பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இருங்கோவேண்மான்

79

இருதலைக்கொள்ளி வாதம்


இருங்கோவேண்மான் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனாலே தலையாலங்கானத்தில் வெல்லப்பட்ட எழுவருள் ஒருவன்; குறுநில மன்னன் (மதுரை.55-6; 128-9 நச். உரை).

இருங்கோவேள் மைசூர் நாட்டில் இக்காலத்தில் ஹளெபீடு (பழைய வீடு) என்றழைக்கப்படும் துவார சமுத்திரத்தைத் (துவரை) தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்த கடைச்சங்க காலத்துச் சிற்றரசன். இவன் கண்ணபிரான் வழிக்கண் வந்த யாதவருள் ஒருவன் எனத் தெரிகிறது. அகத்தியமுனிவர் துவாரபதி போந்து, அரசர் பதினெண்மரையும் பதினெண்வகைக் குடிப்பிறந்த வேளிரையும் அழைத்து வந்து பல இடங்களில் நிலைப்பித்தனர் என்ற ஒரு செய்தி தொல்காப்பியவுரையில் (பாயிரம், அகத்திணை. சூ.32) நச்சினார்க்கினியர் எழுதியிருப்பதால் தெரிகின்றது. இருங்கோவேளின் குலமுதல்வன் வடபால் முனிவன் ஒருவனது வேள்வித் தீயில் தோன்றினவன் என்பதும், துவரையை ஆண்டு வந்த அரசருள் இவன் நாற்பத்தொன்பதாவது தலைமுறையினன் என்பதும் கபிலரது வாக்கால் தெரிகின்றன (புறம்.201). பாரி இறந்த பிறகு அவனுடைய பெண்மக்கள் இருவரையும் கபிலர் இவனிடம் அழைத்துவந்து ஏற்றுக்கொள்ளும்படி கேட்டார். இவன் மறுத்துவிட்டான். கபிலர் இவனைப் புலிகடிமால் என்று தாம் இவனைப் பாடிய இரண்டு பாடல்களிலும் குறித்திருக்கின்றார் (புறம் 201,202). புலிகடிமால் என்பது துவாரசமுத்திரத்தில் ஆண்டுவந்த 14ஆம் நூற்றாண்டின் இடைக்காலம் வரையில் ஹொய்களர் என்னும் அரசவமிசத்தின் பெயர் என்பர். காட்டில் தவஞ்செய்த தபங்க முனிவர்மீது ஒரு புலி பாய வந்தபோது அங்கு வேட்டையாடிய யாதவ அரசன் சளனைப் பார்த்து ஹொய்சள (சளனே அடி) என்று கூறினான். சளன் புலியைக் கொன்றான். அதனால் அவன் வமிசம் ஹொய்சள என்ற பெயர் பெற்றது என்பர். ஹொய்சளர் ஹளேபீடு நகரில் 14ஆம் நூற்றாண்டின் இடைக்காலம்வரை சிறந்திருந்தார். அவர் தலைநகரில் கட்டிய கோயில் சிற்பத்துக்குப் பேர்போனது.

இருங்கோன் ஒல்லை ஆயன் செங்கண்ணனார் கடைச் சங்கப் புலவர். ஒல்லை யென்பது ஓரூர். இருங்கோனுடைய ஒல்லையூரிலுள்ள ஆயன் என்றோ, ஒல்லையூரி லுள்ள இருங்கோனாகிய ஆயன் என்றே கொள்ளலாம். ஆயன் என்பது குலப் பெயராகவும் செங்கண்ணன் என்பது இயற்பெயராகவும் கொள்ளலாம். (அகம். 279).

இருடீகேசம் ஹரித்துவாரத்துக்கு 20 மைல் தொலைவில் இமயமலைச் சாரலில் உள்ள சிவத்தலம்.

இருத்தல் கொள்கை (Existentialism) : நாம் அறியும் எந்தப் பொருளைப் பார்த்தாலும், இருத்தல், சாரம் என இரண்டு அமிசங்கள் காணப்படும். தத்துவ சாஸ்திரங்கள் அனைத்தும் இருத்தலை முதன்மையாகக் கொண்டவை என்றும், சாரத்தை முதன்மையாகக் கொண்டவை என்றும் இருவகையாகப் பிரியும். இங்கு இருத்தல் முதன்மைக்கொள்கை என்பது மனிதனுடைய இருத்தலையே முதன்மையாகக் கொண்டதாகும்.

மனிதன் தன்னுடைய பண்புகளை அறிவதற்கு முன் தன்னுடைய இருத்தலை அறிந்துகொள்ள வேண்டும் என்று இந்தத் தத்துவ சாஸ்திரிகள் கூறுவர். இந்தக் கொள்கையின் அமிசங்கள் ஐரோப்பிய நாட்டில் மிகப்பழமையானவையே. சாக்கிரட்டீஸ். ஸ்டாயிக்குகள், செயின்ட் பெர்னார்டு, பாஸ்க்கல் போன்ற தத்துவ சாஸ்திரிகள் ஆகியோருடைய உபதேசங்களில் இந்தக்கொள்கை ஆங்காங்குத் தோன்றுவதைக் காணலாம்.

