பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இராப்போசனம்

63

இராமகிருஷ்ண பரமஹம்சர்

உயிரிழந்தான். கடைசிக் காலத்தில் இவன் தேகத்தில் எண்பது போர்த் தழும்புகள் இருந்தனவென்றும், இவன் ஒரு கண், ஒரு கை, ஒரு கால் ஆகியவற்றை இழந்திருந்தான் என்றும் கூறப்படுவது இவனது வீரத்தை விளக்குகின்றது. மேவாரின் புகழை விளங்கச் செய்த பெருமை இராணாசங்கிராம் சிங்கைச் சாரும். தே. வெ. ம.

இராப்போசனம்: இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முந்தின நாள் இரவு, சீடர்களுடன் உணவு உண்டபொழுது அப்பத்தையும் திராட்சை ரசத்தையும் தொட்டுக் கடவுளுக்கு நன்றி செலுத்திவிட்டுச் சீடர்களைப் பார்த்து, "இது என் உடல், இது என் குருதி, இதை என் நினைவாக இயற்றுங்கள்" என்று கூறினார். இதை 'யூக்கரிஸ்ட்' என்றும் கூறுவர். யூக்கரிஸ்ட் என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் நன்றிகூறல் என்பதாம். இதை ஆங்கிலத்தில் 'கம்மூனியன்' என்பர். அதற்குக் கிறிஸ்தவர்கள் கூறும் தமிழ்ச்சொல் 'நற்கருணை' என்பதாகும்.ரோமன் கத்தோலிக்கர் இதை 'மாஸ்' என்பர். இது கிறிஸ்தவ சமஸ்காரங்களுள் மிக முக்கியமானது. புரோகிதர் அப்பத்தையும் திராட்சை ரசத்தையும் செபங்கூறிக் கர்த்தரின் உடலாகவும் குருதியாகவும் மாற்றி, அடியார்கட்கு வழங்குவது ஐதிகம். இதை ரோமன் கத்தோவிக்கர் நாடோறும் அல்லது வாரந்தோறும் பெறுவாராயினும், இயேசு உயிர்த்தெழும் ஈஸ்ட்டர் என்னும் புண்ணிய நாளன்று கட்டாயம் பெற்றாகவேண்டும். பிராட்டெஸ்டென்டு கிறிஸ்தவர்களுள் சிலர் திங்கள்தோறும், சிலர் மூன்று திங்கட்கு ஒரு முறையும் பெறுவர். இவர்களும் ஈஸ்ட்டரில் பெறுவதை முக்கியமாகக் கருதுவர்.

இராம கவிராயர் ( 18ஆம் நூற்.) திருவாய்ப்பாடிப் புராணம், சாரப் பிரபந்தம் முதலியன இயற்றியவர். புதுச்சேரியில் டூப்ளே காலத்தில் துவிபாஷியாகச் சிறந்து விளங்கிய பிரம்பூர் ஆனந்தரங்கப்பிள்ளையைப் பாடிப் பரிசு பெற்றவர் என்பர்.

இராமகிருஷ்ண கவி, தெனாலி: பார்க்க: தெனாலிராமன்.

இராமகிருஷ்ண,சங்கம் : ஸ்ரீராமகிருஷ்ணர் தமது அந்திம தசையில் ஒருநாள் தம் சீடர்களை ஐயம் ஏற்று உண்ணச் செய்து, துறவு பூணும்படி கட்டளை இட்டார். அதனுடன் தம்முயிர் நலனைக் கருதுவதை விடுத்து. மன்னுயிர்க்கு ஞானப்பணி செய்யுமாறும் சீடர்களுக்கு ஆணையிட்டார். ஏனைய சீடர்கட்கு நரேந்திரரைத் தலைவராக்கி மறையுமுன் தமது அளப்பரிய ஞானசக்தி முழுமையையும் நரேந்திரரது உள்ளத்திற் புகுத்தினர். அன்று முதலே இவரது ஆன்மா நரேந்திரரது ஆன்மாவோடு ஒன்றாய் இணைந்ததாயிற்று. அன்றே ஸ்ரீராமகிருஷ்ணவிவேகாநந்த இயக்கம் உருப்பெற்று உதயமாயிற்று எனல் வேண்டும். இராமகிருஷ்ணர் மறைந்தபின் சீடர்கள் நரேந்திரரது தலைமையின்கீழ் வைதிக முறைப்படிக் காவி ஆடை உடுத்துப் புதுப்பெயர் புனைந்து துறவியானார்கள். அப்பொழுது நரேந்திரர் 'விவேகாநந்தர்' ஆனார்.

