பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறிவாய்வு

265

அறிவாய்வு

தருவனவாக இருந்தாலும், சொற்களின் பொருளை நன்கு அறியாதிருந்தாலும் அப்பொழுது ஆய்வு சரியாக நடைபெறாது; வழுக்கள் உடையதாக ஆகிவிடும்.

ஆராய்தல் என்பதைத் தர்க்கம் என்றும் கூறுவர். இத் தர்க்க முறை ஆராய்வில் மூன்று பகுதிகள் உள:

1. காண்டல், கேட்டல், கருதல் ஆகியவற்றால் கிடைத்த உண்மை 'ஆதார வாக்கியம்' எனப்படும்.

2. இதில் உட்கருத்தாய் அமைந்ததும், நாம் கண்டுகொள்வதுமான புதிய உண்மை 'முடிவு வாக்கியம் ’ எனப்படும்.

3. இவ்விரண்டுக்குமுள்ள தொடர்பு 'காரண வாக்கியம்' எனப்படும்.

உதாரணம்:

நீரைவிடக் கனம் குறைந்தவை நீரில் மிதக்கும். (ஆதார வாக்கியம்).
மரக்கட்டை நீரைவிடக் கனம் குறைந்தது. (காரண வாக்கியம்).
ஆதலால் மரக்கட்டை நீரில் மிதக்கும். (முடிவு வாக்கியம்).

இந்த முடிவை அனுமானம் என்றும், இதனால் கிடைக்கும் முடிவை 'அனுமிதி' என்றும் கூறுவர்.

1. காரணம் உண்மையாக இருந்தும், அனுமான முறை சரியாக இல்லாவிட்டால் அனுமிதி தவறாகி விடும்.

உதாரணம்:
சில மாணவர்கள் சரித்திரம் கற்கிறார்கள்.
சில மாணவர்கள் கணிதம் கற்கிறார்கள்.
ஆதலால் கணிதம் கற்கும் மாணவர் அனைவரும் சரித்திரம் கற்கிறார்கள்.

2. அனுமான முறை சரியாயிருந்தும், காரணம் உண்மையாக இல்லாவிட்டால் அனுமிதி பொய்யாகிவிடும்.

உதாரணம்:
மனிதர் அனைவரும் புல் தின்னுகிறார்கள்.
தேவதத்தன் ஒரு மனிதன்.
ஆதலால் தேவதத்தன் புல் தின்னுகிறான்.

3. காரண வாக்கியமும் முடிவு வாக்கியமும் ஒன்றுக்கொன்று தொடர்பு இல்லாததாக இருந்தாலும் அனுமிதி பொய்யாகிவிடும்.

உதாரணம்:
மனிதர் அனைவரும் இறக்கும் தன்மை வாய்ந்தவர்.
மலையாளத்தில் மழை அதிகம்.
ஆதலால் நெல் விலை உயர்ந்துவிட்டது.

தவறான அனுமானம் ஒழுங்கற்றது; பொய்யான அனுமானம் உண்மையற்றது; ஒழுங்கும் உண்மையும் அனுமானத்தின் இரு பகுதிகளாகும்.

அனுமிதியானது காரண வாக்கியத்தைத் தழுவியதாயும், அதினின்று புதிதாகத் தோன்றியதாயும் இருத்தல் வேண்டும். காரண வாக்கியத் தொடர்பில்லாத அனுமிதிக்கு அனுமானம் என்னும் பெயர் பொருந்தாது. புதிதாகத் தோன்றாத அனுமிதி, கூறியது கூறல் என்னும் குற்றமுடையதாகும். மூன்றாவது உதாரணத்தில் நெல் விலை உயர்ந்துவிட்டது என்பது புதிய கருத்துத்தான்; ஆனால் அதற்கும் மலையாளத்தில் மழை அதிகம் என்பதற்கும் தொடர்பு இல்லை.

பகுப்பு அனுமான முறை (நிகமனவாதம்), தொகுப்பு அனுமான முறை (ஆகமனவாதம்) என ஆய்வு இருவகைப்படும்.

1. நாம் ஆராய்ந்தறிந்த ஒரு பொது விதியை நாம் புதிதாய்க் காணும் ஒரு நிகழ்ச்சியுடன் பொருத்திப் பார்த்து, அந்நிகழ்ச்சியை விளக்குவதும், அதன்மூலம் பொதுவிதி உண்மை என்று காண்பதும் பகுப்பு அனுமானமாகும்.

