பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இராமகிருஷ்ண பரமஹம்சர்

64

இராமசுவாமி ஐயர்

ரிகத்திற்கும் ஒரு பேராபத்து விளைவதாயிற்று. அதன் காரணம் இந்திய நாடு அக்காலத்தே ஆங்கிலேயரது ஆட்சிக்கு அடிமைப்பட்டதேயாகும். அதன்பயனாக, நாட்டில் ஆங்கிலக் கல்வி வாயிலாக விஞ்ஞான சம்பந்தமான புதுக் கருத்துக்கள் பரவலாயின. கிறிஸ்தவப் பாதிரிமார் பிரசாரம் செய்து, மதமாற்ற முயற்சிகள் செய்து வந்தனர். ஆங்கில மோகம் விஞ்ச, நாத்திகம் தலையெடுத்தது. இந்நிலையை மாற்ற, ஆங்கிலங் கற்றோர் பிரமசமாஜம், ஆரிய சமாஜம் முதலிய இயக்கங்களை ஆரம்பித்து நடத்தினர். எனினும் இவை இந்து மதத்தினின்றும் பிரிந்து நடந்துகொண்டிருந்தமையால், மக்களின் ஆதரவு இவற்றுக்கு அதிகமாகக் கிடைக்காது போயிற்று.

ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சர்
உதவி: இராமகிருஷ்ண மடம், சென்னை

இந்நிலையில் இந்துமதக் கருத்துக்களைப் பாமரர்க்கும் விளக்கும் திறன் பெற்ற ஒருவர் இந்து மதத்தை மறுமலர்ச்சி அடையும்படி செய்வதற்காகத் தோன்றுதல் அவசியமாயிற்று. அவ்விதம் அமைந்தவரே ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர். அவர் 1836ஆம் ஆண்டில் வங்காளத்தில் கமார்புக்கூர் கிராமத்தில் ஓர் ஏழை அந்தணர் குடும்பத்தில் பிறந்தார். சிறு வயது முதல் கல்வியில் கருத்தற்றவராகவும், மெய்ப் பொருளை நேரே காணும் அவாவினராகவும் இருந்தார். 1855ஆம் ஆண்டிலே கல்கத்தாவிற்கு அண்மையிலுள்ள கிணேசுரத்திலே காளி கோயிற் பூசாரியாக அமர்ந்தார். தம்முடைய பக்தி சிரத்தைகளால் விரைவில் தேவியின் காட்சியைப் பெற்றார். பெண்ணாசை, பொன்னாசைகளை வேரறுக்கக் கடவுள் வெறியோடு சாதனக் கடலில் மூழ்கினார். வைணவ தாந்திரிக அத்வைத சாதனங்களைக் குருக்களின் துணையோடு பயின்றார். பரம்பொருளின் வடிவங்கள் பலவற்றையும், அதன் உருவ அருவ அதீத நிலைகளையும் அனுபூதியாற் கண்டார். இந்து மதத்திற்குரிய கருமம், பக்தி, யோகம், ஞானம் என்னும் நான்கு நெறிகளிலும் சென்று, அவற்றின் முடிவைக் கண்டார். ஆறுமாத காலம் நிருவிகற்ப சமாதி நிலையிலே தொடர்ந்து நிலையாக இருந்து, பின் பாரமார்த்திக உலகையும் ஒன்றாக இணைக்கும் நிலையில் வாழ்ந்து வந்தார். மேலும், இஸ்லாமிய கிறிஸ்தவச் சாதனங்களையும் பழகி, உயர்ந்த அனுபூதி பெற்றார். இவ்வாறு பலவகை அனுபூதிகட்கும் களஞ்சியமாக விளங்கிய இம்மாபெருங் குரவர் அருள் முற்றியவராய், "நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் " என்பாராய்த் தம் ஞானத்தை வையத்தார்க்கு வழங்கும் பேரவாவோடு, தகுதியுடைய நன்மக்களின் வரவை எதிர்நோக்கி யிருந்தார்.

மலரிடை மொய்க்கும் வண்டுகள் எனப் பல்வகை மக்கள் அவர்பால் திரண்டனர். தத்தமக்குரிய நெறியிலே போதனையையும், தூய்மையையும் சாந்தியையும் பெற்றுக் கடைத்தேறினர். இறைவனையன்றி மற்றெதனையும் வேண்டா வீறுபெற்ற ஒரு சில இளைஞர்க்கு அவர் சிறப்பாக ஞானப் பயிற்சி யளித்து, அவர்களுடைய நெஞ்சங்களிலே ஞான விளக்குக்களை ஏற்றினார். இவர்கட்குத் தலைமையாக விளங்கியவர் சுவாமி விவேகானந்தர். இவர்கட்கு அவரவரது தகுதிக்கேற்ப, மக்களை உய்விக்கும் திவ்விய சக்தியை ஊடடினார்: துறவு பூணும் அனுமதியையும் ஈந்தார்; உலகமெங்கும் மன்னுயிரை உய்வித்தற்கெனவே வாழவேண்டுமென ஆணையிட்டார். அன்றே ஸ்ரீ ராமகிருஷ்ண மடமும் சங்கமும் உதித்தன. இந்துமத மறு மலர்ச்சிக்கும் உலக ஞான முன்னேற்றத்திற்கும் இவ்வாறு அடிகோலிய பின் 1886 ஆகஸ்டு 16-ல் தமது உருவைக் கரந்தார்.