விவேகாநந்தர் மேனாடுகளிலே ஞானப்பணி ஏற்றுத் தாய் நாட்டில் வேதாந்த கேசரியாய்ப் பல ஆண்டு முழங்கியபின் 1897-ல் மே மாதம் முதல் தேதியன்று இராமகிருஷ்ணரது ஞானச் செய்தியை உலகில் பரப்புவதற்காகச் சீடர்களைத் துணையாகக்கொண்டு 'இராமகிருஷ்ண சங்கம்' என்பதை நிறுவினார். 1899ஆம் ஆண்டில் துறவிகளுக்கெனப் பேலூரிலே இராமகிருஷ்ண மடத்தை நிறுவினார். இவ்விரண்டு ஸ்தாபனங்களையும் நடத்தி வரும் இயக்கமே ஸ்ரீ ராமகிருஷ்ண -விவேகானந்த இயக்கம் ஆகும். இவ்வியக்கம் கீழைநாட்டு ஞானப்பண்பாட்டை உயிராகவும், மேலைநாட்டுலகியற் பண்பாட்டை உடலாகவும் கொண்டது. இதன் அடிப்படைக் கொள்கையாவது, 'சுய முத்திக்காகவும், உலக நலனுக்காகவும்' வாழ்தலே, துறவின்றி முத்தியில்லையாதலின், அகவாழ்வில் பரம்பொருளைப் பற்றிய தியானமும், பற்றறுத்தலாகிய துறவும், புறவாழ்வில் மன்னுயிர்க்குத் தொண்டும் இவ்வியக்கத்தின் உயிர்நிலையானவை. எல்லாம் உண்மையில் கடவுள் மயமாதலின் துயருறும் மக்களைச் சாதி, மதம், நிறம் முதலிய எவ்வித வேறுபாடுமின்றி இறைவன் வடிவங்களாகக் கருதி, அவருக்குச் செய்யும் செயல்களை உபகாரச் செயல்களாக எண்ணாது, கடவுள் வழிபாடாகக் கருதுவதே சங்கத்தின் குறிக்கோளாகும். மடத்தைச் சேரும் துறவிகள் ஞானப் பயிற்சியும் உலகியல் அறிவும் பெறுவார்கள். அவர்கள் தொடங்கும் தொண்டுகளுக்குச் சங்கத்தைச் சேர்ந்த துறவியரல்லாதார் துணைபுரிவார்கள். இவ்வியக்கத்தின் நோக்கங்கள் முழுதும் ஞான மயமாயும் பொதுநல மயமாயும் இருத்தலின் இதற்கும் அரசியலுக்கும் யாதொரு தொடர்பும் இல்லை.

அக்கொள்கைகளுக்கு ஏற்ப விவேகானந்தர் இந்து மதத்தின் பேருண்மைகளைச் சிக்காகோவிலே சமயப் பெருமன்றத்து விதைத்து, மேனாடுகளில் ஞனப்புரட்சியை உண்டுபண்ணினார். அதன்பின் ஐரோப்பாவிலும், இந்தியாவிலும் பல மாகாணங்களிலும் கிளை மடங்களை நிறுவினார். இராமகிருஷ்ண சங்கம் வெள்ளம், பஞ்சம், பூகம்பம், கொள்ளை நோய் முதலியவற்றால் துயருறும் மக்களுக்குப் பணி செய்தும், மருத்துவச்சாலைகள், அனாதை இல்லங்கள், தொழிற்சாலைகள், குருகுலங்கள், கல்விச்சாலைகள் முதலியவற்றை அமைத்தும் வருகின்றது. மடத்துத் துறவியர் தம் வாழ்க்கை வாயிலாகவும், உரையாடல் வாயிலாகவும், சொற்பொழிவு வாயிலாகவும், வெளியீட்டு வாயிலாகவும் வேதாந்த ஞானத்தை வழங்கி வருகிறார்கள். இச்சங்கம் இந்து சமயத்தின் பற்பல பிரிவுகட்கும் புத்துயிரையும் புது வீரியத்தையும் ஊட்டியுள்ளது; இந்தியர்க்குத் தனி வாழ்க்கையையும் சமூக வாழ்க்கையையும் பல துறைகளிலும் ஒழுங்குபெறத் திருத்தியமைக்கும் ஊக்கத்தை அளித்துள்ளது. அன்றியும், உலகமெங்கும் பிற மதத்தினர்க்கும் ஞானவிழிப்பை உண்டாக்கி. ஒன்றே குலம் என்பதை உணர்த்தி, ஞானக் கயிற்றால் உலகினரை ஒன்றாகப் பிணைக்க முயலுகின்றது. மேலையுலகில் விஞ்ஞான வளர்ச்சியால் எழுந்த கருவி-பொறி நாகரிகத்தின் புரையோடிய தன்மையையும், அதற்கு எதிரான ஞானநாகரிகத்தின் மேன்மையையும் எடுத்துக் காட்டுகிறது. "ஒன்றே மெய்ப்பொருள், ஒன்றே மெய்ந்நெறி, ஒன்றே மெய்ப்பயன்" என்னும் ஆழ்ந்தகன்ற சமத்துவ சமரச ஞானத்தை எங்கணும் பரப்பி வருகின்றது.

இராமகிருஷ்ண பரமஹம்சர் (1936-1886): மக்களாய்ப் பிறந்தார் அமர நிலையை எய்தலாகும் என்பதை உலகிலேயே முதன்முதலில் அனுபூதியாற் கண்டது பாரத மக்கள் சமூகம். அன்றுமுதல் அது 18ஆம் நூற்றாண்டின் இறுதிவரைக் கலைச் செல்வத்தையும் ஞானச் செல்வத்தையும் தொடர்ச்சியாகக் குவித்துக் கொண்டே வந்தது. ஆயினும் அதன் பின்னர் ஓர் ஐம்பது ஆண்டுகளாக அதன் பண்பாட்டுக்கும் நாக-