பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இயற்கையுருவவியல்

31

இயற்றி நிலை

வரையில் இருக்கும். மற்றப் பிராணிகளுக்கு முதலில் அப்படியிருந்து பிறகு அவை வளர வளர அது மாறிவிடும். ஆதலால் உயிர்களை நோட்டொகார்டு உள்ளவை (Chordata), நோட்டொகார்டு அல்லது முதுகெலும்பு இல்லாதவை (Invertebrata) என இரு பிரிவுகளாகப் பிரிக்கிறார்கள்.

நோட்டொகார்டு தண்டின் நார்களால் ஆகிய போர்வையில் காலக்கிரமத்தில் பக்கத்திலிருக்கும் சில உயிரணுக்கள் நுழைந்து குருத்தெலும்பை (Cartilage) உண்டாக்குகின்றன. நோட்டோகார்டு போர்வை குருத்தெலும்புத் தண்டாக மாறுகிறது. பின்னர், இந்தக் குருத்தெலும்புத் தண்டு இடைவிட்டு இடைவிட்டு எலும்பாக மாறிப் பல முள்ளெலும்புகளாலான எலும்புத்தண்டாக மாறுகிறது. போர்வை எலும்பாக மாறுவதில் குமிழி நிறைந்த உயிரணுக்கள் நெருக்கப்பட்டுச் சிறிதளவாக ஆகிவிடும், அல்லது ஒன்றுமே இல்லாது மறைந்துபேகும்.

எல்லா உயிர்களும், அவை சிறியனவாயினும் பெரியனவாயினும், ஓர் உயிரணுவால் ஆனவையாயினும், பல்லாயிரக்கணக்கான அணுக்களால் ஆனவையாயினும், பொதுவான சில செயல்களைத் தம் வாழ்க்கையில் செய்கின்றன. இடம் பெயர்தல், உணவு கொள்ளல், மூச்சு விடுதல், கழிவுப் பொருள் நீக்கல், வளர்தல், இனம் பெருக்குதல் முதலிய தொழில்களை எல்லா உயிர்களும் செய்கின்றன. இத்தொழில்களுக்கு ஏற்றவாறு உடலின் உறுப்புக்கள் அமைந்திருக்கின்றன. ஒரு பெரிய பிராணியைப் பார்த்தால், உணவு உறுப்பு மண்டலம், மூச்சு உறுப்பு மண்டலம், கழிவு உறுப்பு மண்டலம், இரத்தவோட்ட மண்டலம், நிணநீர் மண்டலம், தசை மண்டலம், நரம்பு மண்டலம், எலும்பு மண்டலம் முதலிய உறுப்புக் கூறுகள் பல்வேறு வேலைகள் செய்வதற்காகத் தனித்தனியே அமைந்துள்ளதைக் காண்கிறோம். இக்கூறுகள் வெவ்வேறு பிராணிக் கூட்டங்களில் எவ்வாறு அமைந்திருக்கின்றன, எங்கெங்கு ஒற்றுமைகள் இருக்கின்றன, எங்கெங்கு எவ்வாறு வேறுபடுகின்றன என்ற கேள்விகள் எழுகின்றன. இவைகளை இயற்கையுருவவியல் என்னும் உடல் அமைப்புக்கலை விளக்குகின்றது. இவ்வாறு ஆராயும்போது சில உண்மைகளைக் காண்கிறோம். அவற்றில் ஒன்றை மட்டும் இவ்விடத்தில் கூறுவோம்:

பூச்சிகள் (உ-ம். வண்டு, பட்டுப்பூச்சிகள்), கோலா மீன், பறவைகள், வௌவால்கள் முதலியவை பறக்கும் ஆற்றல் உடையவை. அதற்காக இவற்றிற்கு இறக்கைகள் அமைந்திருக்கின்றன. தொழில் ஒன்றே ஆனாலும், இறக்கைகளின் அமைப்புக்கள் இந்த நான்கு கூட்டங்களிலும் வேறுபட்டிருக்கின்றன. பட்டுப்பூச்சியின் இறக்கைகள், உடலின் மேலுள்ள தோவினால் ஆக்கப்பட்டுக் குடைக்கு வலிவு கொடுக்கக் கம்பிகள் இருப்பது போல், நரம்புகள் உள்ளவையாய் இருக்கின்றன. கோலா மீனில் முன் இணைத் துடுப்புக்கள் நீண்டு அகன்று இறக்கைகளாக மாறி இருக்கின்றன. பறவையின் கைகள் அதாவது முன்கால்கள் மாறுபட்டு ஆகாயத்தில் பறக்க உதவுகின்றன. மேற்கை, முன்கை, அங்கை ஆகிய பாகங்களின் எலும்புகளோடு இறகுகள் பொருந்தியிருந்து, நீரில் மனிதன் கையை அடித்துக்கொண்டு நீந்துவதுபோலக் காற்றில் அடித்துக் கொண்டு பறக்க உதவுகின்றன. இம்மாதிரியாகவே வௌவால்கள் பறக்கக்கூடும். ஆனால் அவற்றின் இறக்கைகள் தோலினால் ஆனவை. முன்னங்கால் விரல்கள் அதிகமாக நீண்டிருக்கின்றன. தோலானது உடம்பின் பக்கத்திலிருந்து மேற்கையெலும்பு, முன்கையெலும்பு இவற்றுடன் ஒட்டிக்கொண்டு, நீண்டுள்ள விரல்களுக்கு இடையே சவ்வுபோல் பரவி இறக்கையாகிறது. மூட்டுக்களின் உதவியால் இறக்கைகள் மடிக்கவும் விரிக்கவும் தகுதியாயிருக்கின்றன. தொழில் ஒன்றேயாயினும், ஒவ்வோர் இனத்திலும் ஒவ்வொரு மாதிரியாக இறக்கைகள் அமைந்திருப்பது இதிலிருந்து தெளிவாகும். இவற்றைத் தொழிலொத்த (Analo gous) உறுப்புக்கள் என்பார்கள்.