ஆனால் இதை ஒரு தனித் தத்துவக் கொள்கையாக ஆக்கியவர் நூறு ஆண்டுகட்குமுன் டென்மார்க்குத் தேசத்திலிருந்த கீர்க்கேகார்டு (Kirkegaard) என்பவராவர். இப்போது இந்தக் கொள்கை நிரிசுவரப் பிரிவு. ஈசுவரப் பிரிவு, யூதப் பிரிவு ரஷ்யப் பிரிவு என்று பல பிரிவுகள் உடையதாகக் காணப்படுகிறது. நிரீசுவரப் பிரிவில் சிறந்தவர் பிரெஞ்சு ஆசிரியர் சார்தரு என்பவர். ஈசுவரப் பிரிவில் சிறந்தவர் மார்சல் என்பவர்.

இந்தக் கொள்கையினர் உலகத்தைப் பற்றியோ உள்ளத்தில் நடைபெறுவனவற்றைப் பற்றியோ அறிவதைவிட்டு, முதற்கண் மனிதனை அறிவதே வேண்டப்படுவதாகும் என்றும், மனிதன் தன்னையே உண்டாக்கிக் கொள்கிறான் என்றும், அதனால் அவன் சுதந்திரம் உடையவன் என்றும், ஆகவே எப்பொழுதும் நிலைத்து நிற்கும் இலட்சியம் எதுவும் இல்லை என்றும் கூறுவர்.

இக்காலத்தில் மனிதனை வெறும் எந்திரமாகவே எண்ணும் கருத்துப் பரவி வருவதால், மனிதன் சுதந்திரமுடையவன், தன்னை ஆக்குவதும் அழிப்பதும் அவனே என்னும் இக்கொள்கை மிகுந்த பயன் தருவதாகும். ஆனால் மனிதனுடைய செயல்களை ஆராய்ந்தால் அதில் சுதந்திர அமிசம் காணப்படுவதுபோலவே தடை அமிசங்களும் காணப்படும். அத்துடன் இக்கொள்கையினர் இலட்சியம் என்பதை நீக்கிவிட்டதால் மனிதனுடைய ஆன்மப்பண்பை அறியவில்லை.

ஆயினும் நான் யார் என்னும் வினாவுக்கு விடை காண்பதே தத்துவ சாஸ்திரத்தின் குறிக்கோள் என்று மார்சல் கூறுவது உண்மையே. அந்தக் குறிக்கோளைக் கொண்டே இந்திய நாட்டுக் கைவல்ய நவநீதம் போன்ற தத்துவ நூல்கள் தத்துவ ஆராய்ச்சிகள் செய்துவந்திருக்கின்றன.

இருதலைக்கொள்ளி வாதம் (Dilemma) வாத வகைகளில் இது ஒன்று. காணப்படும் இரு வழிகளுள் ஒவ்வொன்றும் துன்பம் விளைப்பதாயின் "இருதலைக்கொள்ளியின் இடைப்பட்டது போல" என்பது உலக வழக்கு. தருக்க நூல்களில் துணி பொருளின் கண் (Major premiss) எவ்வழியும் துன்பம் விளைக்கும் கருத்துக்களிருப்பின், அத்துணி பொருளுரை இருதலைக்கொள்ளி வாதம் (உபயசங்கட வாதம்) எனப்படும். இவ்வாதம் சொற்போரில் வெற்றி குறித்து நிகழ்த்துவதாகும். இதன் துணிபொருளுரை இரண்டு சாபேட்ச வசனங்களடங்கியது. பக்கப் பொருளுரை விகற்பம். ஆகவே உபயசங்கடவாதம் கலவையுரையாகும்.

இது சுத்தம் (Simple) என்றும், சங்கரம் (Complex) என்றும் இருவகைப்படும். சுத்தத்தில் துணி பொருளுரைக்கண் வரும் ஏதுக்கள் இரண்டுமோ காரியங்கள் இரண்டுமோ ஒன்றாயிருக்கும். சங்கரத்தில் ஏதுக்களும் காரியங்களும் வெவ்வேறாம். சுத்தத்தின் வாயிலாகத் துணியப்படும் சித்தாந்தம் நிரபேட்சை; சங்கர சித்தாந்தம் விகற்பம். . துணி பொருளுரையால் குறிக்கப்பட்ட பக்கப் பொருள் உரையும் (Minor premiss) சித்தாந்தமும் மெய்யெனத் துணியுமாயின், ஆக்கமுறை (Constructive) எனப்படும். பக்கப் பொருள் காரியங்களை மறுக்க, சித்தாந்தம் ஏதுக்களை மறுக்குமாயின் அழிவுமுறை (Destructive) எனப்படும். ஆக்கமும் அழிவுமெனத் சுத்தோபயசங்கடமும் சங்கரோபயசங்கடமும்