பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இராமேசுவரம்

77

இராஸ்

ஒப்பாவார். சொந்தக் கற்பனையே இவருடைய தனிச் சிறப்பாகும்.

இராமேசுவரம் இராமநாதபுரம் மாவட்டத்தில் பாக் ஜலசந்தியிலுள்ள ஒரு தீவிலுள்ள பட்டணம். புகைவண்டி நிலையம் உடையது. மக்: 5.419 (1951). இராவணன் முதலியோரை இராமபிரான் கொன்ற பழி தீரச் சிவலிங்கத்தை நிறுவி வழிபட்ட தலம் என்று தேவாரம் கூறுகிறது. கோவிலுக்குக் கிழக்கே இருக்கும் கடல், அக்கினி தீர்த்தம் என்று பெயர்பெறும். கோவிலுக்குள் இருப்பது கோடி தீர்த்தம். சீதை பிடித்து வைத்ததும், இராமர் பூசித்ததுமான இலிங்கம் இராமலிங்கம். அம்மன் மலைவளர் காதலி (பர்வதவர்த்தினி). அனுமார் கொண்டுவந்த இலிங்கம் காசி விசுவநாதர். சேதுமாதவப்பெருமாள் சந்நிதி தனியாக இருக்கின்றது. இராமேசுரத்திற்குத் தெற்கே 12மைலில் தனுஷ்கோடி இருக்கிறது. இங்குக் கடலாடுதுறை யிருக்கின்றது. இந்தத் தனுஷ்கோடி தீர்த்தமும் இராமேசுரத் தலத்திற்கு உரியது. திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் இத்தலத்தைப் பாடியிருக்கின்றனர். இதற்கு நிரம்பவழகிய தேசிகர் இயற்றிய சேது புராணம் என்னும் சிறந்த புராணம் உண்டு.

இங்குள்ள சிவன்கோவில் இராமரால் நிறுவப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இதன் நீளம் 1000 அடி, அகலம் 657 அடி. மேலை வாயிலில் மட்டும் முடிவு பெற்ற கோபுரம் இருக்கிறது. இக்கோவிலின் சில அமிசங்கள் தமிழ்நாட்டுக் கோவில் கட்டும் கலையின் திறனுக்கு எடுத்துக்காட்டாக உள்ளன. இதில் உள்ள நான்கு பிராகாரங்களில் மூன்று கூரையால் ஒன்று சேர்க்கப்பட்டிருப்பதும், மூன்றாம் பிராகாரத்தின் இரு புறங்களிலுமுள்ள மேடைகளின்மேல் வரிசையாக நிற்கும் தூண்கள் தாங்கிய கூரையினடியிலுள்ள நடையின் அழகும் குறிப்பிடத்தக்கவை. இக்கோவிலின் பெரும் பகுதி 15-16ஆம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்டது. இதன் கற்கள் இலங்கையிலுள்ள திரிகோணமலை என்ற இடத்தில் உருவாக்கிக் கொண்டுவரப்பட்டன என்று கூறப்படுகிறது. இதற்குக் காரணமாக இருந்தவர்கள் சேதுபதி அரசர்கள். இக்கோவிலின் நாலாம் பிராகாரத்தின் மேற்புறத்தில் உள்ள சிறிய சிவன் கோவிலே இங்கே உள்ள கட்டடங்களில் மிகப்பழையது. இங்கே சேதுபதி அரசர் அரசிகளின் உருவச்சிலைகளும் இன்னும் தமிழகத்தின் சுதையோவியக் கலையின் இறுதிக்கால முறையிலான ஓவியங்களும் இருக்கின்றன. தவிர இக்கோவிலில் பலவகை அழகிய வேலைப்பாடுகளமைந்த பழங்காலத்து நகைகளும் உண்டு. இக்கோவிலைத் தவிர இராமேசுவரத்தில் பல மண்டபங்களும் குளங்களும் உண்டு. பி. ஆர். ஸ்ரீ.

இராமையர் மாயூரத்தில் பிறந்த அந்தணர். ஐந்திலக்கணமும் நிரம்பியவர். இவர் இயற்றிய நூல்கள் திருமயிலைத் (மாயூரம்) திரிபந்தாதி, நாகூர்த்தல் புராணம் என்பவை.

இராவணன் விசிரவசுவிற்குக் கேகசியினிடம் பிறந்து இலங்கையை ஆண்ட அரசன். இவன் சீதையை அபகரித்து அசோக வனத்திற் சிறை வைக்க, இராம லட்சுமணர் சுக்ரிவன், அனுமன் முதலியோரின் துணை கொண்டு சென்று, போர் செய்து வென்று, சீதையை மீட்டனர். இராவணன் இராமனுடைய பிரமாத்திரத்தால் மாண்டான். இவன் சிவபெருமானிடம் பேரன்புடையவன். மூன்றுலகையும் ஆண்ட பெரு வீரமும் ஆற்றலும் உள்ளவன். பார்க்க: இராமாயணம்.

