பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இராமாயணம்

73

இராமாயணம்

ஏமாந்து, தருமத்தால் கட்டுண்டு துடிக்கும் தசரதன், தூய்மையுள்ளத்தில் குடிகொண்ட இராம பக்தியால் செய்ய முடியாத செயல்களைச் செய்த அனுமான், இணையற்ற தோழனான சுக்கிரீவன், தான் தருமத்தைக் கடைப்பிடித்தும் தப்புவழியில் சென்ற தன் அண்ணனைத் துறந்தும் இராமனையடைந்த விபீஷணன், தப்பென்று தெரிந்தும் அண்ணனென்று கட்டுப்பட்டு உயிர் மாய்ந்த கும்பகர்ணன் இவர்கள் போன்ற நூற்றுக் கணக்கான பாத்திரங்களை மறக்கவொண்ணாத வகையில் தோற்றுவித்து, அவர்கள் வாயிலாகக் கவி உலகப் போக்கையும் மனித இருதயத்தின் மருமங்களையும் அழிவில்லாத தருமத்தையும் ஒருங்கே விளக்குகிறார்.

கவிப் பண்பு : அரக்கர்களையும் குரங்கு முதலிய விலங்குகளையும் ஒருபுறமும், தேவதைகளை இன்னொரு புறமும் மானிடக் கதையில் கலத்தல் ஒவ்வாதென்றும், அதனால் சுவை குன்றிவிடுமென்றும் எண்ணுபவர், ஹோமர், மில்ட்டன் முதலிய கவிகள் இதையே ஓரளவு செய்திருக்கிறார்கள் என்பதைக் கவனிக்க வேண்டும். பத்துத்தலை, மூன்றுகண், தலை உச்சியில் காது என்றெல்லாம் வருணிக்கப்பட்ட பாத்திரங்கள் இயற்கைக்கு மாறாகத் தோன்றலாம். ஆனால், இந்தியச் சிற்பங்களிலும் ஓவியங்களிலும் போலவே இலக்கியத்திலும் இயற்கையைப் படம் பிடிப்பதுபோல் காட்டுவதைப் பேராசிரியர்கள் மேலான கலையாக எண்ணுவதில்வை. அழகு, சக்தி, காம்பீரியம் முதலிய குணங்களையும், அவைகளுக்கும் மாறான தீய பண்புகளையும் படிப்பவர் மனத்தில் பதியும்வண்ணம் சங்கேதமான பல ஆச்சரிய உருவங்களையும், அமானுஷமான காரியங்களையும் கொண்டு வால்மீகி சித்திரித்திருக்கிறார். உடல் வலியால் கட்டுக்கடங்காமல் பிறரைத் துன்புறுத்தினோரை அரக்கரென்றும், நிலையற்ற உள்ளத்தினரைக் குரங்குகளென்றும் இயல்பையொட்டி மனிதர்களையே வால்மீகி வகுத்திருக்கிறார் என்றுகூடச் சொல்லலாம். அஃதெப்படியாகிலும் எல்லாப் பாத்திரங்களுமே உள்ளே பொதிந்த உண்மையால் படிப்போர் மனத்தைத் தம்வசமாக்குகிறார்கள். இன்பதுன்பங்கள் மண்ணிலுதித்த எல்லோருக்குமுண்டு. அவற்றைத் தாங்குவதில்தான் அவரவர்களுடைய ஆன்ம குணங்கள் தென்ளெனத் தெரியும் என்பதைக் கதைப் போக்காலும் பாத்திரங்களின் நடத்தையாலும் கவி விளக்குகிறார்.

சுவைகள் ஒன்பதும் இராமாயணத்தில் பொருத்தமாக அமைந்திருக்கின்றன. இவைகளுக்கெல்லாம் மேற்பட்ட சாந்த ரஸம் இராமாயணத்தின் சிறந்த விளைவு என்று பவபூதி மகாகவி மெச்சியிருக்கிறார். உவமைக்குக் காளிதாசன் என்பது முதுமொழி. ஆனால் இராமாயணமே உவமை பிறந்த இடம் என்றாலும் மிகையாகாது. இயற்கை வருணனையிலோ, மனித வாழ்க்கையைச் சித்திரிப்பதிலோ மிகைபடக் கூறலைக் கையாளாது, தன்மை நவிற்சி என்ற முறையில் மிகச் சிக்கனமாகச் சொற்களை உபயோகித்துக் கருத்தைப் பளிங்குபோல விளக்கும் ஆற்றல் வால்மீகியின் தனிச்சிறப்பு. தொனி என்ற காவியப் பண்பை விளக்குவதற்கு இராமாயணத்திலிருந்து பல மேற்கோள்கள் காட்டப்படுகின்றன. இராமாயணத்தின் நடை மிக எளிதானது. வால்மீகி தாம் கையாளும் அனுஷ்டுப் சுலோகத்தில் சமயத்திற்குத் தகுந்தாற்போல் பல நுட்பமான மாறுதல்களைச் செய்து அழகுபடுத்தியிருப்பதால் இந்தச் சுலோகங்களை நூற்றுக் கணக்காகப் படித்தாலும் அலுப்பதில்லை. உரைகள், வழிநூல்கள் முதலியன : இக்காவியத்திற்குப் புகழ்பெற்ற பல உரைகள் உண்டு. அவைகளில் முக்கியமானவை கோவிந்தராஜர், மகேசுவர தீர்த்தர், நாகோஜிபட்டர் இவர்களால் செய்யப்பட்டவை. உடாலி வரதராஜர் இயற்றிய உரையும், கந்தாடை இராமானுஜர் இயற்றிய உரையும் பழமையானவை. கதகயோகீந்திரர் இயற்றிய கதகம் என்னும் உரை சுத்த பாடத்தைத் தீர்மானிப்பதற்குப் பெரிதும் துணை புரிவதாகப் போற்றப்பட்டு வந்திருக்கிறது. இவை மூன்றும் இன்னும் அச்சேறவில்லை. தர்மாகதம் என்ற 17ஆம் நூற்றாண்டு உரை திரயம்பகராய மகி என்பவரால் செய்யப்பட்டது. இதில் சில பகுதிகள் அச்சாகியிருக்கின் றன.

