பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இயற்கைப் பிரதேசங்கள்

29

இயற்கையுருவவியல்

லாம். கைத்திறமை, இரண்டு கையும் சேர்ந்து வேலை செய்தல், விடாமுயற்சி போன்ற பல குறிப்பிட்ட இயற்கைத் திறமைகள் பற்றிய சோதனைகள் இப்போது வகுக்கப்பட்டுள்ளன.

ஒரு குறிப்பிட்ட தொழிலுக்கு இயற்கைத் திறமைச் சோதனைகள் வகுப்பது என்பது எளிதன்று. அதற்கான தொடக்க வேலை அந்தத் தொழிலை உளவியல்படி கவனமாக ஆராய்வதாகும். அந்தத் தொழிலில் வெற்றி தரும் மனிதப் பண்புகளையும், தோல்வி தரும் மனிதப் பண்புகளையும் பிரித்து நோக்கவேண்டும். எடுத்துக்காட்டாக, பிளேட்டோ படைக்கு ஆள் தேர்ந்தெடுப்பது பற்றிக் கூறியதைக் காட்டலாம். நினைவில் வைத்திருக்கும் ஆற்றல், மோசத்தை எதிர்க்கும் ஆற்றல், கோழைத்தனத்தையும் அச்சத்தையும் எதிர்க்கும் ஆற்றல், இன்பத்தின் ஏமாற்றலுக்கு இணங்காத ஆற்றல் ஆகிய பண்புகள் இருக்கின்றனவா என்று அறிவதற்கேற்ற செயல்களைச் செய்யச் சொல்ல வேண்டும் என்று அவர் கூறுகிறார். ஆகவே படைகள் வெற்றிபெற வேண்டியதற்குத் தேவையான பண்புகள் இவை என்று பிளேட்டோ ஆராய்கின்றார். ஆயினும் அவர் சொல்லும் சோதனையானது அவர் செய்து பாராமல் தாம் செய்த சிந்தனையால் உணர்ந்ததே யாகும். ஆனால் இக்காலத்தில் தொழிற் பண்புகளை ஆராய்வது சோதனை வாயிலாகவும் புள்ளி விவர வாயிலாகவுமாகும்.

தொழிற் பண்புகளை ஆராய்ந்து அறிந்தபின் அப்பண்புகளை அளக்கக்கூடிய பல சோதனைகளை வகுக்க வேண்டும். ஒரு சோதனையானது எவ்வளவு சிறந்ததாயினும் அது ஒன்றுமட்டுமே போதாது என்று அனுபவத்தால் தெரிகிறது. அதன்பின் பல மாதிரிகளை எடுத்து, இந்தச் சோதனைகளைக் கொண்டு சோதிக்க வேண்டும். இப்படிச் செய்வது சோதனைகளையே சோதிப்பதாகும்.

இப்படிச் செய்வதால் பெறும் விளைவுகளை வைத்து சோதனைகளுக்கு மதிப்பு ஏற்படுத்தப்படும். இவற்றைப் புள்ளி விவர முறையில் ஆராயவேண்டும். இவ்வாறு செய்து பெறும் சோதனைகளுள் எது ஒரு குறிப்பிட்ட தொழிலுக்குத் தேவை என்று அறியவேண்டும். இதற்குப் புள்ளியியல் பெரிதும் துணை செய்யும். சோதனைகள் சரிதானா, அவற்றை நம்பலாமா என்பதும் இறுதியில் கணிக்கப்படும்.

உள்ளத்தின் ஆற்றல்கள் ஒன்றோடொன்று சார்புடையனவா என்ற விஷயம் அறிஞர் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தப் பிரச்சினையை முதன்முதல் எழுப்பியவர் ஆங்கில உளவியலாரான ஸ்பீயர்மன் என்பவர். பல ஆற்றல்கள் குழுக்களாக உள்ளன என்பதும், பல குழுக்களுக்கும் பொதுவான ஆற்றல்கள் உள்ளன என்பதும் இப்போது எல்லோரும் ஏற்றுக்கொண்ட உண்மையாகும். அதனால் சோதனைகளைத் தேர்வு செய்யும்போது தேர்ந்ததையே மறுபடியும் தேராதிருக்குமாறு கவனித்துக் கொள்ளவேண்டும். எந்தச் சோதனையானாலும், அது பொருட் செலவு மிகுதியாக இல்லாததாகவும், மிகுந்த காலம் வேண்டாததாகவும், பலன்களை அளந்து பார்க்கக் கூடியதாகவுமிருந்தால் பயன் தருவதாகும். ஜீ. டீ. போ.

நூல்கள்: C.L. Hall, Aptitude Testing; Freeman, Mental Testing; E. B. Greene, Measurement of Human Behaviour.

இயற்கைப் பிரதேசங்கள் : பார்க்க: பூமியின் இயற்கைப் பிரதேசங்கள்.

