பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/608

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இதயம்

557

இதயம்

தால், உதடுகளிலும் விரல் நகங்களிலும் காணப்படும் கருநிறம் மாறி, நோயாளிகளுக்கு முன்னிலும் அதிகமாக வேலை செய்யும் ஆற்றல் உண்டாகும்.

கீழறை இடைச்சுவர்க் குறை (Inter-ventricular septal defect) மேற்சொன்ன நோய்களில் இருக்குமளவு ஆபத்து இதில் இல்லை. இதனால் ஆயுள் குறைவதில்லை. வேறு ஏதாவது நோய்க்காகப் பரீட்சிக்கும் போது இத்தகைய கேடும் இருப்பது தெரியவரும். பரீட்சை செய்யும்போது இடப்பக்கத்தில் ஐந்தாவது விலா எலும்புக்கு அடியிலும் மார்பெலும்பிலிருந்து இரண்டு அங்குல தூரத்திலும் ஒருவகை ஒலி கேட்கும். இந்த ஒலி இதயம் சுருங்கும்போதெல்லாம் கேட்கும். இதற்குச் சுருக்கமுணுமுணுப்பு (Systolic murmur) என்று பெயர்.

மேலறை இடைச்சுவர்க் குறை (Auricular septal defect) : இதிலும் அதிகமான தொந்தரவு கிடையாது. இந்தக் குறையால் இதய உள்ளுறை கீல்வாத அழற்சி (Rheumatic endocarditis) ஏற்படலாம். இந்த நோயினால் பெண்களின் ஆயுள் குறைவதில்லை. ஆனால் பிரசவ காலங்களில் இதயம் பலவீனமடைவதால் இந்நோயுள்ள பெண்களுக்கு மூன்று அல்லது நான்கு பிரசவத்திற்குமேல் உண்டாகாமல் இருப்பது நலம். இந்த நோயினால் வலது கீழறை இயற்கையளவுக்கு அதிகமாக வேலை செய்ய நேர்வதால், அது நாளடைவில் வலுக் குறைந்து மரணம் ஏற்படலாம்.

பிறந்தபின் தோன்றும் இதய நோய்கள் கீல்வாத சுரம், மேகக்கிரந்தி, டிப்தீரியா, கபவாத சுரம், டைபாயிடு முதலிய தொற்று நோய்களினால் விளைபவை. கீல்வாத சுரமே முக்கியமாக இதய நோய்களுக்குக் காரணமாகும். கீல்வாத சுரத்தினால் இதய உறை, இதயத் தசை, இதயக் கதவுகள் ஆகியவை பாதிக்கப்படுகின்றன. இதய உறை கேடுறுவதால் மார்பு வலி தோன்றும் ; இதயத்தைச் சுற்றிக் கெட்ட நீர் சுரந்து சேரும். இதனால் இதயம் வலிவிழக்கும். தொடக்க நிலையில் இதயத்தைப் பரிசீலனை செய்தால் தோல் உரிப்பது போன்ற ஒலி கேட்கும்.

இதயத் தசைக் கீல்வாத அழற்சி (Rheumatic Myocarditis): இதில் கீல்வாத சுரத்தினால் இதயத்தசைகளில் கீல்வாத நுண்மங்கள் தங்கி இதயத்தசைக்கு வலுக்குறைவு ஏற்படுகிறது. இதனால் நோயாளி மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுகிறது. எல்லா நோய்களைக் காட்டிலும் இந்த நோயாலேயே அதிகமான கேடு ஏற்படுகிறது. இதைத் தடுப்பதற்கு முக்கியமாகக் கீல்வாத சுரம் கண்டவுடன் அதை விரைவில் நன்றாகக் குணப்படுத்த வேண்டும். நோயின் வேகம் முழுவதும் அடங்கும் வரை நோயாளியைப் படுக்கையிலேயே வைத்திருக்கவேண்டும். இதயக் கீல்வாத அழற்சி கண்ட பிறகு சிகிச்சை அவ்வளவு பயன் தராது. ஏனென்றால் நோய் நுண்மங்கள் தசைகளை அழித்துவிடுகின்றன. இதனால் நோயாளிக்கு வேலை செய்ய முடியாமல் போய்விடுகிறது.

கீல்வாத சுரத்தினால் இதயக் கதவுகளில் நோய் காணலாம். இதயத்தில் நான்கு முக்கியமான கதவுகள் இருக்கின்றன. அவற்றில் ஈரிதழ்க் கதவுகளும், பெருந்தமனிக் கதவுகளும் நோயினால் பாதிக்கப்படுகின்றன. கதவுகளை மட்டும் நோய் பாதித்தால் அதிகமாகக் கேடு உண்டாவதில்லை. ஆனால் தசைகளைப் பாதிக்கும் போது பலவீனம் ஏற்பட்டு, நோயும் அதிகமாகக் காண்கிறது.

