பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அமெரிக்க ஐக்கிய நாடுகள்

116

அமெரிக்க ஐக்கிய நாடுகள்

மலும் தடுக்க வேண்டும் என்றும் விரும்பியிருக்கக் கூடும். அக் காலத்தில் பிரெஞ்சுக்காரர்களுடைய ராணுவ நிலைமை ஆங்கிலேயர்களுடையதைவிடச் சிறந்ததாயிருந்தது.

18ஆம் நூற்றாண்டின் இடையில் பிரெஞ்சுக்காரர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் ஓய்வின்றி வட அமெரிக்காவில் சண்டை நடந்துகொண்டிருந்தது. 1757-ல் வில்லியம் பிட் பிரிட்டிஷ் இராச்சிய செக்ரடரி (Secre- tary of State)யானபோது குடியேற்ற நாட்டுப் போரைத் திறம்பட நடத்தத் தொடங்கிப் பல வெற்றிகளையடைந்தார். அதன் விளைவாகப் பிரெஞ்சு ஆதிக்கம் குவிபெக், மான்ட்ரியால் ஆகிய இரு நாடுகளோடு நின்றது. 1759-ல் உல்ப், மான்ட்காம் என்னும் இரு பிரிட்டிஷ் ஜெனரல்கள் குவிபெக்கையும் தாக்கிக் கைப்பற்றினர். இப்போரில் அவ்விரு தளபதிகளும் கொல்லப்பட்டனராயினும், வட அமெரிக்காவில் பிரெஞ்சு ஆதிக்கம் ஒருவாறாக முடிவுற்றது. 1763-ல் பாரிஸ் உடன்படிக்கைப்படி மிசிசிபிக்குக் கிழக்கேயுள்ள எல்லாப் பிரெஞ்சுக் குடியேற்ற உடைமை நாடுகளும் பிரிட்டனுக்கு மாற்றப்பட்டன. 1760-ல் ஸ்பெயினிடமிருந்து பிளாரிடா இங்கிலாந்திற்குக் கிடைத்தது.

1763-ல் ஏற்பட்ட பாரிஸ் உடன்படிக்கையால் வட அமெரிக்காவிலிருந்த இடங்களைப் பிரான்சு இழந்தது. தாய்நாட்டின் உதவியை மிகுதியும் எதிர்பார்த்திருந்த பிரிட்டிஷ் குடியேற்றங்களுக்கு அடுத்தாற்போலிருந்த பிரெஞ்சு அபாயம் நீங்கிவிட்டதால் அவை தங்கள் நாட்டு நிருவாகத்தைத் தாங்களே கவனித்துக்கொள்ள முடியும் என்று கருதலாயின. குடியேற்ற நாடுகளுக்கு இங்கிலாந்தின்மீது பலவகையிலும் பகைமை முற்றத்தொடங்கிற்று. கிரென்வில் (Grenville) என்னும் பிரிட்டிஷ் பிரதம மந்திரி நேர்முக வரி விதிக்க முயன்றபோது (1760-1766)முதன் முதல் மனக்கசப்புத் தோன்றிற்று. 1767-1774-ல் டவுன்ஷெண்டு தேயிலை வரி முதலிய மறைமுக வரிகளை விதிக்க முயன்றபோது இம் மனக்கசப்பு வலுத்தது. 1774லிருந்து 1776 வரையில் இக்குடியேற்றங்கள் ஒரு காங்கிரசைக் கூட்ட முயன்றபோது குடியேற்ற நாடுகளின் ஒருமித்த நடவடிக்கை சாத்தியமாயிற்று.

ஏழாண்டுப் போருக்குப் பிறகு இங்கிலாந்திற்குப் பெரிய தேசியக் கடனைத் திருப்பிக் கொடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டபோது, அக் கடன் சுமையில் ஒரு பகுதியைக் குடியேற்ற நாடுகளும் ஏன் ஏற்றுக்கொள்ளக் கூடாது என்று கிரென்வில் எண்ணினார். குடியேற்ற நாடுகள் இதை விரும்பவில்லையாயினும் தாம் எண்ணியவாறே கிரென்வில் வரி விதிக்க விரும்பினார். ஒரு இலட்சம் பவுன் வரி வசூல் செய்து, வட அமெரிக்கப் பாதுகாப்பிற்காக அங்கு ஒரு படையை நிறுவ வேண்டும் என்று அவர் கருதினார். இவ் வரியை முத்திரைப் பணம் மூலம் வசூல் செய்யவேண்டும் என்பது அவர் கருத்து. ஆனால் பிரிட்டிஷ் பார்லிமென்டுக்கு அமெரிக்கக் குடியேற்ற நாடுகள் மீது வரி விதிக்கும் உரிமையில்லை என்று அமெரிக்கர் கருதினர். பிரிட்டிஷ் பார்லிமென்டில் அமெரிக்கக் குடியேற்றங்களிலிருந்து பிரதிநிதிகள் அனுப்பப்படாமையால் அப் பார்லிமென்டின் சட்டங்கள் தங்களைக் கட்டுப்படுத்தமாட்டா என்பது குடியேற்றங்களின் கொள்கை. பிரிட்டிஷ் பார்லிமென்டு முத்திரைச் சட்டத்தை 1765-ல் நிறைவேற்றிற்று. இவ் விஷயத்தைக் கேள்விப்பட்ட அமெரிக்கர் மிகுந்த கோபமடைந்தனர். போஸ்டன், நியூயார்க் முதலிய இடங்களில் கலவரம் நடந்தது. முத்திரைக் காகிதங்களைச் சேர்த்து நெருப்பு வைத்தனர். பிரிட்டிஷ் பொருள்களை அமெரிக்க வியாபாரிகள் வாங்க மறுத்தனர்; பிரிட்டிஷ் துணிகளை அவர்கள் ஏற்க மறுத்தனர். நெசவுக் கைத்தொழில் அமெரிக்காவில் ஆரம்பமாயிற்று. பிரிட்டிஷ் நெசவுத் தொழில் மிகவும் சீர்கெட்டது. 1766-ல் பிரிட்டனில் ராக்கிங்ஹாம் பிரதம மந்திரியானபின் முத்திரைச் சட்டம் ரத்தாயிற்று; ஆயினும் அமெரிக்கக் குடியேற்றங்கள் மீது வரி விதிக்கும் உரிமை இங்கிலாந்து பார்லிமென்டிற்கு உண்டு என்பது வற்புறுத்தப்பட்டது. பிரிட்டிஷ் பார்லிமென்டுக்கு இவ்வுரிமை உண்டு என்பதை அமெரிக்கர் ஒப்புக் கொள்ள மறுத்தனர். 1767-ல் புதுவிதமான மறைமுக வரிகள் விதிக்கப்பட்டன. இவற்றில் முக்கியமானவை இறக்குமதி வரிகள். இவற்றைச் செலுத்த முடியாது என்று மசசூசிட்ஸ், வர்ஜீனியா, வடகரோவினா முதலிய குடியேற்றங்கள் மறுத்தன. இவ்வகை வரி விதிப்புக்களைச் சாதம் (Chatham), பர்க் (Burke) முதலிய ஆங்கிலப் பெரியோர்களும் எதிர்த்தனர்.

