பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திரி ஏரி

78

இருக்குவேளிர்

இது 1898-ல் கண்டுபிடிக்கப்பட்டது. வெள்ளியைவிடவும் செவ்வாயைவிடவும் பூமிக்கு அண்மையில் அதாவது 140 இலட்சம் மைல் தொலைவில் வரக்கூடும். இப்படி வரும் வேளையில் நடத்திய ஆராய்ச்சியின் பயனாக வானவியலார் வானவியல் அலகை, அதாவது சூரியனுக்கும் பூமிக்குமிடையிலுள்ள தொலைவை மிகத்துல்லியமாகக் கண்டுபிடித்தனர்.

இரி ஏரி வட அமெரிக்காவில் 'பெரிய ஏரிகள்' என்று வழங்கும் ஐந்தனுள் தென்கோடியிலுள்ளது. இதற்கு அமெரிக்க இந்தியர்கள் இட்டிருந்த பெயர் லாக் டு சாட் (பூனை ஏரி) என்பது. பின்னர்க் குடியேறிய பிரெஞ்சுக்காரர்கள் யாரி (சிறுத்தை) என்ற பெயரை இட்டனர். இதுவே ஆங்கிலத்தில் இரி என்று ஆகியிருக்கிறது. இதன் நீளம் 240 மைல், அகலம் 40-50 மைல், பரப்பு 9.940 ச. மைல். இது அதிக ஆழமில்லாதது. கானடாவுக்கும் அமெரிக்க ஐக்கிய நாட்டுக்கும் இடையே உள்ள எல்லைக்கோடு இவ்வேரியின் நடுவே செல்கிறது. இதில் பல தீவுகளும் பல துறைமுகங்களும் உள்ளன.

இரி கால்வாய் அமெரிக்க ஐக்கிய நாட்டில் நியூயார்க்கு இராச்சியத்திலுள்ளது. இது இரி ஏரியையும் ஹட்சன் ஆற்றையும் இணைக்கின்றது. கிளின்டன் என்பவரின் மேற்பார்வையில் 1825-ல் அமைக்கப்பட்டது. 339 மைல் நீளம், 150 அடி அகலம், 12 அடி ஆழம். இக்கால்வாயே நியூயார்க்கு நகரம் அமெரிக்காவில் நிதி படைத்த நகரங்களுள் தலையாயதற்குக் காரணம் என்பர். இதனுடன் வேறு மூன்று கால்வாய்களும் இணைக்கப்பட்டுள்ளன.

இரிடியம் (Iridium): பார்க்க: பிளரட்டின உலோகங்கள்.

இரி நகரம் இரி ஏரியிலுள்ள முக்கியமான துறைமுகப்பட்டினம். தொழிற்சிறப்புடையது. ஏரி கடல் மட்டத்திற்கு 113 அடி உயரத்தில் உள்ளது. ஆண்டில் 4,500 கப்பல்கள் வந்து போகின்றன. பல ரெயில் பாதைகள் இங்குக் கூடுகின்றன. பிரெஞ்சுக்காரர்கள் கோட்டை இருந்த இடம் இப்போது பூங்காவாக இருக்கின்றது. மக் : சு. 1,30,803(1950).

இருக்குவேளிர் புதுக்கோட்டையை யடுத்த கொடும்பாளுர், அன்னவாசல், ஒல்லையூர் (ஒலியமங்கலம்) ஆகிய மூன்று கூற்றங்கள் அடங்கிய நாட்டையாண்டவர். இவர்கள் தலைநகரம் கொடும்பாளூர். இக்கூற்றங்கள் கோன் நாட்டைச் சேர்ந்தவை. பூதிவிக்கிரமகேசரியால் கொடும்பாளூர் மூவர் கோயிலில் செதுக்கப்பட்ட கல் வெட்டில் பின்வரும் வமிசாவளி காணப்படுகிறது.

1.யானைப்படையை முறியடித்தவர். 2. அவர் வமிசத்தில் வந்த பரவீரஜீத். 3. மழவநாட்டை வென்ற வீரதுங்கன். 4. அதிவீர அனுபவன். 5. சங்ககிருது. 6. நிருபகேசரி. 7. வாதாபி வென்ற பரதுக்கமர்த்தனன். 8. சமராபிராமன். அதிராஜமங்கலப் போரில் சாளுக்கியனைக் கொன்றவன்; அநுபமா என்ற சோழ இளவரசியை மணந்தவன். 9. பூதிவிக்கிரமகேசரி. இவ்வமிசாவளியில் கண்ட பெயர்கள் எல்லாம் விருதாவளிகளே. இவை குறிக்கும் மன்னரது இயற்பெயர்கள் தெரியவில்லை. ஒன்று முதல் ஆறுவரை குறிப்பிடப்பட்ட அரசர்கள் சில சமயங்களில் பாண்டியர்களுக்கும் மற்றச் சமயங்களில் பல்லவர்களுக்கும் கீழ்ப்பட்டிருந்திருக்கவேண்டும்.

