பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இராமாயணம்

72

இராமாயணம்

நான்கு திக்குக்களிலும் சீதையைத் தேடச்சென்ற வீரருள் தெற்கே சென்ற அங்கதன், ஜாம்பவான், அனுமான் முதலியோர் சீதை இலங்கையிலிருப்பதாகச் சடாயுவின் அண்ணன் சம்பாதி சொல்லக்கேட்டு, இலங்கையை அடைய நூறு யோசனை அகலமுள்ள சமூத்திரத்தைத் தாண்டவேண்டி யிருந்ததால் அதைச் செய்யச் சக்திவாய்ந்தவன் அனுமானே என்று துணிந்து அவனை வேண்டினர்.

சுந்தர காண்டம் : அனுமான் பல ஆச்சரியச்செயல்களைச் செய்து, கடலைக் கடந்து, சீதையைக் கண்டு, இராமன் அடையாளமாக அளித்த கணையாழியைத் தந்து, அவள் மனச்சோர்வை நீக்கி, அவள் விடுத்த செய்திகளைக் கேட்டு, அடையாளமாகக் கொடுத்த சூடாமணியைப் பெற்று, அசோகவனத்தை அழித்து, எதிர்த்த அரக்கர்களை அடித்து, இந்திரஜித்தின் பிரம்மாஸ்திரத்தால் கட்டுண்டு, இராவணனுக்குப் புத்திகூறி, அவன் உத்தரவின்மேல் அரக்கர் தன் வாலில் துணியைச் சுற்றி நெருப்பு வைக்க, அந்தத் தீயைக் கொண்டு இலங்கையைக் கொளுத்தித் திரும்பி, சமுத்திரத்தைத் தாண்டித் தோழர்களுடன் இராமனடி சேர்ந்தான்.

யுத்த காண்டம்: இராமன் வானர சேனையுடன் கடலை அடைந்து, தன்னைச் சரணடைந்த இராவணனுடைய கடைத்தம்பியும் யோக்கியனுமான விபீஷணனுக்கு இலங்கையரசைக் கொடுப்பதாக வாக்களித்துக் கடலில் அணைகட்டி இலங்கையை அடைந்து, இராவணன், கும்பகர்ணன், இந்திரஜித்து முதலிய மகாவீரர்களையும் கோடிக் கணக்கான அரக்கர்களையும் கொன்று, இலங்கையைக் கைப்பற்றிச் சீதையை விடுவித்து விபீஷணனுக்கு முடி சூட்டினான். இராவணனுடைய அந்தப்புரத்தில் தங்கின சீதையின் நடத்தையை உலகம் ஐயுறுமென்று எண்ணி, இராமன் அவளை ஏற்க மறுக்கவே, துக்கத்திலாழ்ந்த சீதை தீயிலிறங்கினாள். பிரமன் முதலிய எல்லாத் தேவதைகளும் இராமனுக்குக் காட்சியளித்துச் சீதையின் கற்பைப் புகழ்ந்து, இராமன் விஷ்ணுவின் அவதாரம் என்பதை அவனுக்கு நினைவூட்டிச் சென்றனர். இராமன் சீதையுடன் அயோத்திக்குத் திரும்பிப் பரதனிடமிருந்து இராச்சியத்தைப் பெற்று மனுநீதி வழுவாது அரசு புரிந்தான்.

உத்தர காண்டம்: அயோத்திக்குத் திரும்பினபிறகு சிறிது காலத்தில் சீதை கருத்தரித்தாள். அவளைப்பற்றி இராவணன் அரண்மனையில் தங்கினதற்காக ஊரார் வம்பு பேசு, அதைத் தாங்காமல் இராமன் இலட்சுமணனைக் கொண்டு அவளை மறுபடியும் காட்டில் விட்டு வரச் செய்தான். துணையற்றுத் துடிக்கும் அவளை வால்மீகி ரிஷி கண்டு, அருகிலுள்ள தமது ஆச்சிரமத்திற்கழைத்துச் சென்றார். அவள் உரிய காலத்தில் இரு பிள்ளைகளைப் பெற்றாள். வால்மீகி இவர்களுக்குக் குசன், லவன் என்று பேரிட்டுத் தாம் முடித்திருந்த இராம சரிதத்தைக் கற்பித்தார். கந்தருவர் போன்ற குரல்வாய்ந்த குழந்தைகள் அதைப் பாடிப் புகழ்பெற்றுவருகையில் இராமன் அசுவமேதம் செய்வது தெரிந்து, வால்மீகி தம் சீடர்களுடன் யாகத்திற்குச் சென்றார். தற்செயலாகக் குசலவர்கள் இசையைக்கேட்டு மகிழ்ந்த இராமன் வால்மீகி வாயிலாகச் சீதை உயிருடன் இருப்பதறிந்து, அவளை வரவழைத்து, அவளுடைய கற்பில் குடிகளுக்கு நம்பிக்கை வரும்படி அவள் செய்யவேண்டுமென்று வேண்ட, சோகமே உருவான சீதை தான் பதிவிரதை என்பது உண்மையானால் தன் தாய் பூமி தேவி தன்னை எடுத்துச் செல்லுக என்று கதற, நிலம் வெடித்துட் பூமிதேவி வெளிப்பட்டுச் சீதையை மார்புடன் அணைத்து மறைந்தாள். உலகம் துயருற்றது. இராமன் தன் மனத்தைச் சமாதானம் செய்துகொண்டு சிலகாலம் அரசுபுரிந்து, பிள்ளைகளுக்கு முடிசூட்டித் தம்பிகளுடனும் தன் பக்தர்களான அயோத்தி வாசிகள் அனைவருடனும் வைகுண்டம் சென்றான்.

