பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இப்பிகாக்குவானா

3

இம்பீரியல் பாங்கு, இந்திய

சமூக அமைப்பும் பண்பாடும் - மற்றப் போர்னியோ சாதியார்களுடையவை போலவே காணப்படும்.

எம். ஜே. மெ.

இப்பிகாக்குவானா சிறு புதர். தரையின்கீழ் வழவழப்பான மட்டத்தண்டுக் கிழங்கும் வேர்களும் இருக்கும். இளைய வேர் வழவழப்பாகவும் வெண்மையாகவும் இருக்கும். முதிர்ந்தால் இதன் பட்டையானது

இப்பிகாக்குவானா

தடித்துப் பழுப்பு நிறமாகும். அதன் மேல் வளையங்கள் உண்டாகும். முதிர்ந்த வேரேமூலிகை. தண்டு பூமிக்குமேலே ஓரடி உயரம் வரையில் வளரும். இலைகள் சிலவே. அவை எதிரொழுங்கானவை. பூக்கள் சிறியவை; வெண்மை நிறம்; புனல் வடிவம். செங்கறுப்பான சதைக்கனி கொத்தாக உண்டாகும். இது பிரேசில் நாட்டுச்செடி; மலேயா, மேற்கு வங்காளத்து முங்பூ, நீலகிரி முதலிய இடங்களிலும் பயிராகிறது. சின்கோனாபோன்ற மரங்களின் நிழவிலே இதன் வேரை நறுக்கி நட்டுப் பயிர்

செய்வர். இதில் 2-3 சதவீதம் எமெட்டின், செவேலின் சைக்கோட்ரின் என்னும் ஆல்கலாய்டுகள் உண்டு. இவை பெரும்பாலும் பட்டையில் உள்ளன. இது கப நிவாரணி; துவர் மருந்து; வமன மருந்து. அமீபா சீதபேதிக்கு எமெட்டின் ஹைட்ரோகுளோரைடை ஊசி குத்தவும், எமெட்டின் பிஸ்மத்அயொடின் என்னும் இரண்டையும் உட்கொள்ளவும் பயன்படுத்துகிறார்கள். சிறிதளவு கொடுத்தால் இரைப்பைக்குப் பலத்தைத் தருவதாகும்; பசியுண்டாகும்; உணவு நன்றாகச் செரிக்கும். குடும்பம் : ரூபியேசீ ; இனம்: செபேலிஸ் இப்பிகாக்குவானா (Cephaelis Ipecacuanha).

கே.எஸ்.ஸ்ரீ.

இபிஜீனியா கிரேக்கப் புராணத்தில் ஆகமெம்னனுக்கும் கிளிட்டெம்நெஸ்டிராவுக்கும் பிறந்தவள். ஆர்ட்டிமிஸ் தேவதையின் கோபத்துக்குத் தந்தை ஆளானமையால், மகளை அத் தேவதைக்குப் பலியிடப்போகும்போது, தேவதை இபிஜீனியாவிடம் இரக்கம் கொண்டு அவளைத் தூக்கிக்கொண்டு போயிற்று. இபிஜீனியா அத் தேவதைக்குப் பூசை புரிபவளாய் இருந்து அயல்நாட்டவரைப் பலியிட்டு வந்தாள். இவளுடைய உடன்பிறந்தான் ஆரஸ்டீஸ் இவளைத் தேடிவந்த பொழுது, அவனையும் பலியிடப்போனாள். அப்போது உடன் பிறந்தான் என்று அறியவே இருவரும் ஆட்டிக்காவுக்குத் தப்பியோடினர். இபிஜீனியாவைப் பற்றி யுரிப்பிடீஸ், ரசீன், கதே, ஷில்லர் ஆகிய புகழ்பெற்ற ஐரோப்பியக் கவிஞர்கள் நாடகங்கள் இயற்றியுளர்.

இபுகாவு சாதியினர் (Ifugao) பிலிப்பீன் தீவுகளின் மலைப்பாங்கான இடங்களில் வாழ்கின்றனர். 1938-ல் இவர்கள் தொகை 80,000 என்று தெரிகின்றது. இவர்கள் சிறிய குன்றுகளின் மேலுள்ள கிராமங்களில் வசிக்கின்றனர். ஒவ்வொரு கிராமத்திலும் எட்டு முதல் பன்னிரண்டு வரை வீடுகள் இருக்கும். இபுகாவு என்ற பதத்திற்கு மக்கள் என்பதே பொருள். ஒரே பிரதேசத்தில் வாழும் மக்கள் பொதுவாக ஒரே மொழியைப் பேசுகின்றனர். இவர்களுக் கலப்பு மணம் நடைபெறும் எனப் புலப்படுகிறது. ஒரு பிரதேசத்தைச் சுற்றி உள்ள மற்றப் பிரதேசங்களுடன் போக்குவரத்து அதிகமாக இல்லை. மலைச் சரிவுகளில் நெல்லை அடுக்குநிலைச் சாகுபடி செய்கிறார்கள். இபுகாவுகள் சிறந்த உழைப்பாளிகள். இவர்களுக்குள் பல சிறிய பிரிவுகள் உள்ளன. இவர்களுடைய மேலான சொத்து நெல் வயலே ஆகும். நெல் வயல்களை நிரம்ப உடையவன் மிகுந்த பொருள் படைத்தவனாகக் கருதப்படுகிறான். இவர்கள் பயிர்த் தொழிலில் திறமை வாய்ந்தவர்கள், பன்றி, கோழி முதலான வீட்டுப் பிராணிகளும், வேட்டையாடும் கருவிகளும், படுகுழிகளும் இவர்களுக்குச் செல்வாக்களிக்கும் சொத்துக்களாகும். பயிர் செய்வதில் இரும்புக்கருவிகள் ஒன்றும் பயன்படுத்துவதில்லை.