பத்மபுராணம், பாரதம், பாகவதம் முதலிய நூல்களில் சிற்சில மாறுதல்களுடன் இராமகதை சொல்லப்படுகிறது. கம்பர் தமிழிலும், கிருத்திவாசர் வங்காளத்திலும், துளசிதாசர் இந்தியிலும் வால்மீகியை ஆதாரமாகக் கொண்டு விரிவான மகா காவியங்களைச் செய்துள்ளார்கள். சமஸ்கிருதத்தில் காளிதாசன் முதலிய பெரிய கவிகள் ஒவ்வொருவரும் இராமன் கதையில் ஏதாவது ஒரு பாகத்தைச் சொல்லவேண்டுமென்பதை ஒரு நோன்பாகக் கொண்டவர்கள்போல் அழகான காவியங்களை இயற்றியிருக்கிறார்கள். இந்திய மொழிகளிலும் ஐரோப்பிய மொழிகளிலும் வசன நடையிலும் செய்யுளாகவும் பல பெயர்ப்புக்கள் வெளிவந்துள்ளன. ந. ரா

பௌத்த ராமாயணம்

சமஸ்கிருத இலக்கியத்தில் வால்மீகி ராமாயணம் ஒன்றே யல்லாமல் இன்னும் அற்புத ராமாயணம் அத்யாத்ம ராமாயணம், ஆனந்த ராமாயணம் வாசிஷ்ட ராமாயணம், சேஷ ராமாயணம் என்ற பலவகையான இராமாயணங்கள் உண்டு. இவற்றைப் போலவே பௌத்த ஜைன ராமாயணங்களும் உண்டு. இத்தனை வகையான இராமாயணங்கள் பிறப்பதற்குத் தக்க காரணங்கள் இருக்கவேண்டும். அவற்றில் சமயம் முக்கியமானதெனக் காண்கிறது. அற்புத ராமாயணத்தில் சாக்தேய மதத்தின் பிரபாவம் தெரிகிறது. பௌத்த ராமாயணக் கதையில் பௌத்தர்களுடைய மதக் கொள்கை காண்கிறது. அவர்களுடைய ஜாதகக் கதைகளில் தசரத ஜாதகம் என்பது இந்த நோக்கத்தோடு கவனிக்கத்தக்கதாக இருக்கின்றது. அதில் இராவணனைப் பற்றிய குறிப்பே இல்லை. சீதையை எடுத்துச் செல்லுதலும் அதற்குமேல் நடக்கும் நிகழ்ச்சிகளும் சொல்லப்படவில்லை. இராமனும் இலட்சுமணனும் சீதையும் தசரதனுடைய அரசியரில் ஒருத்தியின் வயிற்றில் பிறந்தோர். இராமனும் இலட்சுமணனும் சீதையின் அண்ணன்மார். தசரதனுடைய அரசியரில் முக்கியமான மற்றொருத்தியின் மகன் பரதன். இந்த அரசிக்குத் தசரதன் என்றே ஒரு வரம் கொடுத்திருந்தான். இராமனுக்கு முடிசூட்டும்பொழுது இந்த வரம் அதற்குத் தடையாகி, இராமன் இலட்சுமணன் சீதை ஆகிய மூவரும் காட்டுக்குப்போக நேர்ந்தது. பிறகு தசரதன் இறந்தான். பரதன் தன் அண்ணனிடம்போய் அரசைக் கைக்கொள்ளுமாறு வேண்டினான். எனினும் குறித்த கால எல்லை முடியும்வரையும் அவன் நாட்டுக்குத் திரும்பவில்லை. அக்காலம் முடிந்த பிறகு அவன் திரும்பிவந்து சீதையை மணந்துகொண்டு சுகமாக அரசு செய்தான். அண்ணன் தங்கையை மணந்துகொள்ளும் வழக்கம் புத்தர் பிறந்த சாக்கிய குலத்தில் இருந்தது எனத் தெரிகிறது. இந்தக் கதையில் வரும் இராமன் சத்துவ குணமே முதன்மையாக உடையவன்; புத்தருக்கு இணையான தன்மையன்;

10