பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இயற்கையுருவவியல்

30

இயற்கையுருவவியல்

பாக்டீரியா, பசில்லஸ்கள் என்னும் ஓரணுத்தாவரங்கள் முதலியனவாகும்.

3. இவற்றிற்கும் சிறிதாக வைரஸ் (Virus) என்னும் உயிர்கள் இருக்கின்றன என்று ஊகிக்கப்படுகின்றது. இந்த வைரஸ்கள் அம்மைகள், சளிப்பு, சிலவகைக் காய்ச்சல் முதலிய நோய்களுக்குக் காரணமாயிருக்கின்றன. இவை சாதாரண மைக்ராஸ்கோப்பில் காண முடியாத அளவு சிறியவை. அணுவுயிர்களை வடிகட்டும் பீங்கான் வடிகட்டிகளுக்குள்ளும் புகுந்து வெளிச் செல்லக்கூடிய அளவு சிறியவை. ஆதலினால் இவற்றை வடிகட்டிச் செல்லி (Filter passers ) என்றும் கூறுவார்கள். சில வைரஸ்கள் தாவரங்களுக்கும் நோய் உண்டாக்குகின்றன. வைரஸ் தொற்றும் இயல்புடையது. புகையிலையைச் சுருளச் செய்து வளரவிடாமல் சிறிதாக்கும் நோய்க்கு ஒரு வைரஸ்தான் காரணம்.

பாக்டீரியா, பசில்லஸ்கள் என்பவற்றாலும் வாந்தி பேதி, சீதபேதி, க்ஷயம் முதலியவை ஏற்படும். பாக்டீரியாவில் சில வகைகள் நன்மையையும் தரும். பால் தயிராதல், தித்திப்புப் பொருள் புளித்துப்போதல் முதலிய செயல்களுக்குப் பாக்டீரியாவே காரணம். இவை காற்றிலும் நீரிலும் உணவிலும் இருக்கின்றன.

புரோட்டொசோவாவில் பல வகைகள் உண்டு. சில சுயேச்சையாய் இங்கும் அங்கும் நீரில் உலாவித்திரியும். நீர்ச்செடிகளில் ஒட்டிக்கொண்டு சில வாழும். மற்றும் சில பிற உயிர்களின் உடம்பில் வாழ்ந்து அவற்றிற்கு நோய்களை உண்டாக்குகின்றன. மலேரியாக் காய்ச்சலும் ஆப்பிரிக்கா முதலிய நாடுகளில் காணும் உறக்க நோய் (Sleeping sickness) முதலியனவும் இவ்வாறு உண்டாவன்.

புரோட்டொசோவாக்கள் வளர்ந்த பின் இரண்டு துண்டாகப் பிரிந்து, ஒவ்வொரு துண்டும் தனியே வாழத் தொடங்குகிறது. இவற்றின் உடல் மிகச் சிறியது. புரோட்டோப்பிளாசம் என்னும் உயிர்ப் பொருளாலானது. அதன் நடுவில் இந்த உயிர்ப் பொருள் அடர்த்தி மிகுந்து, உருமாறி உட்கரு (Nucleus) என்னும் உறுப்பாகிறது. இவ்வாறு உட்கருவுடன் கூடிய உயிர்ப்பொருளுக்கு உயிரணு என்று பெயர். இவ்வுயிரணுக்கள் தாம் சுதந்திரமாகவும் ஒட்டுண்ணியாகவும் (Parasite) வாழ்ந்து வருகின்றன. இவை பல்கும்விதம் முன் கூறியபடி இரு பிளவாவது தான். இவ்வாறு பிளவுபடும் பாகங்கள் பிரியாமலிருந்து இவை ஒவ்வொன்றும் மறுபடியும் பிளவுற்று ஒன்று சேர்ந்திருந்து, இவ்வாறே மறுபடியும் மறுபடியும் பிளவுபட்டும் பிரியாமல் ஒன்றுசேர்ந்தும் வாழுமானால் நாம் கண்ணால் பார்க்கக்கூடிய உயிர்களாகின்றன. மனித உடம்பும் இவ்வாறேதான் ஆக்கப்பட்டிருக்கிறது. நமது தசையிலாவது, உள் தோலிலாவது, உள்ளிருக்கும் உறுப்புக்களிலாவது ஒரு சிறு பாகத்தை எடுத்து ஊசிகளினால் பிய்த்து மைக்ராஸ்கோப்பில் பார்த்தால் இந்த உறுப்புக்களை ஆக்கும் உயிரணுக்களைக் காணலாம். ஆதலால், உயிர்களின் உடல்கள் இவ்வித உயிரணுக்களால் ஆக்கப்படுகின்றன எனத் தெளிவாகும். ஓர் உறுப்பானது அதிலுள்ள உயிரணுக்களின் அளவு, வடிவம், உள்ளடங்கியிருக்கும் சத்துக்கள் முதலியவற்றால் வேறுபடும். இவ்வேறுபாட்டின் காரணத்தாலே உறுப்புக்கள் தங்கள் தொழிலில் மாறுபடுகின்றன. இவ்வாறு பல ஆயிரக் கணக்கான உயிரணுக்களால் ஆக்கப்பட்ட உயிர்களைப் 'பலவணுவுயிர்கள்' (Metazoa) எனப் பொதுவாகக்கூறுவார்கள்.