இராவணன் மீசை (இராவணன் புல்) கடலையடுத்த மணல்வெளிகளில் தாழ்ந்த புதர்போல வளரும் ஒருவகைப் பாவை புல். பலபருவத் தாவரம். இதில் ஆண் செடி வேறு, பெண் செடி வேறு. தண்டின்மேலும் இலைமேலும் நிலச் சாயையுள்ள பூச்சுப் படிந்திருக்கும். தண்டு வழுவழுப்பாகவும் உறுதியாகவும் அடியில் தடிப்பாகவும் இருக்கும். பல கிளைகள் விடும். கிளைகள் 5-10 அடி நீளமும் அதற்கு மேலும் நீண்டு, நிலத்தில் படிந்து வேரூன்றிக்கொண்டு படரும். இலையின் அலகு குறுகி விறைப்பாகவும் தடிப்பாகவும் கூரிய உறுதியான முள்போன்ற நுனியுள்ளதாகவும் பின்னுக்கு வளைந்து இருக்கும். 4-6 அங்குல நீளமிருக்கும். இலைகள் கொடிபோன்ற கிளைகளில் விறைப்பாகவும் கூராகவும் வளர்ந்திருப்பதால் இதனை இராவணன் மீசை என்கின்றனர்.

ஆண் செடியில் பூக்கொத்துப் பல கதிர்மஞ்சரிகள் உள்ளது. ஒவ்வொரு கதிரும் 1 - 3 அங்குல மிருக்கும். இவை குடைமஞ்சரிகளாகச் சேர்ந்திருக்கும். பெண் செடியில் பூக்கொத்துப் பெரிய உருண்டை வடிவான பூத்தலை (Head) யாக இருக்கும். இதிலுள்ள கதிர்கள் மிகச் சிறியவை. இவை நீண்ட கூரான, ஈர்க்குப் போன்ற காம்புகளுடன் சேர்ந்திருக்கும். ஈர்க்குக்கள் எல்லாத் திசையிலும் விறைப்பாக நீண்டுகொண்டிருக்கும். கதிர்கள் காய்ந்த பிறகு பூக்கொத்துச் செடியிலிருந்து விடுபட்டுக் கடற்கரை யோரத்தில் காற்றில் நெடுந்தூரம் உருண்டுகொண்டே ஓடும். இந்த விதமாக இந்தச் செடி பரவுகின்றது.

கடற்கரை மணல் அங்கங்கே குவிந்து, மணற் குன்றுகளாக நிலைத்து நிற்பதற்கு இந்தப் புல் உதவுகிறது. இதனோடு அடம்பு என்னும் முயற்காதுச் செடியும் எழுத்தாணிப் பூண்டு (லானியா) என்னும் சாமந்தி வகையைச் சேர்ந்த கொடியும் சாதாரணமாக வளர்கின்றன. மணல் இடம் பெயராமல் ஓரிடத்தில் கட்டுப்பட்டுக் கிடப்பதற்கு இச் செடிகள் உதவுகின்றன. இராவணன் மீசை கிராமினேசீ குடும்பத்தைச் சேர்ந்தது : ஸ்பைனிபெக்ஸ் ஸ்குவாரோசஸ் எனப்படும்.

இராஜபாளையம் இராமநாதபுரம் மாவட்டத்தில் ஸ்ரீ வில்லிப்புத்தூர் வட்டாரத்திலுள்ள பெரிய பட்டணம். ரெயில்வே நிலையம் உடையது.இங்குப் பருத்தித் தொழிற்சாலைகள் பல தோன்றி வருகின்றன. இங்குள்ள மக்களுள் பெரும்பாலோர் முன்னாளில் விஜய நகரத்திலிருந்து வந்து குடியேறிய ராஜாக்கள் என்னும் வகுப்பினராவர். இவர் தாய்மொழி தெலுங்கு. இப்பட்டணம் நகராண்மைக் கழகம் உடையது, மக்: 60,861 (1951).

இராஸ் (Eros) 1. கிரேக்கக் காதல் தேவதை ; வீனஸுக்கும் போர்க்கடவுள் மார்ஸுக்கும்பிறந்தவன். இவனை ரோமானியப் புராணம் கியூப்பிட் (Cupid) என்று கூறும். இவன் அம்பு பட்டவரே காதல் கொள்வார். ஒரு காலத்தில் இவன் தன்னுடைய அம்பு தைத்துச் சைக்கி(Psyche) என்னும் மானுட இளவரசியிடம் காதல் கொண்டான். அவள் இவனிடம் காதல் கொள்ளுமாறு செய்வதற்காகத் தேவர்கள் அவளுக்கும் சாகாவரம் அளித்தனர். இராஸ் துகில் புனையாத வனாயும் பொன் சிறகுகளுடையவனாயு மிருப்பான். இவனது முகத்தில் எப்போதும் முறுவல் தவழ்ந்து கொண்டிருக்கும். இவன் வில்லும் அம்பறாத் தூணியும் உடையவன்.

2. செவ்வாயின் பாதைக்கும் குருவின் பாதைக்கும் இடையில் சூரியனைச் சுற்றும் சிறு கிரகங்களில் ஒன்று.