பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/806

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தோனீசியா

741

இந்தோனீசியா

உறுப்பு நாடாகச் சேர்ந்தது. இந்தோனீசியாவின் பத்து மாகாணங்கள் கிழக்கு, மத்திய, மேற்கு ஜாவா; வடமத்திய, தென்சுமாத்ரா; போர்னியோ; செலிபீஸ்; மோலக்கஸ்; சிறுசண்டாத் தீவுகள் என்பவைகளாம். பஹாசா இந்தோனீசியா என்பதே இக்குடியரசின் நாட்டு மொழியாகும்.

இங்குள்ள முக்கியமான அரசியல் கட்சிகள் முஸ்லிம் கட்சி, தேசியக் கட்சி என்பவை. சோஷலிஸ்டுக் கட்சியொன்றும் கம்யூனிஸ்டுக் கட்சியொன்றும் இங்கு உள்ளன. இவற்றிற்கு முக்கியமான கட்சிகளுக்கு உள்ள அளவு ஆதரவு இல்லை. ஆயினும் தொழிலாளிகள் வேலைநிறுத்தம் செய்யலாகாது என்று 1951-ல் ஏற்பட்ட ஒரு சட்டத்தால் அரசாங்கத்திற்கு விரோதமாகச் சட்டசபையில் பலர் சேர்ந்து கொள்ளவே, பழைய அரசாங்கம் மறைந்து, சுகிமன் என்பவர் பிரதம மந்திரியாகி, ஒரு புது அரசாங்கத்தை நிறுவினார். 1952-ல் டாக்டர் அஹமிது சுக்கர்னோ என்பவர் ஜனாதிபதி, டாக்டர் வாலோபோபி பிரதம மந்திரி, சட்டமியற்றும் அதிகாரம் பிரதிநிதிகள் சபைக்குரியது. இக்குடியரசின் தலைவருக்கு ஜனாதிபதி என்பது பெயர். ஜனாதிபதி ராணுவத்தின் தலைமைச் சேனாதிபதி. இவருடைய மந்திரி சபைத்தலைவர் பிரதம மந்திரியெனப்படுவார். *

கலை: ஆதியில் இந்தோனீசியாவில் வாழ்ந்த மக்கள் நாகரிகமற்றவர்களல்லர். ஆயினும் அவர்களுடைய கட்டடங்களும் சிற்பங்களும் கலைத் திறமையுடன் ஆக்கப்படவில்லை. கிறிஸ்தவ சகாப்தத்தின் தொடக்கத்தில் இந்திய மக்கள் அங்குச் சென்ற பின்னரே கலையும் கலை வளர்ச்சியும் தோன்றலாயின. இந்தியர்கள் பண்டைக் காலத்திலேயே அங்குச் சென்றிருந்த போதிலும், அங்குள்ளவர்களுடைய பழைய நூல்களில் இந்தியாவைப்பற்றிய குறிப்பு எதுவுமில்லை. இந்திய நூல்களிலும் வான்மீகி இராமாயணத்தில் மட்டும் ஒரே ஒரு தடவை ஜாவாவின் பெயர் காணப்படுகிறது.

ஆனால் அங்குக் கி. பி. 414-ல் சென்ற சீன யாத்திரிகர் பாஹியானும் 671-ல் சென்ற இதிசிங்கும் அங்கு இந்து நாகரிகம் காணப்பட்டதாக எழுதியுளர். அங்குள்ள கல்வெட்டுக்கள் இவர்கள் கூற்றை வலியுறுத்துகின்றன. அங்கு வர்மன் என்று முடியும் பெயர்களுள்ள அரசர் வாழ்ந்திருந்ததாக அவைகளிலிருந்து அறிகிறோம். அந்தக் கல்வெட்டுக்கள் சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்டுள்ளன.

