பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இராமாயணம்

74

இராமானந்தர்

வைராக்கியம் நிறைந்தவன். மேலும் புத்தருடைய பழம் பிறப்பு வரிசையிலும் இராமனுடைய அவதாரம் ஒன்றிருக்கிறது.

இராமாயணத்தில் காணும் சில கிளைக்கதைகளை யொத்திருக்கும் ஜாதகக் கதைகள் இன்னும் சில உண்டு. நாம ஜாதகம் என்னும் கதை தசரதனுக்குச் சாபம் வந்த வரலாற்றையும், வெஸ்ஸந்தர ஜாதகம் என்னும் கதை இராமன் காட்டுக்குப் போகும் போது சீதை தானும் அவனுடன் வருவதாக வருந்தி வேண்டிக்கொள்ளும் காட்சியையும், சம்புல ஜாதகம் சூர்ப்பணகி இராமனை விரும்பிக் காதும் முக்கும் இழந்ததையும் பெரும்பாலும் ஒத்திருக்கின்றன. காலத்தால் இந்த ஜாதகக் கதைகள் முந்தினவோ வால்மீகி ராமாயணம் முந்தினவோ என்பது ஆராய்ச்சிக்குரியது. இவ்விரண்டுக்கும் ஆதாரமான கதைகளும் பாடல்களும் நாட்டு மக்களிடையே பூர்வகாலந்தொட்டு வழங்கி வந்திருக்கலாம். இவ்வாறே பாரதத்தில் வரும் கதைகளை யொத்தவையும் ஜாதகங்களில் உண்டு.

இலங்காவதார சூத்திரம் என்னும் பௌத்த நூல் ஒன்றில் இராவணனுடைய பெயர் வருகிறது. அதில் அவன் பெருந் தவவொழுக்கம் பூண்டவனாய் அறத்தில் பெரு விருப்புள்ளவனாய்ப் புத்தரோடு உரையாடுகின்றான்.

ஜைன ராமாயணங்கள்

பிராகிருதம், சமஸ்கிருதம், கன்னடம் ஆகிய மொழிகளில் ஜைன ராமாயணங்கள் தழைத்திருந்தன எனத்தெரிகிறது. கூசி பட்டாரகன், நந்திமுனிவரன், கவிபரமேஷ்டி இரவிஷேணாரியன், வீரசேனன், சித்த சேவன், பதுமநந்தீசன், குணபத்திராசாரியன், சகல கீர்த்தி முதலிய பலர் இந்தக் கதையை எழுதினர். இவர்களில் இரவிஷேணரும் குணபத்திரரும் இயற்றிய இராமாயணங்கள் இன்றும் இருக்கின்றன.

ஜைனருடைய இராமாயணங்கள் அவர்களுடைய சமய நோக்கத்திற்கு ஏற்றவாறு அமைந்துள்ளன. 'ஆதி தீர்த்தங்கரராகிய புருதேவர் தம் மகனாகிய பரத சக்கரவர்த்திக்கு இராமாயணக் கதையைச் சொன்னார்; அது பரம்பரையாகக் கடைசித் தீர்த்தங்கரர் மகாவீரருக்கு வந்தது; அவர் மகத தேசத்து அரசன் கிரேணிகனுக்குச் சொன்னார்" என்று இந்தக் கதை வந்த வரலாறு சில ஜைன நூல்களில் சொல்லப்படுகிறது. இதற்கு மாறாக இராமாயணக் கதை இருபதாம் தீர்த்தங்கரராகிய முனி சுவீரதர் காலத்தில் நடந்ததாக ஜைன புராணங்கள் கூறுகின்றன.

இப்போதுள்ள ஜைன ராமாயணங்களில் பழையது விமலசூரி எழுதிய பஉம சரிய (பரம சரிதம்) என்பது. இது மகாராஷ்டிரி பிராகிருதத்தில் எழுதியிருக்கிறது. மகாவீரர் நிருவாணத்திற்கு 530 ஆண்டு சென்ற பிறகு இதைத் தாம் எழுதுவதாகக் கவி சொல்லிக்கொள்ளுவதால் இது கி. பி. 3ஆம் ஆண்டில் இயற்றப்பட்டதெனத் தெரிகிறது.

சமஸ்கிருதத்தில் கிடைத்திருக்கும் ஜைன ராமா யணங்களில் இரவிஷேணருடைய பத்ம புராணம் அல்லது மகாராமாயணம் என்பதே மிகப் பழையது. இது கி.பி. 678-ல் தோன்றியது. கி.பி.12ஆம் நூற்ண்டில் ஹேமசந்திராசரரியர் திரிஷஷ்டி சலாகா புருஷர் சரிதம் என்னும் நூலை எழுதினார். அதன் ஏழாவது பருவமாக இராமாயணக் கதை வந்திருக்கிறது. தேவவிஜயகணி கி. பி. 1596-ல் சமஸ்கிருத உரை நடையில் இராம சரிதத்தை எழுதி யிருக்கிறார்.

