பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/576

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இசைத் தமிழ்

527

இசைத் தமிழ்

கைசிகமாகிய தேவாரவர்த்தனீ என்றும் முறையே தக்க இராகத்திற்கும் கௌசிகத்கிற்கும் இவ்வாசிரியர் கூறும் இலக்கணம் இதனை வலியுறுத்தும்.

திருவாதவூரடிகள் அருளிய திருவாசகத்துள் வரும் திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, திருவம்மானை, திருப்பொன்னூசல், திருப்பூவல்லி, திருக்கோத்தும்பி முதலியன முத்தமிழ்க்கும் இலக்கியமாகத் திகழ்கின்றன. கொங்குவேள் செய்த உதயணன் கதையாகிய பெருங்கதையும், திருத்தக்க தேவர் பாடிய சீவகசிந்தாமணியும், சொல் வளமிக்க கல்லாடம் என்னும் நூலும் பத்தாம் நூற்றாண்டிலும் பதினோராம் நூற்றாண்டிலும் தமிழ்நாட்டில் வழங்கிய இசைத் தமிழின் இயல்பினை ஒருவாறு புலப்படுத்துவன. சேந்தனார் முதலிய ஒன்பதின்மராற் பாடப்பெற்ற திருவிசைப்பாப் பாடல்கள் தேவாரத்தினை யொத்துப் பண்ணமைக்கப் பெற்றுள்ளன.

பதினோராந் திருமுறையிலமைந்த கோயில் நான்மணிமாலையிலுள்ள சந்தச் செய்யுட்கள் 15ஆம் நூற்றாண்டில் தோன்றி, முருகப்பெருமானை இசைத்தமிழாற் பரவிப் போற்றிய அருணகிரிநாதர் பாடிய திருப்புகழ்ச் சந்தத்திற்கு ஆதாரமாக அமைந்துள்ளன.

பதினோராம் நூற்றாண்டிலே வாழ்ந்த சேக்கிழார் சுவாமிகள் காலத்திலே இசைமரபு அருகியதெனினும், முற்றிலும் மறையவில்லை யென்பது அவ்வாசிரியர் பெரிய புராணத்துட் கூறும் பழந்தமிழிசை நூற்குறிப்புக்களால் தெளிவாகத் தெரிகின்றது. கி.பி. 985 முதல் 1013 வரை சோழநாட்டை ஆட்சிபுரிந்த முதலாம் இராசராச சோழன் தான் கட்டிய தஞ்சைப் பெரிய கோயிலில் தேவாரத் திருப்பதிகம் பாடுதற்கு நாற்பத்தெண்மரும், உடுக்கை வாசித்தற்கும் கொட்டி மத்தளம் வாசித்தற்கும் இருவரும் ஆக ஐம்பதின்மரை நியமித்தான் என்றும், சோழமண்டலத்திலுள்ள தளிச்சேரிப் பெண்களாகிய நடனமாதர் நானூற்றுவரும், இசைபாடுகிறவர்களும், ஆடலாசிரியர்களும், இசைக் கருவியாளரும் ஆக ஐந்நூற்றுவர்க்கு மேற்பட்ட மக்களை நியமித்து இசைநாடகங்களை வளர்த்தானென்றும் தஞ்சைக் கோயிலிலுள்ள கல்வெட்டுக்களால் அறியலாம்.

அரும்பதவுரையாசிரியர், அடியார்க்கு நல்லார், நச்சினார்க்கினியர் முதலிய உரையாசிரியர்கள் காலத்திலே பண்டை யிசைமரபு ஓரளவிற்கு மறைந்து போயிற்று. குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்னும் ஏழிசைகளையும் ச ரி க ம ப த நி என்னும் எழுத்துக்களாகப் பிறழ வுணர்ந்த நிலை பிற்காலத்தில் ஏற்பட்டு விட்டது. 15, 16 ஆம் நூற்றாண்டுகளிலே இசைத்தமிழ் பிறமொழிக் குறியீடுகளால் முற்றிலும் மறைந்து போயிற்று. 17, 18ஆம் நூற்றாண்டுகளிலே தஞ்சையில் அரசுபுரிந்த நாயக்கரும் மகாராட்டிரரும் இசைவல்லோரை ஆதரித்து இசைக் கலையை வளர்த்தார்கள். எனினும் அவர்கள் தமிழல்லாத மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவராதலின், தமிழ்மொழி வாயிலாக இசை வளர்க்குந் தொண்டினை அவர்கள் மேற்கொள்ளுவதற்கு இயலாதுபோயிற்று. அச்சுதப்ப நாயக்கரிடத்து அமைச்சராயிருந்த கோவிந்த தீட்சதரின் குமாரர் வேங்கடமகியென்பார், கி.பி. 1660 ஆம் ஆண்டளவில் பண்டை யிசைத்தமிழ் மரபினின்றும் வேறுபட்டதோர் இசைமுறையினை வகுத்துச் சதுர்த்தண்டிப்பிரகாசிகை யென்னும் வடமொழி நூலினையாத்தமைத்தார். இவரால் அரிதில் முயன்று வகுக்கப்பட்டவை எழுபத்திரண்டு மேளகர்த்தா இராகங்களாம். இவற்றுள் மிக்க பழமையுடையனவாக வழங்கிவரும் 32 இராகங்களைத்தவிர, ஏனைய 40 இராகங்களும் அனுபவத்திற்குப் பயன்படுவன அல்ல என்று சமீப காலத்திலிருந்த மதுரை நாகசுர வித்துவான் பொன்னுச்சாமிப் பிள்ளையவர்கள் சிலப்பதிகாரம் முதலிய பழந்தமிழ் நூல்களின் ஆதரவு கொண்டு தாம் எழுதிய பூர்வீக சங்கீத உண்மை என்னும் நூலில் விளக்கியுள்ளார்கள். இற்றைக்கு ஏறக்குறைய 250 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அரபத்தநாவலர் இயற்றிய பரதசாத்திரமும், அறம்வளர்த்தான் என்னும் ஆசிரியர் இயற்றிய பரதசங்கிரகமும் ஆகிய இந்நூல்கள் இசைத்தமிழ் மரபினை ஓரளவு விளக்குவனவாயினும், பிற்காலத்தில் வந்து கலந்த வடமொழி இசைமரபினையும் வேற்றுமையின்றி விரவிக் கூறுகின்றன.