இவ்வாறு இந்து நாகரிகத்தை இந்தோனீசியாவில் பரப்பியவர்கள் தென்னிந்தியர்களே என்பதற்குப் பல சான்றுகள் உண்டு. பல்லவர் காலத்துத் தமிழ்நாட்டுக் கல்வெட்டுக்களில் காணப்படும் கிரந்த எழுத்தே இந்தோனீசியக் கல்வெட்டுக்களிலும் காணப்படுகிறது. பல்லவ மன்னருடைய பெயர்களும் வர்மன் என்று முடியும். இந்தோனீசியக் கல்வெட்டுக்கள் குறிப்பிடும் சகம் என்னும் சாலிவாகன சகாப்தமே தென்னிந்தியாவில் வழங்கிவந்ததாகும். வட இந்தியாவில் வழங்கி வந்தது விக்கிரம சகாப்தம். ஒரு கல்வெட்டு குஞ்சரகுஞ்சம் என்னும் ஊரைச் சேர்ந்த அரச வமிசத்தானான சஞ்சயன் இலிங்கப் பிரதிட்டை செய்ததாகக் கூறுகிறது. வராகமிகிரரால் பிருகத் சங்கிதையில் குஞ்சர என்று குறிக்கப்பட்டுள்ள தென்னிந்திய ஊர் அதுவே என்று கருதப் படுகிறது. மற்றொரு கல்வெட்டு அகத்தியர் உருவம் பிரதிட்டை செய்யப்பெற்றதாகக் கூறுகிறது. அகத்தியர் வழிபாடு மிகுந்தது தென் இந்தியாவிலேயே. இவ்வாறு இந்தோனீசியாவுக்குத் தென் இந்தியாவிலிருந்து சென்றவை இந்து மதமும் நாகரிகமுமாகும்.

இந்தோனீசியாவில் காணப்படும் பௌத்த நாகரிகம் வடநாட்டிலிருந்து சென்றது என்பதற்கு மிகப் பழைய பௌத்தக் கல்வெட்டுக்கள் வட இந்திய நாகரி எழுத்தில் எழுதப்பட்டிருப்பது போதிய சான்றாகும்.

இந்து மதக் கோயில்கள் பெரும்பாலும் காணப்படுவது 6.500 அடி உயரமுள்ள தயாங் (Dieng) பீடபூமியிலாகும். அங்குள்ள ஐந்து கோயில்களும் மாமல்லபுரத்திலுள்ள கோயில்களைப் போலப் பஞ்ச பாண்டவர் பெயரால் காணப்படுகின்றன. ஆயினும் இவை அனைத்தும் சிவ வழிபாடுடையனவே. இங்குச் சிவனுடைய உருவம் தாடியும் தொப்பையும் உடைய பிராமணத் துறவி, செபமாலையும் கமண்டலமும் வைத்திருப்பது போல் செய்யப்பட்டிருக்கிறது. பௌத்தக் கோவில்கள் எழுந்த ஒன்பதாவது நூற்றாண்டிலேயே இந்த இந்துக் கோயில்கள் தோன்றினவாம். இக் கோயில்கள் திராவிடச் சிற்ப முறையைத் தழுவியவையாகும். இந்தியாவிலிருந்து சென்ற சிற்பிகள் இந்தோனீசியச் சிற்பிகட்குக் கற்றுக் கொடுத்தனர். மாணவர்கள் கலை நுட்பத்தில் ஆசிரியர்களைவிடச் சிறந்தவர்களாகக் காணப்படுகின்றனர்.

மரவேலைப்பாடு (கருடவாகனம்)
உதவி: இந்தோனீசியாச் செய்தி இலாகா, புது டெல்லி.

இந்தியாவில் எந்தக் கோயிலிலும் செதுக்கப்படாத முறையில் இந்தோனீசியக் கோயில்களில் இராமாயணக் கதை செதுக்கப்பட்டிருக்கிறது. விஜயநகரத்திலுள்ள ஹஜாரா ராமசாமிக் கோயிலில் செதுக்கப்பட்டிருப்பவற்றை மிகச் சிறந்தனவாகச் சொல்வதுண்டு. ஆனால், இவற்றைவிட ஆயிரம் மடங்கு சிறந்தவை ஜாவாவிலுள்ள பிரம்பானன் கோயிலில் உள்ளவை.