பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இராசி

62

இராணாசங்கா

இராசி : விண்ணில் சூரியன் செல்வதாகத் தோன்றும் வீதியாகிய இராசி மண்டலத்தை ஒவ்வொன்றும் 30° அளவுள்ள பன்னிரண்டு சம பாகங்களாகப் பிரித்திருக்கிறார்கள். இந்தப் பாகங்களை இராசிகள் என்பர். இவைகளுக்கு முறையே மேடம் (Aries), இடபம் (Taurus), மிதுனம் (Gemini,) கடகம் (Cancer), சிம்மம் (Leo), கன்னி (Virgo,) துலாம் (Libra), விருச்சிகம் (Scorpionis), தனுசு (Sagittarius), மகரம் (Capricornis), கும்பம் (Aquarius), மீனம் (Pisces) என்று பெயர். இப்பெயர்கள் அந்தந்த இராசிகளில் அமையும் நட்சத்திரத் தொகுதிகள் மேடம் (ஆடு) முதலிய வடிவுடையனவாகத் தோன்றுவதால் ஏற்பட்டன என்பர். சூரியன் இந்த இராசிகளில் இருக்கும் காலங்களை முறையே சித்திரை வைகாசி முதலிய மாதங்கள் என வழங்குகிறோம். எம். வே.

இராசி சக்கரம் ஒரு குழந்தை பிறக்குங்கால் சூரியன், சந்திரன், செவ்வாய் முதலிய கிரகங்கள் எந்தெந்த இராசியில் இருக்கின்றன என்று குறிப்பிடும் படத்தை இராசி சக்கரம் என்பர். பிறப்புக் காலத்தில் உதயமாகும் இராசியை அதாவது அவ்வமயம் கிழக்கே அடிவானில் இருக்கும் இராசியை இலக்கினம் அல்லது ஜன்ம இலக்கினம் என்று இராசி சக்கரத்தில் குறிப்பிடுவர். முக்கியமாக இந்தச் சக்கரத்தை ஆதாரமாகக் கொண்டே சோதிடர்கள் பலன் கூறுவர். எம். வே.

இராசி மண்டலம் நட்சத்திரங்களினிடையே பூமியைப் பொறுத்துச் சூரியன் இயங்கும் பாதையும் (Ecliptic) சந்திரனும் மற்றக் கிரகங்களும் இயங்கும் பாதைகளும் வான மண்டலத்தில் சூரியபாதைக்கு இரு புறமும் சுமார் 9° தூரத்திற்குள் அடைபடும் ஒரு மண்டலத்தில் அமையும். இதையே இராசி மண்டலம் என்பர், இந்த மண்டலத்திலேயே அசுவதி, பரணி முதலிய 27 நட்சத்திரங்களும் இருக்கின்றன. ஆனால் இந்த விதிக்கு விலக்காக அனுஷம், கேட்டை, மூலம் என்னும் நட்சத்திரங்கள் இம்மண்டலத்திற்கு மிகவும் தெற்கே இருக்கின்றன. எம். வே.

இராசீபுரம் சேலம் - நாமக்கல் சாலையில் சேலத்திலிருந்து 15 மைலுக்குக் கிழக்கே இரண்டு மைலில் உள்ளது, இங்கே சுவர்ண வரதராஜ சுவாமி கோவில் இருப்பதால் ஆதியில் சுவர்ண வரத ராஜபுரம் என்று வழங்கி வந்து, நாளடைவில் இராசீபுரம் என்று ஆய்விட்டது. இங்குள்ள கைலாசநாதர் கோவில் மேற்குப் பார்த்துள்ளது. கோவிலின் திறவுகோலைப் பைரவர் கோவிலின் முன் இரவில் வைத்துப்போனால் அவருடைய வாகனமாகிய நாய் காத்துத் தரும் என்பது ஐதிகம். இவ்வூரிலிருந்து நெய் மற்ற ஊர்களுக்கு ஏற்றுமதியாகிறது. நகராண்மைக் கழகத்தால் நடத்தப் பெறும் உயர்நிலைப் பள்ளி ஒன்று இங்கு உண்டு. மக்: 23.125 (1951).

இராசேந்திரன், கங்கைகொண்டான் : 1012-ல் தன் தந்தையான I-ம் இராசராசன் ஆட்சியிலேயே இளவரசனாக முடி சூட்டப்பெற்ற இராசேந்திரன் 1014-ல் மன்னனானான். முதலில் ஈழநாடு முழுவதையும் வென்றான். ஆனாலும் தென்பகுதியில் சோழசியை நிலையாக நிறுவ முடியவில்லை. பாண்டிய மன்னனும், கேரள மன்னனும் மறுபடியும் கலகம் செய்யாவண்ணம் அவர்களை வென்று, அவர்களுடைய நாடுகளை மாகாணங்களாக ஏற்படுத்தி, சோழ அரச வமிசத்தைச் சேர்ந்தவர்களையே அரசப் பிரதிநிதிகளாக நியமித்தான்.