நார்த் பிரபு 1770-ல் பிரிட்டிஷ் பிரதம மந்திரியானார். அவர் அமெரிக்கக் குடியேற்ற நாடுகளுக்கு விதிக்கப்பட்ட வரிகளில், தேயிலை வரியைத் தவிர ஏனையவற்றை யெல்லாம் நீக்கிவிட்டார். அமெரிக்கா மீது ஆங்கிலேயருக்கு வரி விதிக்கும் உரிமைகள் உண்டு என்று காட்டுவதற்காகத் தேயிலை மீது விதித்திருந்த வரியை நீக்காமல் வைத்திருந்தனர். இவ்வரியினால் ஆங்கிலேயருக்கு இலாபம் அதிகமாகக் கிடைக்கவில்லையாயினும், கொள்கையளவிற்கேனும் அவ்வரி இருக்கவேண்டும் என்று அவர்கள் கருதினார்கள். அமெரிக்கரும் கொள்கையளவிலேயே அவ்வரியை எதிர்த்தனர். இதை ஒட்டி 1770-ல் போஸ்ட்டனில் நடந்த கலவரத்தை ஆங்கில அதிகாரிகள் பலாத்காரமாக அடக்கினர். கலவரம் செய்தவர்களில் சிலர் இறந்தனர். இதை 'போஸ்ட்டன் படுகொலை' என்று வருணித்தனர். 1772-ல் 'காஸ்பீ' (Gasree) என்னும் பிரிட்டிஷ் போலீஸ் கப்பல் கரை தட்டிற்று. அதை அமெரிக்கர்கள் எரித்துவிட்டனர். இச் செயலில் கலந்து கொண்டவர்களைத் தண்டிக்க வேண்டும் என்று ஆங்கிலேயர்கள் விரும்பியது பலிக்கவில்லை.

1773-ல் ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியின் மூலம் அமெரிக்காவிற்குப் பல கப்பல்கள் தேயிலைப் பெட்டிகளோடு வந்தன. அமெரிக்கர் தேயிலை வரி கட்டாமல் அப்பெட்டிகளைக் கப்பலை வீட்டிறக்க முடியாது. பிலடெல்பியாவிலும் நியூயார்க்கிலும் வியாபாரிகள் அப்பெட்டிகளை எடுக்க மறுத்துவிட்டனர். சார்லஸ் டவுனில் கப்பலைவிட்டிறக்கின தேயிலை கிடங்குகளிலேயே கிடந்தது. போஸ்ட்டனில் சிலர் கப்பலில் ஏறி, 18,000 பவுன் பெறுமானமுள்ள தேயிலைப் பெட்டிகளை வாரிக் கடலில் வீசினர். இதைப் 'போஸ்ட்டன் தேநீர் விருந்து' என்பர். இச் செயல்களால் ஆத்திரமடைந்த ஆங்கிலேயர் போஸ்ட்டன் துறைமுகத்தை மூடிவிடவும், குடியேற்ற நாடுகளில் ஆங்கிலேயத் துருப்புக்களை வைக்கவும் சட்டமியற்றினர்.

தங்களுடைய சுதந்திரத்திற்கு அபாயம் ஏற்பட்டதையுணர்ந்த குடியேற்றங்கள் பிலடெல்பியாவில் கூடிய ஒரு காங்கிரசில் இங்கிலாந்தின் போக்கைக் கண்டித்துத் தீர்மானங்கள் நிறைவேற்றின. 1775-ல் காங்கிரசு இத்தகராறை நல்ல முறையில் தீர்க்கும்படி பிரிட்டிஷ் மன்னருக்கு ராஜ விசுவாசத்தைக் கூறிக்கொண்டு ஒரு விண்ணப்பத்தை அனுப்பிற்று.

III-ம் ஜார்ஜ் இவ்விண்ணப்பத்தை ஏற்க மறுத்து விட்டார். அதே ஆண்டில் காங்கிரசின் படைகள் கானடாவைத் தாக்கின. 1776-ல் தாய்நாட்டோடு