பல உயிர்களின் உடல் அமைப்பு இரண்டு சமபாகமாகப் பிரிக்கக்கூடிய நிலைமையில் இருக்கின்றது. மனிதனது தலையிலிருந்து மூக்கின் நடுப் பாகமாக ஆசனம் வரையில் ஒரு கோடு இழுத்தால், வலம் இடம் என இரண்டு சமபாகங்கள் ஏற்படுகின்றன. இந்த அமைப்பை ஒருதளச் சமச்சீர் (Bilateral Symmetry) என்று சொல்லுவார்கள். பெரும்பான்மையான உயிர்களில் இந்தச் சமச்சீர்தான் தோன்றுகிறது. ஆனால் கடலிலும் மற்ற நீர்நிலைகளிலும் வாழ்கின்ற சில பிராணிகள் சக்கரம்போல் பல தளங்களில் சம பிரிவுகளாகப் பிரிக்கக்கூடிய உடலமைப்பைப் பெற்றிருக்கின்றன. இதற்கு ஆரைச் சமச்சீர்(Radial S.) என்று பெயர். கடலிலும் மற்ற நீரிலும் எல்லாத் திசைகளிலும் நீர் குடிப்பதற்குக் கிடைக்கின்றமையால் இவ்வுயிர்களின் எல்லாப் பக்கங்களும் சமமாக வளர்ந்திருக்கின்றன. இத்தகைய உயிர்கள் பாறை, நீர்த்தாவரங்கள் முதலியவைகளில் ஒட்டிக் கொண்டாவது அல்லது இடம் வீட்டு இடம் போகும் ஆற்றல் குறைந்தாவது இருக்கும். பாம்பன், கண்ணனூர், திருவனந்தபுரத்துக்கு அருகேயிருக்கும் கோவிளம் முதலிய இடங்களில் பாறை அடர்ந்த கடல்பாகங்களில் பாறைகளின்மேல் நின்று கீழே பார்த்தால் வட்டவடிவமுள்ள பூக்கள்போல் பல வர்ணங்களுடன் வெகு அழகாக விரிந்து வாழும் கடற் சாமந்தி (Sea- Anemone) என்னும் பிராணிகளைக் காணலாம். அவை பாறையில் தங்கள் அடிப் பாகங்களால் ஒட்டிக்கொண்டிருக்கும். தொட்டால் உடனே உடம்பைச் சுருக்கிக்கொள்ளும். இப்பிராணிகள் அழகான ஆரைச் சமச்சீர் உள்ளனவாக இருக்கின்றன. மற்றும் கடலில் வாழ்கின்ற சில உயிர்கள் இச் சமச்சீரை நன்கு காட்டுகின்றன. உதாரணம்: கடலோரங்களில் செம்படவர்கள் தங்கள் வலையினின்றும் தூக்கி யெறிகின்ற நுங்கு போன்ற கூழ்ப் பொருளாலான சொறி (Jelly Fish) என்னும் உயிர், கடல் முள்ளெலி (Sea Urchin), நட்சத்திர மீன் (Star Fish) முதலியன.

மற்றும், பலவணுவுயிர்களைக் கவனித்தால், இரண்டு பெரிய பிரிவுகளைக் காணலாம். மீனும், தவளையும், ஓணான், பாம்பு, முதலை ஆமை போன்ற ஊர்வனவும், பறவையும், பாலூட்டி விலங்குகளும் ஆகிய இவையெல்லாம் முதுகிலே எலும்புத் தண்டுள்ளவை. புழுக்கள், நத்தைகள், பூரான், பூச்சி, தேள் முதலிய மற்ற உயிர்க் கூட்டங்களுக்கு முதுகில் எலும்புத்தண்டு இல்லை. இவ்வாறாக, முதுகு தண்டுள்ளவை, முதுகுதண்டு இல்லாதவை என இரு பெரிய கூறுகளாகப் பலவணுவுயிர் களைச் சாதாரணமாகப் பிரிக்கலாம்.

ஆனால், முதுகு தண்டானது ஆரம்பத்தில் கண்டங்களாகத் துண்டுபடாத மீள்சக்தியுடைய கோல்போலக் கழுத்திலிருந்து வால்முனை வரையில் ஓடுகின்ற உறுப்பாக இருக்கின்றது. இதன் உயிரணுக்களில் நிரம்பக் குமிழிகள் உண்டு. குமிழி நிறைந்த உயிரணுக்களால் ஆன தண்டில் நார்த்திசுவினாலான மேல் தோல் பரவியிருக்கிறது. இவ்வகையான தண்டிற்கு நோட்டொ கார்டு (Notochord) என்றுபெயர். இந்த நோட்டொ கார்டு பின்னால் கண்டங்கண்டமாகத் துண்டுபட்ட முதுகெலும்புத் தண்டாக மாறுகிறது. இவ்வாறு மாறாமல் நோட்டொகார்டாகவே சில பிராணிகளிடம் இதைக் காணலாம். ஆற்று மணலில் புதைந்துவாழும் அயிரை மீன்போலச் சமுத்திரத் தரையில் மணலில் புதைந்து வாழும் ஆம்பியாக்சஸ் என்னும் உயிருக்கு இந்தத் தண்டு மாறாது, இளம் பருவமுதல் கடைசி