புதுக்கோட்டைக்கு அருகிலுள்ள தேனி மலையில் சு. 7ஆம் நூற்றாண்டில் செதுக்கப்பட்ட ஒரு கல்வெட்டில் இருக்குவேள் ஒருவன் அங்குள்ள ஜைன மடத்திற்குத் தான சாசனம் செய்ததாகக் கண்டிருக்கிறது. மேலே கண்ட வமிசாவளியிலுள்ள எந்த அரசன் இவன் என்று விளங்கவில்லை.

அறுபத்து மூவரில் ஒருவரான இடங்கழி நாயனாரை "ஆதித்தன் புகழ்மரபிற் குடிமுதலோர்" என்று சேக்கிழார் குறிக்கிறார். இவர் ஆதித்த சோழனுக்குத் தாய்வழியில் பாட்டனாரா யிருந்திருக்கவேண்டும். இவர் ஒருகால் மேற்கண்ட வமிசாவளியில் 5 அல்லது 6 இலக்கமிட்டவராக இருக்கலாம்.

கொடும்பாளூரிலுள்ள கோயில்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கல்வெட்டுக்களிலிருந்து பூதிவிக்கிரமகேசரியின் பாட்டனார் மாறன் பூதி என்ற தென்னவன் இளங்கோவேள் என்றும், பூதிவிக்கிரமகேசரியின் தகப்பன் மகிமாலயன் என்ற பராந்தக வீர சோழ குஞ்சர மல்லன் என்றும் ஊசிக்கலாம். ஆகையால் தென்னவன் இளங்கோவேள் மாறன் பூதி வமிசாவளியில் 7ஆம் இலக்கமிட்ட பரதுக்கமர்த்தனனும், பராந்தக வீர சோழ குஞ்சர மல்லன் 8ஆம் இலக்கமிட்ட சமராபி ராமனுமாக இருக்கக்கூடும்.

தென்னவன் இருங்கோவேள் என்பவன் 9ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்தவன். பராந்தக வீரசோழ குஞ்சர மல்லன் பராந்தகசோழன் காலத்தில் 10ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்தவன். பூதிவிக்கிரம கேசரி II - ம் பராந்தக சுந்தரசோழன் காலத்தில் வாழ்ந்தவன். இவர்கள் சோழரின் பேரரசு பெருகுவதற்கு உதவியாக நின்று, அவர்கள் போரில் தங்கள் வீரத்தை நிலை நாட்டியவர்கள். பூதிவிக்கிரமகேசரி பல்லவர்களையும் பாண்டியர்களையும் வஞ்சி நாட்டு வேளிர்களையும் வென்றவன். அவன் முதல் மகன் பராந்தகன் சிறிய வேளார் என்பவன் சோழர் சேனைக்குத் தலைவனாக ஈழநாட்டுக்குச் சென்று அங்கு உயிர் துறந்தவன். பூதிவிக்கிரமகேசரியின் இரண்டாம் மகன் ஆதித்தன் என்பவன் இராசராச சோழன் காலம் வரையில் கொடும்பாளூர்ச் சிற்றரசனாயிருந்தான். 1-ம் இராசேந்திர சோழன் காலத்தில் கொடும்பாளூர் அரசு முடிவு பெற்றது. இந்த மரபைச் சேர்ந்தவர்கள் சோழர்களிடம் சேனைத் தலைவர்களாகவும் நாட்டுத் தலைவர்களாகவும் தொண்டு செய்தார்கள்.

கொடும்பாளூரில் பல கோயில்கள் இருந்தன. அவற்றில் ஐந்தளி, முசுகுந்தேசுவரம், மூவர் கோயில் ஆகியவை சிறந்தவை. அந்தநல்லூரிலுள்ள கற்றளியும் இருக்குவேளிரால் கட்டப்பட்டது. அக்காலத்தில் கட்டப்பட்ட நங்கபுரம், திருச்செந்துறை முதலிய ஊர்களில் காணப்படும் கோயில்களுக்கும் கொடும்பாளூர் வேளிர் மன்னர்கள் நிலங்களைக் கொடுத்திருக்கிறாரிகள். இவற்றில் உள்ள சிற்பங்கள் மிக அற்புதமான கலைக் கருவூலங்கள். இவற்றின் அமைப்பில் பல்லவ மரபும் ஆதி சோழர் மரபும் கலந்து காணப்படுகின்றன. கொடும்பாளூரிலுள்ள மூவர் கோயிலைச் சுற்றி 15 சிறு கோயில்கள் காணப்படுகின்றன. தஞ்சையிலுள்ள இராசராசேச்சுரத்தின் அமைப்பை ஒரு சிறிய அளவில் இங்குக் காணலாம்.

இருக்குவேளிர் காளாமுக அல்லது பாசுபத சைவர்களை ஆதரித்தனர். பூதிவிக்கிரமகேசரி கல்வெட்டிலிருந்து அவர் ஒரு காளாமுக குருவிற்கு ஒரு மடமும் நிலங்களும் தானம் செய்தனரெனத் தெரியவருகிறது.

சோழப் பேரரசு 9ஆம் 10ஆம் நூற்றாண்டுகளில் புத்துயிர் கொண்டு விளங்கியதற்கு உதவியாக இருந்தவர்கள் இருக்குவேளிர். வேளிர் சோழ அரசர்களுடன் மண உறவு கொண்டவர்கள். கூ. ர. வே.