காக்கைபாடினியம்
418
காக்கைவலி
இவை பலவிதமாகக் கூவி, அழைப்பு, எச்சரிப்பு மூதலிய கருத்துக்களைத் தமக்குள் ஒருவாறாகக் குறிப்பிட்டுக் கொள்ளும்.
மனித சமூகத்தை அடுத்துத் திருடி வாழ்வதில் ஒன்றோடொன்று கலந்திருந்தும் சாம்பற்கமுத்துக் கொண்ட காக்கை (House crow) வேறு, முழுக் கறுப்பான அண்டங்காக்கை (Jungle crow) வேறு. சாம்பற்கழுத்துக் காக்கைகள் சமூகங்களில் கூடி வாழும். காலையில் தங்கள் அடைமரங்களை விட்டுத் திரளாகப் பறந்து இரைதேடச் செல்லும்; மாலையில் மறுபடியும் நூற்றுக்கணக்காக அடைமரங்களில் வந்து கூடும். இவை நாட்டுப்புறங்களிலும் நகரங்களிலும் மனிதர் இருப்பிடங்களை ஓட்டி வாழும். அண்டங்காக்கைகளும் சிறு கூட்டங்களாகக் கூடி இருக்கும். ஆனால் தனித்தும் இணையாகவும் இருப்பதுண்டு. மேலும் இவை நடுக்காட்டிலும் சஞ்சரிக்கும்.
இருவகைக் காக்கைகளும் கோடையில் கூடு கட்டி நீல நிற முட்டைகளை அடைகாத்துத் தம் பொன் குஞ்சுகளை வளர்ப்பதுடன், குயிலின் குஞ்சுகளையும் சாதாரணமாக இவைகளே பொரித்து வளர்க்கின்றன.
பகல் வாழும் பறவைகள் இருட்டினதும் இருப்பிடத்தில் அடைந்துவிடும். மற்றப் பகற்காலப் பட்சிகளைப் போலில்லாமல், காக்கைகள் மங்கின வெளிச்சத்திலும் சஞ்சரிக்கும். நிலா வீசும் இரவுகளில் அவை நெடுநேரம் விழித்திருக்கும். மா. கி.
காக்கைபாடினியம் ஓரிலக்கண நூல். இது இப்போது இல்லை. யாப்பருங்கல உரையிலே இந்நூற்செய்யுட்கள் சில மேற்கோள்களாக வருகின்றன. அகத்தியர் மாணவர் பன்னிருவரில் காக்கைபாடினியார் ஒருவர். இது அவர் எழுதிய நூல்போலும்.
காக்கைபாடினியார் அகத்தியர் மாணவர் பன்னிருவருள் ஒருவர். பாடினி என்பதனாற் பெண்பாற் புலவரெனக் கொள்ளலாம். பார்க்க: காக்கைபாடினியார் நச்செள்ளையார், காக்கைபாடினியம்.
காக்கைபாடினியார் நச்செள்ளையார் சங்க காலத்துப் பெண்பாற் புலவர். குறுந்தொகை 210ஆம் பாட்டில் காக்கை கரைந்தமையைப் பாராட்டிக் கூறியதால் காக்கைபாடினியார் எனப் பெயர் பெற்றார் என்பர். செள்ளை யென்பது பெண்பாலார்க்கு இயற்பெயராகப் பண்டைக்காலத்து வழங்குயிருத்தல்வேண்டும், 'அக்துவஞ்செள்ளை' என்பது மையூர்கிழான் மனைவியின் பெயராகப் பதிற்றுப்பத்து 9ஆம் பத்தின் பதிகத்தில் வந்திருப்பதால் இது உறுதிப்படும். 'ந' என்பது சிறப்புப் பொருளைத் தரும் இடைச்சொல். 'ஆர்' விருதி உயர்வு குறிக்கும். இவர் பதிற்றுப்பத்து 6ஆம் பத்தில் ஆடுகோட் பாட்டுச் சேரலாதனைப் பாடி ஒன்பது துலாம் பொன்னும் நூறாயிரம் பொற்காசும் பரிசு பெற்றவர். புறம் 278ஆம் பாட்டும் இவர் பாடியதே. அகத்தியர் மாணவராக ஒரு காக்கைபாடினியார் பெயர் வருவதாலும் காக்கைபாடினியார் என்னும் பெயர்க்காரணம் குறுந்தொகையில் வருவதாலும் இக் காரணப் பெயருடன் பலர் இருந்திருப்பர் எனக் கொள்ளவேண்டும். சிறுகாக்கைபாடினியார் என்றும் ஒருவர் இருந்திருக்கிறார்.
