பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

150

கம்பராமாயணம்



சடாயுவைச் சந்தித்தல்

காவதம் பல கடந்தனர்; நதிகள் மலைகள் சோலைகள் அவர்களுக்கு வழிப்பட்டன. புதிய புதிய இடங்களைக் கண்டு அவர்கள் இறும்பூது எய்தினர். எதிர்பாரமல் அங்கே கழுகின் வேந்தைக் கண்டு தொழுது வணங்கினர். அரசிளங்குமரர்களைத் தவசிகளின் கோலத்தில் காண அப்பறவை வேந்தனுக்கு வியப்பு விஞ்சியது.

“நீவிர் யாவிர்”? என்று வினவினான்.

“தசரதனின் மைந்தர்” என்று பதில் இறுத்தனர்.

தசரதன் கழுகின் வேந்தனாகிய சடாயுவின் நண்பன் ஆதலின் அவன் நலத்தைக் கேட்டு அறிய விரும்பி.

“வாய்மை மன்னன் வலியனோ” என்று கேட்டான்.

“அவன் காத்து வந்த வாய்மை அழியவில்லை; காவலன் மறைந்துவிட்டான்” என்று கூறினான் இராமன்.

நண்பனை இழந்தமை கழுகு வேந்தனுக்குத் தீராத் துயரைத் தந்தது; உணர்வு நீங்கி உயிரற்றவனாயக் காணப்பட்டான்; வெறும் சடலமாக விளங்கினான். இராமனும் இலக்குவனும் அவனைத் தடந்தோள் களால் தழுவிக் கொண்டு நழுவ விடாமல் நிறுத்தினர்.

இருவரும் தம் கண்ணிரால் அவனைக் குளி, வைத்தனர்; அவன் உயிர்ப்புப் பெற்று அயர்ப்ட நீங்கினான். தசரதன் வெற்றிச் சிறப்புகளை அடுக்கிக் கூறி அழுகையை அவன் ஒப்பாரி ஆக்கினான்.