தமிழிசை யிலக்கியமாகக் கீர்த்தனைகளை இயற்றிய முத்துத்தாண்டவரும், இராமநாடகக் கீர்த்தனை பாடிய அருணாசலக் கவிராயரும் பிற்கால இசை மரபின் படி பல்லவி, அனுபல்லவி, சரணம் என்ற முறையில் இசைப் பாடல்களை இயற்றித் தமிழ் வளர்த்தவராவர். அருணாசலக் கவிராயர் (1711-1776) அவர்களும் தெலுங்கில் கீர்த்தனைகளைப் பாடிய தியாகையர் (1767-1847) அவர்களும் ஏறக்குறையச் சமகாலத்தில் வாழ்ந்தவரென்பர். ஆனை ஐயா, கவிகுஞ்சர பாரதி, பெரிய புராணக் கீர்த்தனை கந்தபுராணக் கீர்த்தனை முதலியவற்றின் ஆசிரியராகிய இராமசாமி சிவன்,நந்தனார் சரித்திரக் கீர்த்தனை பாடிய கோபாலகிருஷ்ண பாரதியார், சர்வசமய சமரசக் கீர்த்தனை பாடிய மாயூரம் வேதநாயகம்பிள்ளை, தமிழ் மணங் கமழக் கீர்த்தனைகளும் நாமாவளிகளும் பாடிய இராமலிங்க அடிகள், காவடிச்சிந்து பாடிய அண்ணாமலை ரெட்டியார், கீர்த்தனைகள் பாடிய மாரிமுத்தாப் பிள்ளை முதலியோர் 19-ஆம் நூற்றாண்டினை யடுத்து இசைத் தமிழ்ப் பாடல்களை இயற்றி இசை வளர்த்த பெரியோராவர்.

இனி இயற்றமிழிலக்கியத்திலே விருந்தின் வகையாய்ச் சிறு நூல்களெனக் கருதப்பெறும் குறவஞ்சியும் பள்ளும் இசையை வளர்க்கத் துணைபுரிந்தன. உழத்திப்பாட்டாகிய பள்ளு, நாட்டுப்பாடல் வகையிற் சேர்ந்ததாயினும் இலக்கியச் சுவையும் பொருந்தியது.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலே தஞ்சையில் வாழ்ந்த செந்தமிழ்ச் செல்வரான ஆபிரகாம் பண்டிதரவர்கள் தமக்குள்ள தமிழார்வத்தாலும், இயலிசை யாராய்ச்சி பற்றிய நுண்ணறிவினாலும் பழந்தமிழ் நூல்களையும் இக்காலத்து வழங்கும் இசை மரபினையும் ஒப்புநோக்கி ஆராய்ந்து எழுதிய கருணாமிருதசாகரம் என்னும் இசைத் தமிழ் நூலானது இசைத் தமிழாராய்ச்சிக்குப் பெரிதும் பயன்படுவதாகும்.

இசைத் தமிழ் ஆராய்ச்சி: சிலப்பதிகாரத்தில் குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என ஏழிசைகளும் குறிக்கப்பட்டுள்ளன. இவை முறையே ஷட்ஜம், ரிஷபம், காந்தாரம், மத்திமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் என இக் காலத்தில் வழங்கும் முறையில் அமைந்தன எனப் பின்வந்த அறிஞர் பலரும் கருதி வந்தார்கள். இக்கருத்துத் தவறான தென்பதனை அருள்மிகு விபுலானந்த அடிகளாரால் இயற்றப்பெற்றுக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தாரால் 1947-ல் வெளியிடப்பெற்ற யாழ்நூல் என்னும் இசைத் தமிழ் நூலால் நன்குணரலாம்.

இளங்கோவடிகள் காலத்தில் வழங்கிய சகோட யாழில் உழை முதல் கைக்கிளை யீறாகப் பதினான்கு நரம்புகள் கட்டப்பட்டிருந்தன. அவற்றுள் முதல் நான்கும் மெலிவுத்தானத்திலும் (மந்தரஸ்தாயியிலும்),