பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

198

“ஆம்! நான் பிறந்த ஒராண்டுவரையும், எப்படியாவது அந்த இளைஞர் கிடைத்தாலும் கிடைக்கலாம் என்ற நம்பிக்கையில் உயிர் வாழ்ந்து பார்த்தாள்-அவர் கிடைக்கவேயில்லை. இடையிலே பாட்டியின் தொல்லை பொறுக்க முடியவில்லை. பணத்துக்காகப் பலரைத் திருப்தி செய்யும் படி வற்புறுத்திக் கொண்டேயிருந்தாள். அந்த வேதனை தாங்க மாட்டாமல், குழந்தையாகிய என்னையும் மறந்து என் தாய் தற்கொலை செய்துகொண்டாள்’ என்று சொல்லித் தன் கண்களை வெந்நீர் ஊற்றாக ஆக்கிக் கொண்டாள் கலா. அவளது பட்டுத் தளிர் மேனி துயரத்தால் கன்றிவிட்டது.

"இந்தச் செய்தி யெல்லாம் உனக்கு எப்படித் தெரிந்தது?" என்று சேதுநாதன் கேட்டார்.

என்னை வளர்த்துவந்த செவிலிக் கிழவி இப்படி அடிக்கடிச் சொல்லுவாள். என் தாயின் வரலாற்றைக் கேட்கக்கேட்க, எனக்கும் அவளுக்கிருந்த நல்ல உணர்வு ஏற்பட்டது. அவளை ஏமாற்றிச் சென்றுவிட்ட அந்த இளைஞர்-இல்லை-என் தந்தை எங்கு இருக்கிறாரோ? யார் அறிவார்?" என்று கலா பொருமினாள்.

“அந்த இளைஞரின் நினைவான பொருள் எதுவும் உன் தாயினிடத்தில் சிக்கவில்லையா?” என்று சேதுநாதன் வினவினார்.

"இல்லை, ஒன்றும் சிக்கவில்லை. ஆனால் அவரும் என் தாயும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று உள்ளது. பெற்றோர் நினைவிற்காக நான் அதைப் பாதுகாத்து வைத்திருக்கிறேன். அதோ மாட்டியிருக்கிறது பாருங்கள்-அதுதான்" -என்று சொல்லிச் சுவரில் மாட்டியிருந்த ஒரு புகைப்படத்தைக் காட்டினாள்.