இவ்வாறன்றித் தொழில் வேறுபட்டிருப்பினும் உறுப்புக்களின் பிறப்பு அல்லது மூலம் ஒத்திருப்பின் அந்த உறுப்புக்கள் பிறப்பொத்த (Homologous) உறுப்புக்கள் என்பர். ஓணானின் முன்கால், பறவை அல்லது வௌவாலின் இறக்கை, திமிங்கிலத்தின் துடுப்பு, விலங்குகளின் முன்கால். மனிதனது கை (Arrm) ஆகியவை முறையே ஊர்தல், பறத்தல், நீந்துதல், நடத்தல்,பிடித்தல் முதலிய தொழில்கள் செய்வனவாயினும் இவ்வுறுப்புக்கள் தோன்றும் மூலம் ஒன்றே. இவற்றிலுள்ள எலும்புகளின் அமைப்பும் ஒன்றே ஆகும். மேற்கை எலும்பு, முன்கை எலும்புகள், அங்கை எலும்புகள் என்னும் மூன்று பாகங்களைக் கொண்ட பொதுவான ஓர் அமைப்பை இவற்றில் காண்கிறோம். ஆகையால் இவைகளெல்லாம் ஒரு பொதுவான அமைப்புள்ள அங்கத்தின் வேறுபாடுகள் என்பதை உணர்கிறோம்.

நாம் இவ்வாறு உடல் அமைப்பைக் கவனிக்கும்போது, பேரளவிற்கு அமைப்பில் ஒத்திருக்கின்ற பல பெரிய கூறுகளாக உயிர்களைப் பிரிக்கலாம். உதாரணரமாக, முதுகெலும்பு உள்ளவைகளை மீன்வகுப்பு, தவளை வகுப்பு, ஓணான்,பாம்பு, முதலை, ஆமை முதலியவையடங்கிய ஊர்வன வகுப்பு, பறவை வகுப்பு, பாலூட்டி வகுப்பு எனக் கூறுபடுத்துகிறோம். அம்மாதிரியாகவே முதுகெலும்பில்லாத உயிர்களையும் பல கூறுகளாகப் பிரிக்கலாம். இவ்வாறு உடல் அமைப்பைப் பரிசோதித்து, ஒற்றுமைகளாலும் வேற்றுமைகளாலும் உலகில் உள்ள உயிர்களைப் பாகுபாடு செய்வது (Classification) இயற்கையுருவ வியலினால் அடையும் பயன்களில் ஒன்றாகும். எஸ். ஜீ. ம.

இயற்பகை நாயனார் அறுபத்துமூன்று நாயன்மாருள் ஒருவர்; காவிரிப்பூம் பட்டினத்திலிருந்த வணிகர்; சிவனடியார் வடிவில் வந்த சிவபெருமான் சோதனை நிமித்தமாகக் கேட்டபடி தம் மனைவியைத் தந்துமுத்தி பெற்றவர்.

இயற்றமிழ் இயல், இசை, நாடகம் என்னும் மூவகைத் தமிழில் ஒன்று. செய்யுட்களால் ஆகிய நூல்களும் உரை நடைகளுமாகிய-இசையும் நாடகமும் தொடராத-யாவும் இயற்றமிழாகும். தொல்காப்பியம், நன்னூல் முதலியவை இயற்றமிழிலக்கணம். பார்க்க: தமிழ்.

இயற்றி நிலை (Will) என்பது உள்ளத்தின் கூறுகளில் ஒன்று. அக்கூறுகள் அறிவு நிலை (Cognition), உணர்ச்சி நிலை (Affection}, இயற்றி நிலை (Conation or will) என மூன்று வகைப்படும். சிந்தித்துச் செய்யும் காரியங்களில் எல்லாம் இயற்றி நிலை காணப்படும். மனிதனுடைய செயல்கள், 'இசைச் செயல்' (Voluntary act) என்றும், 'அனிச்சைச் செயல்' (Intoluntary a) என்றும் இருவகைப்படும். தும்முதல், இருமுதல் போன்ற அனிச்சைச் செயல்களில் இயற்றிநிலை காணப்படுவதில்லை. ஆனால் இச்சைச் செயல்களிலோ இயற்றிநிலை ஒரு முக்கியமான அமிசமாகும். ஆயினும் சில செயல்கள் இயற்றி நிலையால்