பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/606

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இதயம்‌

555

இதயம்‌

வரும். அதற்கு இரத்தம் மிகுதியாகச் சில இடங்களுக்குச் செல்லவேண்டும். ஆகையால் அச்சமயத்திலும் இதயம் படபடவென்று அடிக்கும்.

இத்தகைய வேளைகளில் விசேடமாகத் தேவைப்படுவது அளவுக்கு மிஞ்சிவிடாதிருக்குமானால் இதயம் துரிதமாக வேலைசெய்து உதவும். அதற்குக் கேடு ஒன்றும் நேராது. இவ்வாறு விரைவாக வேலைசெய்யும்போது இதயத்தின் துடிப்பு ஒரு நிமிஷத்தில் 72க்கும் அதிகமாயிருக்கும்.

நாம் வேலை செய்யாமல் படுத்து ஓய்வுகொண்டால் அப்போது இதயம் மெதுவாகவே வேலைசெய்யும். ஓய்வினால் ஒரு நாளில் 20 ஆயிரம் துடிப்புக்கள் குறையும் என்று கூறுவர்.

ஒருவருடைய இதயம் எந்த நிலைமையிலிருக்கிறது என்பதை அறியப் பலவித சோதனைகள் செய்வர். முதலில் நெஞ்சை அழுத்தி இதயத்தின் முனையைத் தொட்டுப் பார்ப்பர். முனையின் கிடக்கையைக்கொண்டு அதன் பருமனை அறிந்துகொள்வர். பிறகு இதயம் இருக்குமிடத்திற்கு நேராக நெஞ்சில் தட்டிப்பார்த்து இதயத்தின் உருவத்தை அறிந்துகொள்வர். அதன்பின் மார்பு சோதனி (Stethoscope) என்னும் கருவியை நெஞ்சின் மீது வைத்து இதயத்தின் துடிப்புச் சத்தங்களைக் கேட்பர். ஒவ்வொரு தடவை துடிக்கும்போதும் இதயத்தில் இரண்டு ஒலிகள் உண்டாகின்றன. தாழ்ந்த சுருதியான நீண்ட ஒலி லப் (Lubb) என்று ஒலிக்கும்; உயர்ந்த சுருதியான குறுகிய ஒலி டப் (Dup) என்று ஒலிக்கும். முதல் ஒலி கீழறைகள் சுருங்கும்போது கீழறை, மேலறைகளுக்கு நடுவிலிருக்கும் கதவுகள் மூடுவதாலும், இரண்டாவது ஒலி கீழறைச் சுருக்கம் முடிந்து அது விரியத்தொடங்கும்போது பெருந்தமனி வாயிலிருக்கும் பிறைவடிவக் கதவுகள் மூடுவதாலும் உண்டாகின்றன. இந்த ஒலிகளைக்கேட்டு இதயத்தின் நிலைமையை உணர்ந்துகொள்வர். சில வேளைகளில் மருத்துவர் எக்ஸ்கதிர்க் கருவிகளைக்கொண்டு இதயத்தைப் படம் பிடித்தும், அதன் நிழலைத் திரையில் விழச் செய்து பார்த்தும், அதன்பருமனையும் உருவத்தையும் துடிப்பையும் அறிவர்.

உடம்பில் மற்ற உறுப்புக்களைப் போலவே இதயமும் காயமுறுவதுண்டு. ஆயினும் அது நெஞ்சின் எலும்புக் கூட்டினுள் இருப்பதால் அக்கூடு அதற்குப் பாதுகாப்பு அளிக்கின்றது. நுரையீரல்கள் முன் பக்கம் தவிர மற்றப் பக்கங்களில் அணைகள்போலிருந்து பாதுகாக்கின்றன. ஆனால் அடி பலமாக விழுமானால் இதயத் தசைகளிலிருந்து இரத்தம் பெருகும். மிகுதியான இரத்தப் பெருக்கினால் பெருங்கேடு விளையும். கத்தியாலோ, குண்டாலோ உண்டாகும் காயம் உயிருக்கே அபாயம் தரும். அப்பொழுது வைத்தியர்கள் இரணசிகிச்சை செய்வர்.

கீல்வாத சுரமானது (Rheumatic fever) இதயத்தின் தசையைப் பலவீனப்படுத்தும், அல்லது கதவுகளை உருமாற்றிச் சரியாக அடைக்க வொட்டாதபடி செய்துவிடும். அப்பொழுது இதயம் அதிக வேலைசெய்ய வேண்டிவரும். அதனால் நாளடைவில் பலவீனமடையும்.

நிமோனியா, தொண்டையடைப்பான் (Diphheria)போன்ற தொற்றுநோய்கள் உண்டாகும்போது, நோய் நுண்மங்கள் உண்டாக்கும் நஞ்சு இதயத்தின் தசைகளைப் பலவீனப்படுத்தும். ஆனால், அந்த நோய்கள் குணமடையும்போது இதய பலவீனமும் நீங்கும்.