தமக்கு அடுத்த உறவினர்களின் சம்மதமில்லாமல் தாம் அடைந்த தலைமுறைச் சொத்தை ஒருவரும் செலவிட முடியாது; ஒவ்வோர் உறவினர் கூட்டமும் பல சிறிய சிறிய கூட்டங்களாக உள்ளன. இவைகள் பணக்காரனான ஓர் உறவினன் மேற்பார்வையிலாவது ஆதரலிலாவது அமைந்துள்ளன. ஒரு மணம் நடந்தால் பிறகு இரு சம்பந்திகளுடைய உறவுக் கூட்டங்களும் நட்புள்ளவையாகக் கருதப்படுகின்றன. மத்திய இபுகாவில் குழைந்தை மணம் மிக்க செல்வம் படைத்த குடும்பங்களில் நடைபெறுகிறது. அகமாங்கு (Agamang) என்பது கலியாணம் ஆகாதவர்கள் வசிக்கும் இடமாகும். சிறுவர்கள் வசிக்கும் அகமாங்கில் சிறுவர்களும், மணமாகாத ஆண்களும் மட்டுமே வசிக்கிறார்கள்; பெண்களுக்குத் தனி அகமாங்கு உண்டு. இவ்விடத்தில் சிறிய பெண்கள், கைம்பெண்கள், கிழவிகள் வசிப்பார்கள்; பெரிய பெண்கள் தங்கள் காதலர்களுடன் வசிக்கின்றனர். இபுகாவுப் பெண்கள் மிகவும் கடினமான வேலை செய்கின்றனர். பெண் பயிர் நடுவாள்; அறுவடை செய்வாள். வீடு கட்டுவதிலும் வேலிகள் அமைப்பதிலும் ஆண் ஈடுபடுகிறான். இந்தச் சாதியார் பல தெய்வங்களையும் மூதாதையர்களின் ஆவிகளையும் வணங்குகின்றனர். பல தலைமுறைகளுக்கு முன்னிருந்த மூதாதையர்களின் பெயர்களை ஓர் இபுகாவு கூற முடியும். இவர்களுள் பணக்காரர்கள் தெய்வீகமான விழாக்களைச் சிறிதளவு நடத்த வேண்டும். சமூகத்தின் நிலைமையை நிலைநாட்ட இவ்விழாக்கள் உதவுவதாகக் கருதப்படுகின்றன. இவ்விழாக்களில் பல விலங்குகளைப் பலியிடுகின்றனர். இபுகாவுகள் இம்மாதிரி விழாக்களை ஹொங்கா (Honga) என்றும், உய்யாவுயி (Uyawve) என்றும் கூறுகின்றனர். இவர்கள் பலிபீடங்களை உபயோகிப்பதில்லை.

எம்.எஸ்.கோ.

இம்பால் அஸ்ஸாம் இராச்சியத்திலுள்ள மணிப்பூர் சிற்றரசின் தலைநகரம். இது பல சிற்றூர்களின் தொகுதியே. மக் : 1.31,300 (1951). இரண்டாவது உலக யுத்தத்தின்போது பர்மிய யுத்தத்தில் மிகவும் முக்கியமான போர் இங்கு நடைபெற்றது.

இம்பீரியல் பாங்கு, இந்திய : 1921க்கு முன் வங்காளம், பம்பாய், சென்னை ஆகிய மூன்று இடங்களிலுமிருந்த மாகாணப் பாங்குகளை இணைத்து, அவ்வாண்டில் இம்பீரியல் பாங்கு நிறுவப்பட்டது. இந்தப் பாங்கு இங்கிலாந்து பாங்கைப்போலவே தனிப்பட்டவர்கள் நடத்தும் பாங்காகும். ரிசர்வ் பாங்கு நிறுவப்படும் முன்பு இந்தப் பாங்கு சில விஷயங்களில் இராச்சியப் பாங்காகவும் இருந்து வந்தது. சென்னை, பம்பாய், கல்கத்தா ஆகிய மூன்றிடங்களிலும் நிறுவப்பட்ட போர்டுகளும், மத்திய போர்டு ஒன்றும் இந்தப் பாங்கின் நிருவாகத்தை மேற்பார்த்து வந்தன.

இந்திய அரசாங்கத்தாரின் செக்யூரிட்டிகளில் தங்கள் பணத்தைப் போட்டு வைப்பதும், இம்மாதிரியான