பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

யுத்த காண்டம்

303



உணவுப் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்த வீடணன், காற்றின் போக்கில் செய்தி அறிந்து, களம் வந்து சேர்ந்தான். வடு நீங்கிய இராமன் மேனி கண்டு, அவன் இறப்பைப் பற்றிக் கடுகு அளவு ஐயமும் அவனுக்கு எழவில்லை; அரவுக் கயிற்றால் பிணிப்புண்ட நிலையில் கருடன் வந்து காத்தது போல, அயன் அம்பால் தாக்குண்டவர் மயக்கம் தீர சஞ்சீவி மருந்துச்செடி தேவை என்பதை, உணர்ந்தான்.

அனுமன் இருக்கும் இடம்தேடி, நீர் தெளித்து அவனை மயக்கம் தெளிவித்தான்; நெடுமரமாய் நின்ற அனுமன், படுகளம் பார்த்துத் திகைத்தான்; ‘சஞ்சலம் தீர்க்க அவன் சஞ்சீவிப் பருவதத்தை அடைய வேண்டும்’ என்று வீடணன் உரைத்தான்; சாம்பவான் எழுப்பப்பட்டான்; அவன் வயதில் மூத்தவன் ஆதலால் அச்செடிகள் இருக்கும் மலைக்கு வழி அறிந்தவனாய் இருந்தான்.

“ஏமகூட மலையைக் கடந்து, மாமேரு மலையை அடைந்தால், அதற்கு அப்பால் அம்மருத்து மலை தெரியும்” என்று கூறினான் அவன் கூறியவாறே அனுமனும் அம்மலைகளைக் கடந்து அரிய மருந்து மலை இருக்கும் இடம் அடைந்தான்; அதனை வாணர மகளிர் காவல் காத்திருந்தனர்; வானரத் தலைவனாகிய அனுமனுக்கு அதைத் தந்து உதவினர்.

மறுபடியும் இருந்த இடத்திலேயே அம்மலையைக் கொண்டு வந்து வைக்குமாறு வேண்டினர்; அதற்கு இசைந்து அம்மலையை அடியோடு பெயர்த்து, ஒருகையிலேயே தாங்கிக் கொண்டு, காடும், மலையும் கடந்து, ககனமார்க்கமாய் வந்து சேர்ந்தான்.