இரத்த அழுத்தமும், கிரந்திபோன்ற நோய்களும் இதயத்தைத் தாக்கலாம். இதய நோய் உண்டாய் விட்டது என்று தெரிந்தால் மக்கள் அச்சம் அடைகிறார்கள். பொதுவாக அப்படி அஞ்சவேண்டியதில்லை. நோயைக் குணப்படுத்தியோ, அது வராமல் தடுத்தோ நீண்ட காலம் வாழலாம்.

இதயம் நன்றாக இருப்பதற்குச் சுகாதார விதிகளின்படி நடப்பதே சிறந்த வழி. டீ. சி.

இதய நோய்கள் : இதயத்திற்கு மற்ற உறுப்புக்களைப் போல் இரத்தம் வேண்டும். இதயத் தசைக்குப் பெருந்தமனியிலிருந்து இரு தமனிகள் இரத்தங் கொண்டு போகின்றன. இவற்றிற்குக் காரனரித் தமனிகள் (Coronary arteries) என்று பெயர். இதயம் திடமாய் வேலை செய்வதற்கு இக் குழாய்கள் கேடுறாமல் இருக்கவேண்டும். சில நோய்களின் காரணமாக இவை நோயுற்று, இதயம் பலவீனமடைகிறது. முக்கியமாக நீரிழிவு நோயினால் இந் நிலை ஏற்படலாம். மேகக் கிரந்தி (Syphilis) நோயினால் பெருந்தமனி பாதிக்கப்படுவதால் அதிலிருந்து பிரியும் காரனரி தமனி அடைபட்டு, இதயத்திற்குப் போதுமான அளவு இரத்தம் போவதில்லை. அதிகமான இரத்த அழுத்தமுள்ளவர்களுக்குக் காரனரி தமனியின் வழியே இரத்தம் போதுமான அளவு போகாமலிருந்து, இதயம் நாளடைவில் வலுவிழந்துவிடும்.

இதயத்தில் இரண்டு விதமான நரம்புகள் உண்டு. அவைகள் பரிவு நரம்பு என்றும், துணைப் பரிவு நரம்பு என்றும் சொல்லப்படும். துணைப்பரிவு இயக்கம் சஞ்சாரி நரம்பின் வழியே இதயத்தை அடைகிறது. இந்த நரம்பை மின்சாரத்தால் இதயம் மெல்ல இயங்கும், அல்லது நின்றுவிடும். சில நரம்புகள் பெருந்தமனியிலிருந்தும் இடது மேலறையிலிருந்தும் மூளையின் முகுளத்தை அடைவதால், அங்கு மின்சாரத்தால் தூண்டினால் இரத்த அழுத்தம் குறையும். அப்பொழுது உடலில் பரவியிருக்கும் இரத்தக் குழாய்கள் அகன்று கொடுக்கும். பரிவு நரம்பின் வழியே மின்சாரத்தால் தூண்டினால், இதயம் வேகமாகச் செல்லும். இதயத்தைச் சுற்றிச் சவ்வு போன்ற ஒரு போர்வை இருக்கிறது. இது இதய உறை எனப்படும். இந்த உறை இதயத்தோடு ஒட்டியிருக்கும். இரத்தக் குழாய்களையும் சற்று மூடியிருக்கும். இதயம் அதிகமாகத் தளர்ந்து விடாமல் இதய உறை அதைக் காக்கிறது.

இதய நோய்களின் குறிகள் : நோயாளிக்கு இதய நோய் இருப்பதைக் கண்டுபிடிக்க, அவர் சொல்வதையெல்லாம் கவனமாகக் கேட்கவேண்டும். அப்படிக் கேட்ட பின்புதான் நோய்க் கூறு தெளிவாகத் தெரியும். உடலைப் பரிசீலனை செய்து, இதய நோயைக் கண்டு பிடிப்பது 100க்கு 25 பாகமே இயலும். வேறு முறைகளில் 20 பாகம் கண்டுபிடிக்க முடியும். ஆனால் நோயாளி சொல்லும் குறைகளிலிருந்து 50 பாகத்திற்கு மேலேயே நோய் எத்தகையது என்று ஊகிக்க முடியும்.

இதய நோயின் முதன்மையான குறி மேல் மூச்சு. நுரையீரலில் நோய் இல்லாத ஒரு நோயாளி நடக்கும் போதோ வேலை செய்யும்போதோ மூச்சு வாங்குகிறது என்று சொன்னால் இதய நோயென்று நிச்சயிக்கவேண்டும். அதாவது ஒருவர் வழக்கமாக ஒரு வேலையைச் செய்யும்போது, இதுகாறும் அதனால் ஒருவிதமான தொந்தரவும் இல்லாமலிருந்தும், இப்பொழுது அதே தொழிலைச் செய்யும்பொழுது மேல் மூச்சு வாங்குகிறது என்றால் இதயத்தினுடைய பலவீனத்தினாலேயே என்று அறிய வேண்டும். காலில் வீக்கம் ஏற்படலாம். இந்த வீக்கம் உலாவிக் கொண்டிருக்கும்போது காலிலே காணும்.