விட்டுத்தான் தன் தாய்நாட்டிற்குக் கப்பல் ஏறி இருக்கிறார். ‘இந்தத் தருமம், கும்பினி ஜாகீர் கலெக்டர் கர்னல் லயனல் பிளேஸ் துரை அவர்களது’ என்று கோயில் மண்டபத்திலே கல்லில் வெட்டி வைத்திருக்கிறார்கள். இதை இன்று அங்கு செல்பவர்கள் காணலாம். கலெக்டர் வேண்டுகோளுக்கு இணங்கி ஏரி காத்த இந்த இராமனையே ஏரி காத்த பெருமாள் என்று இன்றும் அழைக்கிறார்கள் மக்கள்.

இத்தனை விஷயங்களும் தெரிந்தபின் இனி நாமும் கோயிலுள் செல்லலாம். கம்பன் கண்ட கோதண்டராமனை ஏரிகாத்த பெருமாளைக் கண்டு வணங்கலாம். கோயிலுக்கு முன்னாலே பெரிய திருக்குளம். குளக்கரையில் எல்லாம் நல்ல தென்னஞ் சோலைகள். இச்சோலைகளுக்கும் ஏரிக்கரைக்கும் இடையிலே கோயில். இந்தக் கோயிலிலே மூலவர் கோதண்டராமன். உற்சவமூர்த்தி இருவர். ஒருவன் கருணாகரன்,