கதாபாத்திரங்கள் : அறம் பொருள் இன்பம் என்ற மூன்று பால்களையும் விளக்க வந்த இராமாயணம் அறத்துக்கே முதன்மையளிக்கிறது. தருமத்துக்கு விரோதமில்லாத காமத்தையே இராமன் விரும்பினான். இது காரணம் பற்றியே இராமனொருவனே இலட்சிய புருஷன் என்று இராமாயணக் காலமுதல் பாரத மக்கள் நம்பியும் அவனைப் பின்பற்றி நடப்பதே தருமம் என்று துணிந்தும் வந்திருக்கிறார்கள். இதற்கு நேர்மாறாக இராவணன் தருமத்தை மீறிக் காமத்தில் அழுந்தியதால் அவனுடைய வீரியம், படிப்பு, புத்திக் கூர்மை முதலியன பயனற்றவாயின. அவன் மூன்றுலகங்களையும் வருத்தியதுமல்லாமல் தருமத்திற்கு மாறான மனப்பான்மையும் பண்பாடும் வளரக் காரணமானான். இவைகளை மாற்றுவது தெய்வத்தாலே தான் முடியும் என்பதைக் காட்டுவதற்குப் போலும் வால்மீகி உலகத்தைக் காக்கும் தொழில் புரியும் திருமாலே மனிதனாக வந்தார் என்று கூறுகிறார். இராமன் மனிதர்களுடன் மனிதனாக நடந்தும், அவர்களுக்கு நேரும் சுகதுக்கங்களைச் சமமாக அனுபவித்தும்,தருமத்தைக் கைவிடக் கூடாதென்ற பிடிவாதத்தை நிறைவேற்றியும் உலகத்தாருக்கு வழிகாட்டியானான். அரசன் தப்புச் செய்தவர்களைத் தண்டிக்க வேண்டுமாதலால் வாலியைக் கொன்றான். தருமத்தைப் பின்பற்றுவதால் எத்துன்பம் நேரிடினும் சகித்துக்கொள்ள வேண்டுமென்றும், உலகம் நெறி தவறாது கடக்கச் செய்வதில் தன்னவர் பிறர் என்ற வேறுபாடின்றி நடந்துகொள்ள வேண்டு மென்றும் செய்கையில் காட்டினான். இராச்சியத்தைத் துறந்ததிலும் சீதையை நெருப்பிலிறங்கச் செய்ததிலும் தன் உத்தரவு மீறின இலட்சுமணனைத் துறந்ததிலும் அவனுடைய வைராக்கியம் வெளியாகிறது. இப்படிச் செய்தவன் கல்நெஞ்சுக்காரன் என்று நாம் எண்ணா வண்ணம் சீதையிடமும் இலட்சுமணனிடமும் அவன் வைத்திருந்த அளவு கடந்த அன்பு சான்றாக இருக்கிறது. அவன் உலகத்தை வெறுத்தவனும் அல்லன் என்பது அவனை மன்மதனுக்கு மன்மதனாகவும் வீரர்கள் போற்றும் வீரனாகவும் கவி சித்திரிப்பதிலிருந்து தெளிவாகிறது. "அர்த்தம்,தர்மம் என்ற இரு பகுதிகளையும் செவ்வனே தழுவிச் சோம்பலின்றிச் சுகத்தைத் தேடினான் " என்பதும் கவிக் கூற்று. இராமனை இலட்சிய புருஷனாகக் கொண்டதுபோலவே சீதையை ஒப்புயர்வில்லாப் பெண்மணியாகவும் கற்புடைய மாதருக்குக் கண்ணாடியாகவும் நம் மக்கள் போற்றி வருகிறார்கள். இராமனுக்கும் சீதைக்குமிடையே உள்ள அன்பிற்குச் சமமான அன்பு உலக இலக்கியங்களில் காண்பதரிது. அந்த அன்பே தருமத்தின் அரணாக நிற்கிறது.

கதையில் வரும் மற்றப் பாத்திரங்களும் உயிர் ததும்பி நிற்கிறார்கள். அரை சுலோகத்தில் ஒரு பாத்திரத்தை உயிர்ப்பிக்கும் ஆற்றல் வால்மீகியின் தனிச்சிறப்பு. இலட்சுமணன், பரதன் இருவரும் தமையனிடம் அன்பு பூண்டவர் என்றாலும், அண்ணனுக்குப் பணிவிடை செய்வதில் பிடிவாதம் காட்டும் இலட்சுமணனுக்கும் அண்ணன் சொல்லைச் சட்டமாக நினைத்து நடக்கும் பரதனுக்கும் வேற்றுமை நன்கு புலப்படும். தாயன்பே உருவான கோசலை, ஞானியான சுமித்திரை, செருக்கு வாய்ந்த கைகேயி, சற்றே காமத்தில்