கன்னட இலக்கியத்தில் பம்ப ராமாயணம், குமுதேந்து ராமாயணம். இராம விஜய சரிதம், இராம கதாவதாரம், ஜினராமாயணம் என்பவை நன்கு அறியப்பட்டவை. இவற்றுள் பம்ப ராமாயணம் என்னும் புகழ்பெற்ற உரையிடையிட்ட செய்யுள் நூல் ஆறாம் சாளுக்கிய விக்கிரமாதித்தன் (1076-1126) காலத்தில் 1100 வாக்கில் நாகசந்திரர் என்பவரால் இயற்றப்பட்டது.

பம்ப ராமாயணம் ஜைன ராமாயணங்களின் போக்கைக் காட்டுவதற்கு ஒரு நல்ல உதாரணம். கதை பொதுவாக வால்மீகி ராமாயணத்தை ஒத்திருக்கின்றது. எனினும் பல வேறுபாடுகள் காணப்படுகின்றன. தசரதன், ஜனகன், அனுமான், இராவணன் முதலிய எல்லோரும் ஜைன சமயத்தினர். அனுமான், சுக்கிரீவன் முதலானவர்கள் குரங்குகள் அல்லர். அவர்கள் குரங்குக் கொடியை யுடையவர்கள். அவர்களும் இராவணன் முதலியோரும் வித்தியாதரர்கள். அவர்கள் இராவணனுக்கு நெருங்கிய உறவினர். தசரதன் மக்கட்பேற்றை விரும்பி வேள்வி செய்வது இந்நூலில் இல்லை. விசுவாமித்திரன் பேச்சே இல்லை. தாடகை, அகவியை வரலாறுகள் இல்லை. மாரீசன் மானாக வருவதில்லை. வாலி வதையும் இல்லை. வாலி சுக்கிரீவனுடைய அண்ணனே. ஆனால் அவன் பெருந்தவஞ் செய்யும் சீலமிக்க முனிவன். இராமன் வெண்மை நிறமுடையவன்; இலட்சுமணனே கரியோன். இராவணன் மடிவது இலட்சுமணனால். இராவணனுக்குப் பத்துத் தலையில்லை. அவன் பிறந்து பத்து நாள் குழந்தையாக இருந்தபோது ஓர் அரக்கன் ஓர் அணியைக் கொண்டுவந்து குழந்தைக்கு அணிவிக்கின்றான். அதில் பதித்திருந்த ஒன்பது மாணிக்கங்களிலே குழந்தையின் தலை நிழல்கள் தெரிந்தன. குழந்தையின் தலையோடு சேர்த்துப் பத்துத் தலைகள் தோன்றினமையால் அதற்குத் தசமுகன் எனப் பெயரிட்டனர்.

ஜைன ராமாயணங்களில் இராவணனுடைய பண்புகள் மிகச் சிறந்தனவாக இருக்கின்றன. அவன் கல்வியிற் பெரியவன் ; கலை மலிந்தவன்; வீரம் மிக்கவன்: பெருந்தன்மையும் பேரிரக்கமும் நிறைந்தவன்; தூய ஒழுக்கமுடையவன். இத்தகைய இராவணன் சீதையின் பொருட்டுத் துயருற்றான். இவன் வரலாற்றைப் படிப்போர் இவனிடத்து இரக்கங்கொள்ளுமாறு இவனது பாத்திரம் ஜைன ராமாயணங்களில் வருணிக்கப்பட்டிருக்கிறது. (கம்பராமாயணம் த.க.)

இராமானந்த சுவாமிகள் (18ஆம் நூ. முற் பகுதி) சங்கற்ப நிராகரணம் என்னும் வேதாந்த நூல் இயற்றியவர். இது அருணாசல சுவாமிகள் என்பவர் உரையுடன் வழங்குகிறது.

இராமானந்தர் வைஷ்ணவ ஆசாரியர். இவர் 1299 முதல் 1410 வரையில் நூறு ஆண்டுகளுக்குமேல் வாழ்ந்தவர் எனத் தெரிகிறது. இவர் பிரயாகையில் பிராமண குலத்தில் பிறந்தவர். இவருடைய பெற்றோர் புண்ணியசதன், சுசீலா என்போர். தம்முடைய குழந்தை மிக்க திறமையுள்ளவனாக இருப்பதைக்கண்ட பெற்றோர் இவரைக் கல்வி கற்பதற்காகக் காசிக்கு அனுப்பினர். அங்கு இராமானுசருடைய கொள்கையைத் தழுவிய இராகவானந்தர் என்பவருக்கு மாணாக்கரானார். அவரிடம் வைஷ்ணவ சமயக் கோட்பாடுகளைக் கற்றுக்கொண்டு, பிறகு பல தலங்களுக்கு யாத்திரையாகப் புறப்பட்டார். திரும்பி வந்தபோது இவருடைய இனத்தினர் இவர் யாத்திரையின்போது பல