இம்மாபெருங் குரவரது அனுபூதியிலே இணையற்ற ஆழமும் விரிவும் ஒருங்கே அமைந்திருந்தன. இந்துமதம் 5,000 ஆண்டுகளாகத் தொகுத்து வைத்திருந்த பலவகை அனுபூதிச் செல்வத்தையெல்லாம் அவர் தமது 50 ஆண்டு வாழ்விலே உரிமையாக்கிக் கொண்டார்.(1) 'காமமும் பொருளாசையும் உள்ளவரை ஞானம் உதியாது', (2) 'மதமாவது அனுபூதியே' (3) 'உண்மை ஒன்றேயெனினும், நெறி பல, உரை பல' என்னும் மூன்று பேருண்மைகட்கும் அவரது வாழ்வு விரிவுரையாயிற்று. தமக்கு வழிகாட்ட வந்த குருமாரும் தம்மைக் குருவாகப் போற்றும் ஞானவிழுப்பம் பெற்றிருந்தார். அவரது வரலாறு ஞானப் பயிற்சியின் வரலாறாகவே இலகியது. அவரது தூய தெய்விக அன்பு எவ்வித வரம்புமற்று உலகமெங்கும் பரவி மக்களை ஆட்கொள்வதாயிற்று. அவர் துறவுச் சுடராய் விளங்கினர்; உறங்கும்போதும் அவரது உடல் நாணயத்தைத் தொடப் பொறாது துடிக்கும்; மறந்தும் அவரது நா உண்மையையன்றி நவிலாது; அடுத்த வேளைக்கு வேண்டியதைத் தொகுத்து வைக்கவும் அவர் ஒருப்படார்; செந்நெறியினின்றும் வழுவ அவரது உடலும் நரம்பும் இடங்கொடா. அவர் துறவுநிலை புகுந்தபின்னும் மனைவியாரோடு வசித்து வந்தும் தேவியாகவே யாண்டும் அவரை நினைந்து வழிபடும் சீர்மை சிறிதும் குன்றாதிருந்தார். அவருடைய நினைவு, சொல், செயல் மூன்றும் மன்னுயிரை இறைவனாக எண்ணியாற்றிய வழிபாட்டின் வடிவமாகவே அமைந்தன. அவரது மனிதத் தன்மையும் தெய்வத் தன்மையின் உருவமாகவே திகழ்ந்தது. இருந்த இடத்திலிருந்தே உலக முழுதிற்கும் அவர் ஞான விழிப்பை உண்டுபண்ணினார். அவர் தமதுவாழ்வில் எழுப்பியஞான அலை இன்றளவும் உலகெலாம் பரவி நல்வழிப்படுத்தி வருகின்றது. அவரை இறைவனின் அவதார மென்றே அறிஞர் ஏத்துகின்றனர். ப.

இராமச்சந்திரக் கவிராயர் (19ஆம் நூ) தொண்டை நாட்டில் இராச நல்லூரிற் பிறந்து, சென்னையில் வாழ்ந்தவர். இராசு குலத்தைச் சேர்ந்தவர். சகுந்தலை விலாசம், தாருகா விலாசம், இரங்கோன் சண்டை நாடகம், இரணிய வாசகப்பா முதலிய நாடக நூல்களை இயற்றியவர். எல்லிசு என்னும் ஆங்கிலரால் புகழப்பெற்றவர். சித்திரக் கவிகள் வல்லவர். யாருக்கும் விளங்கும் எளிய சொற்களாலே பாடுவதிலும் நகைச்சுவை ததும்பப் பாடவும் ஆற்றலுள்ளவர்.

இராமச்சந்திர பாவா, மோர்கூர் : பார்க்க: காலட்சேபம்.

இராமசுவாமி ஐயர் (19ஆம் நூ. முற்பகுதி) யாழ்ப்பாணத்திலே வட்டுக்கோட்டையிலே வாழ்ந்தவர். நாடக நூல்கள் செய்வதில் வல்லவர். கதிரை

மலைக் கந்தசாமி கீர்த்தனை செய்துள்ளார்.