இயற்கைப் பொருளாதார வாதிகள்: பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிரான்ஸில் இருந்த பொருளாதார வாதிகளில் ஒருவகையினர் இயற்கைப் பொருளாதார வாதிகள் எனப்படுவர். இவர்கள் தங்களுக்குள் பொதுவாகச் சில பொருளாதாரக் கொள்கைகளைக் கையாண்டு வந்தனர். பிரான்ஸ்வா கெனெ (1694-1774), வின்சன்ட் கோர்னே (1712-1759), ஷாக் டர்கோ (1727-1781), டூபான்ட்நெமூர் (1739-1817), மெர்சீர் ரிவீர் (1720-1794), மார்க்கீஸ் மிராபோ (1719-1789) என்போர் அவர்களில் முக்கியமானவர்கள். அவர்கள் தங்களைப் 'பொருளாதார வாதிகள்' என்றே கூறிக்கொண்டனராயினும், நெமூர் என்பவரைப் பின்பற்றி அக்காலத்தவர்கள் அவர்களை 'இயற்கைப் பொருளாதார வாதிகள்' என்றே பெயரிட்டனர். கெனெ தான் அவ்வாதிகளில் முக்கியமானவர்; அவர் அவர்களுடைய கருத்துக்களைக் 'குடியானவர்கள்', 'தானியங்கள்' என்னும் தலைப்பிட்டுத் தாம் எழுதிய இரு கட்டுரைகள் வாயிலாக வெளியிட்டார். அக்கட்டுரைகள் டீடெரோ பிரசுரித்துவந்த கலைக் களஞ்சியத்தில் வெளியாயின். செல்வத்தின் செலாவணியைப்பற்றிப் 'பொருளாதார அட்டவணை' என்னும் கட்டுரையையும் கெனெ வெளியிட்டார். மிராபோவின் 'கிராமங்களின் தத்துவம்', 'இயற்கை விதி' என்னும் பிரசுரங்களும், டர்கோவின் 'சிந்தனைகள்' மெர்சீர் ரிவீரின் 'இயற்கை ஏற்பாடும்' நெமூரின் இயற்கை ஆட்சியின் இயல்பான அமைப்பு' என்னும் நூல்களும் இவர்களுடைய பிற முக்கியமான வெளியீடுகள். பார்க்க: பொருளாதாரக் கருத்துக்களின் வரலாறு. கி. வி. பா. ச.

இயற்கையுருவவியல் (Morphology) : ஓர் உயிரைப்பற்றி அறிய வேண்டுமானால் இரு வகையாக அதை நாம் அறியலாம். முதலில் அதன் உடலமைப்பை அறிதல் வேண்டும். அதன்பின் எவ்வாறு உடலின் ஒவ்வொரு பாகமும் அங்கமும் வேலை செய்கின்றது என்பதைத் தெரிந்துகொள்ளுதல் வேண்டும். முதல்வகை அறிவை இயற்கை யுருவவியல் என்றும், இரண்டாவதுவகை அறிவை உடலியல் (Physiology) என்றும் கூறுவார்கள். இப்பிரிவுகளைச் சிறிது காலத்திற்குமுன் வரையில் தனித்தனியே பயின்று வந்தார்கள். உடலியலறிவு வளர வளர. அதனோடு இயற்கையுருவவியலையும் சேர்த்து அறிதலே மேலானதாகத் தோன்றுவதால் இப்பொழுது இரண்டும் கலந்து கற்பிக்கப்படுகின்றன.

இக்கட்டுரையில் பிராணிகளைப்பற்றி மட்டும் கூறப்படும். பொதுவாக உயிர்களை நம் கண்ணால் காணுபவை, மைக்ராஸ்கோப்பு மூலமாகக் காணுபவை, மைக்ராஸ்கோப்பு மூலமாகவும் காணமுடியாதவை என மூவகையாகப் பிரிக்கலாம்.

1. கண்ணுக்குப் புலப்படும் உயிர்களில் யானை திமிங்கலம் முதலிய பெரிய விலங்குகள் முதல் குட்டைகளில் பாசியோடு கலந்து காணப்படும் மிகச் சிறிய உயிர்கள் வரையிலுமுள்ள எல்லா உயிர்களும் அடங்கும். பாசிகளை அகன்ற வாயுடைய கண்ணாடி வட்டகையில் (Petri - Dish) சுத்தமான நீரில் விட்டு அதைத் தூக்கிச் சூரிய வெளிச்சத்துக்கு எதிரே பார்த்தால் சிறு சிறு அணுக்கள் போன்ற உயிர்கள் இங்கும் அங்கும் திரிவதைக் காணலாம். அவற்றை மைக்ராஸ்கோப்பின் வழியாகப் பார்த்தால் அவற்றின் உடல் அமைப்பு நன்கு தெரியும்.

2. மைக்ராஸ்கோப்பு மூலமாகக் காணக்கூடியவை புரோட்டொசோவா என்னும் ஓரணு பிராணிக ணிகள்,