உதாரணம்:
மனிதர் அனைவரும் இறக்கும் தன்மை வாய்ந்தவர். (பொதுவிதி).
தேவதத்தன் ஒரு மனிதன். (நிகழ்ச்சி).
ஆதலால் தேவதத்தனும் இறப்பான். (விளக்கம்).

2. நாம் கண்ட சில நிகழ்ச்சிகள் எல்லாவற்றிற்கும் பொதுவாயுள்ள ஒரு தன்மை இருப்பதைக் கண்டு, அந்தந்தத் தன்மை அதுபோன்ற நிகழ்ச்சிகள் எல்லாவற்றிற்கும் உண்டு என்று ஊகிப்பது தொகுப்பு அனுமானம்.

உதாரணம்:
இராமன், கிருஷ்ணன், கோவிந்தன் முதலிய நாம் கண்ட பலர் மனிதராக இருப்பதையும், அவர்கள் இறப்பதையும் கண்டு, எல்லா மனிதர்களும் இறப்பார்கள் என்று, கண்டவைகளிலிருந்து காணாதவற்றை ஊகிக்கிறோம்.

தொகுப்பு முறை, எண்ணிக்கைத் தொகுப்பு முறை (கணனாகமனம்) என்றும், விஞ்ஞானத் தொகுப்பு முறை என்றும் இருவகைப்படும். பல பொருள்கள் அல்லது நிகழ்ச்சிகள் ஒரு குறிப்பிட்ட தன்மை உடையயனவாயிருப்பதை வைத்து, அவை போன்ற பொருள்களும் அல்லது நிகழ்ச்சிகளும் அதே தன்மை உடையனவாயிருக்கும் என்று அனுமானிப்பது எண்ணிக்கைத் தொகுப்பு முறையாகும். ஆனால் அவைபோன்ற பொருளோ அல்லது நிகழ்ச்சியோ ஒன்று அந்தத்தன்மை உடையதாக இல்லாதிருக்குமானால் அனுமானம் பொய்யாக ஆகிவிடும்.

ஒன்றிரண்டு பொருள்களையோ அல்லது நிகழ்ச்சிகளையோ சோதனை முறைகளால் ஆராய்ந்து, அவற்றில் காணும் தத்துவம், அவற்றைப் போன்ற மற்றப் பொருள்கள் அல்லது நிகழ்ச்சிகளிடமும் உண்டு என்று கூறுவது விஞ்ஞானத் தொகுப்பு.

பத்து மரக்கட்டைகள் நீரில் மிதக்கக் கண்டதை வைத்து, எல்லா மரக்கட்டைகளும் நீரில் மிதக்கும் என்று கூறுவது எண்ணிக்கைத் தொகுப்பு. மரக்கட்டையையும் நீரையும் சோதித்து, மரக்கட்டை நீரைவிடக் கனங் குறைந்ததாக இருப்பதை அறிந்து, அதனால், 'மரக்கட்டை நீரில் மிதக்கும் தன்மை கொண்டதாய் இருக்கவேண்டும். ஆதலால் மரக்கட்டை நீரில் மிதக்கும்' என்று கூறுவது விஞ்ஞானத் தொகுப்பு. இந்த அனுமிதியே ஐயமற்ற பொதுவிதி அல்லது விஞ்ஞான நியதி எனப்படும்.

பகுப்பு முறை, தொகுப்பு முறை என்னும் இரண்டும் வேறுபட்டவையுமல்ல, முரணானவையுமல்ல. தொகுப்பு முறை நிகழ்ச்சிகளையோ, பொருள்களையோ ஆராய்ந்து, அவற்றிற்கு அடிப்படையாக இருந்து, அவற்றை விளக்கவல்ல நியதியைக் கண்டுபிடிக்கிறது. தொகுப்புமுறை தரும் நியதியை வைத்துப் புதுப்பொருள்களின் அல்லது நிகழ்ச்சிகளின் தன்மையை அறிவது பகுப்பு முறை. ஆகவே இரண்டு முறைகளும் தொடர்புடையன. இரு முறைகளும் பன்மையில் ஒருமையை அல்லது வேற்றுமையில் ஒற்றுமையைக் கண்டறிய உதவுகின்றன.

இந்தியத் தர்க்க நூல்கள் அனுமானத்தைத் தன்பொருட்டனுமானம் (சுவார்த்த அனுமானம்) என்-