பக்கம்:கற்பனைச்சித்திரம், அண்ணாதுரை.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

கற்பனைச்சித்திரம்



பேசவில்லை, ஆதரித்தும் பேசவில்லை. நிலக்கடலையைக் கொரித்துக்கொண்டே இருந்தான். இன்னும் இரண்டொரு வீதிகளே இருந்தன வீடு போக. வேகத்தைக் குறைத்தார் பூபதி; மறுபடியும் யோசனை வந்தது, யுத்தப் பிரசாரகரை போய் பார்த்து விஷயத்தைச் சொல்வேமா என்று, போவதா வேண்டாமா என்ற யோசனையிலே ஈடுபட்டு, மோட்டாரின் வேகத்தைக் குறைத்துக்கொண்டே இருந்தார். இரண்டு ஆலைத் தொழிலாளர்கள், நடுப் பாதையில் சென்றுகொண்டிருந்தனர்; மோட்டார் ஊது குழலைப் பலமுறை அழுத்தவேண்டி நேரிட்டது பூபதிக்கு. ஆலைத் தொழிலாளர், நிதானமாக மோட்டாரை ஒருமுறை திரும்பிப் பார்த்துவிட்டு, பாதை ஓரம் சென்றனர், மோட்டார், பிறகு அவர்களைத் தாண்டிச் சென்றபோது, ஒரு தோழன், மற்றவனிடத்திலே, "போரான் பார்டா பொதிமாடு மாதிரி. நாம்ப வேகாத வெயிலிலே பாடுபட்டுவிட்டு, தள்ளாடி நடக்கிறோம். எப்படிப்போகிறான் பார்த்தயா மோட்டார்லே. அந்த மோட்டார் சவாரியிலே கூட அவருக்குக் களைப்பு வந்தூட்டுது, கைக்குட்டையை எடுத்து முகத்தைத் துடைக்கிறான். நாம்ப, உடம்புபூரா மண், வீட்டிலே போய்க் கழுவவேணும். தெருக்கோடியிலே தண்ணிவந்தா" என்று சொன்னான். பூபதியின் மாளிகை இருக்கும் தெருக் கோடியிலே, ஏதோ கூட்டம்; ஒருவன், உரத்த குரலில் பேசிக்கொண்டிருக்கக் கண்டான் பூபதி. ஒரு சமயம் யுத்த நிதிக் கூட்டமோ என்று எண்ணினான்; பிறகு "செ! யுத்தநிதி கூட்டம் இப்படி ஏன் நடுத்தெருவிலே நடக்கப் போகிறது?" என்று எண்ணினான். எதற்கும் கவனிப்போம் என்று எண்ணி, மோட்டாரை மிக மொதுவாக ஓட்டிக் கொண்டு சென்றான். பிரசங்கி ஆவேசமாகப் பேசுவது தெரிந்தது. ஜனங்கள், மோட்டார் வருவதை வேடிக்கை பார்த்துக்கொண்டு, பிரசங்கத்தைச் சரியாகக் கவனிக்காமலிருந்தனர் பிரசங்கி, ஒரு விநாடி பேச்சை நிறுத்தினான், மோட்டாரைப் பார்த்தான். அதிலே இருந்த பூபதியையும் பார்த்தான். ஆரம்பித்தான், ஆவேசமாக ஜனங்களின் கண்ணும் கருத்தும், பேச்சாளி பக்கம் திரும்பிவிட்டது.