வேங்கியில் சக்திவர்மன் இறந்த பிறகு விமலாதித்தன் மக்களான VII-ம் விஜயாதித்தனுக்கும் இராசராசனுக்கும் பட்டத்திற்குப் போட்டி ஏற்பட்டது. மேற்குச் சாளுக்கிய மன்னனான ஐயசிம்மன் விஜயாதித்தனுக்கு உதவினான். அப்போது இராசேந்திரன் இரண்டு படைகளை யனுப்பி, இராசராசனுக்காக வேங்கியைத் தன் வசப்படுத்திக்கொண்டு, ஐயசிம்மனைத் துங்கபத்திரைக்கு வடபால் தோற்கடித்துக் கலிங்கம் முதலிய நாடுகளை வென்றான். இவனுடைய போர் வீரர்கள் கங்கைக்கரை வரையிலும் சென்று தங்களுடைய வீரத்தை நிறுவினார்கள். இராசேந்திரனும் 'கங்கை கொண்டான்' என்னும் பெயர் புனைந்தான். இந்தத் திக்குவிசயத்திற்குப் பிறகு கங்கைகொண்ட சோழபுரம் என்னும் ஒரு புதிய நகரத்தையும் அமைத்தான். இவன் காலத்தில் நடந்த முக்கியமான நிகழ்ச்சி ஸ்ரீ விஜயத்தோடு (மலேயா, சுமாத்ரா, மேற்கு ஜாவா அடங்கிய இராச்சியம்) நடத்திய போர். பெரிய கப்பற்படையைத் திரட்டிக் கொண்டு பல தீவுகளையும் நகரங்களையும் கைப்பற்றி, இறுதியாக அந்நாட்டின் முக்கியத் துறைமுகமான கடாரத்தையும், ஸ்ரீவிஜயநகரத்தையும் கைப்பற்றி, அவற்றை அந்நாட்டு மன்னனுக்கே திருப்பித்தந்து சமாதானம் செய்துகொண்டான். இவன் ஆட்சியின் இறுதிக் காலத்தில் மேற்குச் சாளுக்கியர்களுடன் மறுபடியும் போர் தொடங்கிற்று. இராசேந்திரன் ஒரு பெரும்படையை யனுப்பினான். 1044-ல் இவன் இறந்து விட்டதால் இவன் மகன் I-ம் இராசாதிராசன் அந்தப் போரை வென்று முடித்தான்.

தன் தந்தை கட்டிய கோயிலைப் போலவே இராசேந்திரனும் கங்கைகொண்ட சோழபுரத்தில் ஒரு பெரிய கல் தளியைக் கட்டினான். சோழர்களின் கோயில் திருப்பணிகளில் இவ்விரண்டு தளிகளும் தலைசிறந்தன. இராசேந்திரனால் சோழர்களுடைய பெருமை வட இந்தியாவரை நிலைநாட்டப்பட்டதோடு வங்காள விரிகுடா சோழ ஆதிக்கத்தின் கீழ் வந்தது. இவன் காலத்தில் கீழ்நாடுகளுடன் வியாபாரம் பெருகிற்று. கூ. ரா. வே.

இராணாசங்கா (?-1529) ராஜபுதனத்திலுள்ள மேவாரையாண்ட அரசர்களில் ஒருவன். இவன் பெயர் சங்கிராம் சிங் என்பது. இவன் 1509-1528 வரை மேவாரை யாண்டான். இவன் பிருதிவி ராஜ், ஜைமால் என்னும் தன் இரு சகோதரர்களோடு வார்சுத் தகராற்றில் ஈடுபட்டுச் சிலகாலம் நாடுநீங்கியிருந்தான். இவ்விரு சகோதரர்களும் இறந்துபடவே, இவன் மேவாரையடைந்து, அந்நாட்டையாண்டு வந்தான். அக்காலத்தில் டெல்லியை யாண்டுவந்த முகம்மதிய அரசன் இப்ராகீம் லோடி என்பவன். இந்தியாவில் முகம்மதியர் அரசை முறியடிக்க விரும்பிய இராணாசங்கா பன்முறை போரில் ஈடுபட்டான்; பல வெற்றிகளையும் கண்டான். 1517-ல் II -ம் முகமது என்னும் மாளவ அரசனைத் தோற்கடித்துச் சிறை பிடித்தான். இவன் மற்றும் ராஜபுதனத்திலேயே பெரு வீரன் என்னும் புகழும் பெற்றான். ஆயினும் டெல்லி சுல்தானான இப்ராகீம் லோடியைத் தான் ஒருவனே தோற்கடிக்க இயலாது என்று உணர்ந்த சங்கா, காபுலில் இருந்த மொகலாய வீரனான பாபர் இந்தியாவின் மீது படையெடுத்து இப்ராகீம் லோடியைத் தோற்கடித்து விட்டால், பிறகு தான் பாபரை வென்று டெல்லியில் இந்துராச்சியத்தை நிறுவலாம் என்று எண்ணினான். ஆனால் 1526-ல் பானிபட்டுப் போரில் இப்ராகீம் லோடியை வென்ற பாபர் இந்தியாவிலேயே தங்கிவிடத் தீர்மானித்தது சங்கிராம் சிங்கிற்குப் பெரிதும் ஏமாற்றமாயிற்று. 1527-ல் கான்வா என்னுமிடத்தில் தோற்றுப்போனான். சங்கா மனமுடைந்து 1529-ல்