மேகக்கிரந்தி நோயினால் பெருந்தமனி பாதிக்கப்படுகிறது. இந் நோய் நுண்மங்கள் பெருந்தமனியிலிருக்கும் ரப்பர் போன்ற திசுவை அழித்து விடுகின்றன. இதனால் இத்தமனி உருமாறி அகன்று விடுகிறது. இந்த உருமாற்றம் தமனியின் முதற் பாகத்திலும், இரண்டாவது பாகத்திலும், மூன்றாவது பாகத்திலும் காணப்படலாம். முதல் பாகத்தில் காணப்பட்டால் பரிசீலனை செய்து கண்டுபிடிக்க முடியும். இரண்டாவது பாகத்தில் ஏற்பட்டால் நோயாளியின் குறைகளிலிருந்து கண்டுபிடிக்க முடியும். மூன்றாவது பாகத்தில் இருந்தால் நோயாளிக்கு ஒருவிதமான தொந்தரவும் இல்லாமல் இருக்கலாம். எக்ஸ்-கதிர்ப் படம் பிடித்துத்தான் இது இருப்பதைத் தெரிந்துகொள்ள முடியும். மேகக்கிரந்தி, தொடக்க நிலையில் உள்ளபோதே சரியான சிகிச்சை செய்தால் நோயை முற்றிலும் குணப்படுத்தலாம். பெருந்தமனியில் நோய் கண்டபிறகு எவ்வளவு சிரத்தையாக வைத்தியம் செய்தாலும் அதிலிருக்கும் ரப்பரைப் போன்ற திசுவுக்குக் கேடு நேராமல் தடுக்க இயலாது. ஆனால் சிகிச்சையின் பலனாக வலி குறையலாம். அப்போது போதுமான அளவு பெனிசிலின் கொடுத்து, அந்த நோயை ஓரளவு கட்டுப்படுத்தி விடுகிறார்கள். நாள் ஒன்றுக்கு ஐந்து இலட்சம் அலகு பெனிசிலின் விகிதம் பதினான்கு நாளுக்குக் கொடுக்கவேண்டும். பிறகு அதே அளவு பெனிசிலினை வாரம் ஒரு முறை கொடுத்து, மற்றும் இன்னொரு முறை பதினைந்து நாள், நாளொன்றுக்கு ஐந்து இலட்சம் அலகுகள் பெனிசிலின் கொடுக்க வேண்டும். இரத்தப் பரிசோதனை செய்து, இரத்தம் சுத்தமாகும்வரை பெனிசிலின் கொடுத்து வரவேண்டும்.

வேறு வகைத்தொற்று நோய்களாலும் இதயத்திற்குக் கேடு ஏற்படலாம். இவைகளிலும்கூட நோயைச் சரியாகக் கவனித்து வந்து, நோயின் வேகம் அடங்கும்வரை படுக்கையிலேயே வைத்திருந்தால் இதயத்திற்குக் கேடு ஏற்படாமல் நலன் உண்டாகலாம். தொற்று நோய் இருக்கும்போது நடப்பதாலும், உடற்பயிற்சி செய்வதாலும், போதுமான அளவு ஓய்வு இல்லாமல் இருப்பதாலும் இதயத்திற்கு வேலை அதிகமாகி இதயம் கேடுறுகிறது. முக்கியமாக டிப்தீரியா கண்டவர்கள், நோய் கண்டு குணமான பிறகு வெகு நாள்வரை ஓய்வெடுக்க வேண்டும். இந்த நோயினால் நச்சு நீர் சுரந்து, இதயத் தசைகள் மிகவும் பலவீனப்பட்டு விடுகின்றன. ரெ.சு.

இதய ரணசிகிச்சை : இதயம் பற்றிய ரணசிகிச்சை முறை மிகுந்தமுன்னேற்றமடைந்திருப்பதால், இதயநோயாளிகள் துன்புற்று இறவாவண்ணம் அவர்களுக்கு ஓரளவு உதவி அளிக்கக்கூடிய நிலைமை ஏற்பட்டுளது. இதயம் உள்ள நிலைமையை அறிவதற்குச் சிறந்த முறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இதய ரணசிகிச்சை நான்கு வகையான சந்தர்ப்பங்களில் பயன்பட்டு வருகின்றது: 1. போர்க்களத்தில் இதயத்தினுள் சென்றுவிட்ட குண்டுகளை எடுத்துக் குணப்படுத்துகிறார்கள். 2. இதயத்திலுள்ள கதவுத் தொளைகள் குறுகிவிட்டால், அதை நீக்க இதுவரை மருத்துவச் சிகிச்சை மட்டுமே செய்யப்பட்டுவந்தது. இப்போது ரணசிகிச்சையால் குணப்படுத்தத் தொடங்கியுள்ளனர். விரலை உள்ளே செலுத்தி விரிக்கலாம். அல்லது கத்தியை நுழைத்துக் கதவை நறுக்கலாம். ஆயினும் இப்போது ஆலன் என்பவரும் கிரஹாம் என்பவரும் கண்டுபிடித்துள்ள 'இதயங்காட்டி' (Cardioscope) வாயிலாகக் கண்ணால் பார்த்துக்கொண்டே இந்தச் சிகிச்சையைச் செய்யலாம். சில குழந்தைகளினுடைய உடம்பில் நுரையீரலுக்குச்-