பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆரணிய காண்டம்

149



அகத்தியரும் இராமனது வருகையை, எதிர் நோக்கி இருந்தார்; அகம், குளிர இராமன் அகத்தியரைச் சந்தித்தான்; அவர் திருவடிகளில் விழுந்து வணங்கி அவரிடம் தான் கொண்ட மதிப்பை வெளிப் படுத்தினான்.

‘அரக்கர் செய்யும் இரக்கமற்ற செயல்களைத் தடுத்துத் தீமைகளைக் களைய வேண்டும்’ என்று அகத்தியரும் வேண்டினார். அதனோடு நில்லாமல் தான் வைத்திருந்த ஆயுதங்கள் சிலவற்றை இராமனுக்கு அளித்தார்; திருமால் வைத்திருந்த வில் ஒன்றனையும், ஒப்புயர்வற்ற வாள் ஒன்றையும், சிவபெருமான் திரிபுர மெரித்த காலத்தில் மேருவை வில்லாக வளைத்துப் பூட்டிய அம்பு ஒன்றனையும் தந்தார்.

இராமன் சீதையோடு தங்குதற்கு, உரிய இனிய சூழல் அமைந்த இடம் பஞ்சவடி என்றும், அதன் அருகில் மலைச்சாரல் ஒன்று உள்ளது என்றும், அந்தப் பஞ்சவடியில் கனிகளைத் தரும் வாழை மரங்களும் பசிய செந்நெற்கதிர்களும், தேன் சிந்தும் பொழில்களும் மிக்க கவின்மிகு நதிகளும் உள்ளன என்றும், நீர் வளமும் நில வளமும் மிக்க அந்தச் சோலை தங்கு வதற்கு ஏற்றது என்றும் அகத்தியர் கூறினார்.

மேகநிற வண்ணனாகிய இராமன் அறிவுக் கடலாய் விளங்கிய அகத்திய முனிவரிடமிருந்து பிரியா விடை பெற்றுப் பஞ்சவடி நோக்கி நடந்தான்; பாகு அனைய சொற்களைப் பேசிய பாவையாகிய சீதை யும், வீரம் காட்டிய தம்பியும் பின் தொடரப் பயணம் தொடர்ந்தது.