காக்கைவலி (Epilepsy) நரம்புமண்டலக் கோளாறுகளில் ஒன்று. இதில் இரண்டு வகை உண்டு. ஒரு வகையில் சிறிது நேரம் உணர்ச்சி இல்லாமலிருந்து, பிறகு உணர்ச்சி வந்துவிடும். இதைச் சிறிய நோய் அல்லது சிறு காக்கைவலி (Petit-Mal) என்பர். இரண்டாவது வகையில் வலி ஆரம்பிப்பதற்கு முன்னே ஏ்தாவது ஓர் உணர்ச்சி மாற்றம் ஏற்படலாம். அதாவது கண்ணுக்கு மூன்னால் கறுப்புப் புள்ளிகளைப்போன்றோ, நட்சத்திரங்களைப்போன்றோ காணப்படலாம்; அல்லது ஏதாவது சத்தம் கேட்கலாம்; அல்லது வாசனை ஏற்படலாம். வலி வருவதற்கு 6 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரத்திற்கு முன்னே சில சமயங்களில் தலைவலி, மயக்கம் அல்லது ஒருவகை அயர்வு ஏற்படலாம். சில சமயங்களில் வலிப்பு ஏற்படுமுன், உணர்ச்சிக் கோளாறு இல்லாமல், உடம்பின் ஏதாவது ஒரு பாகத்தில் துடிப்பு ஏற்படலாம். சிலருக்குத் தொடர்ந்தாற்போல் ஏதாவது ஒரு சம்பவம் தோன்றலாம். உதாரணமாக ஒருவர்க்கு எப்பொழுதும் வலிப்பு ஆரம்பிப்பதற்குமுன் ரெயில் வண்டி வருவதுபோலவும், அந்த ரெயிலின் குறுக்கே செல்லும் பாதையின் கதவு மூடாமல் இருப்பதால், மாட்டு வண்டி ஒன்று வந்து ரெயில் வண்டியோடு. மோதப்போவதுபோலவும் காணப்படுவதும், அப்படி மோதிவிடுமென்ற சந்தர்ப்பத்தில் வலிப்பு வருவதும் வழக்கமாகும். இன்னும் சிலருக்கு உடம்பின் அவயவத்தில் ஏதாவது ஒன்று கெட்டு விட்டாற்போல் தோன்றிப் பிறகு வலிப்பு வரும். இவ்விதமான வலிப்பைப் பெருங்காக்கைவலி (Grand-Mal, Major Epilepsy) என்று சொல்லுவார்கள். இந்த நோயில் உணர்ச்சித் தொந்தரவுகள் ஏற்படுவதால் நோயாளிகள் வலிப்பு வரப்போகிறதென்று அறிந்து, தமக்கு ஆபத்து வராமல் தடுத்துக்கொள்ள ஏற்பாடு செய்துவொள்ளுவார்களாம். இந்தக் காரணத்தினாலேயே இவர்களுக்குச் சாலைகளிலும் தொழிற்சாலைகளிலும் சாதாரணமாகக் கெடுதல் ஏற்படுவதில்லை.
முன்சொன்ன முறைகளில் ஏதாவது ஒரு குறி கண்ட சிறிது நேரத்திற்கெல்லாம் வலிப்பு ஆரம்பித்து விடும். இப்படி வலிப்பு ஆரம்பிப்பதற்கு முன்பு, அநேகமாக ஒருவிதமாகச் சப்தம் போடுவதுண்டு. சப்தம் போட்டவுடன் வலிப்புச் சிறிது சிறிதாக அதிகப்பட்டுக் கொண்டே வரும். முதலில் ஒரு வலிப்புக்கும் மற்றொரு வலிப்புக்கும் சிறிதளவு இடை நேரம் காணப்படும். அப்படிச் சிறிது நேரம் சென்றபின் இந்தக் குணம் மாறித் தொடர்ந்தாற்போல் வலிப்புக்கள் காணப்படும். இவ்வலி 3 அல்லது 4 நிமிஷங்கள் வரையில் காணப்படலாம். ஆரம்பத்திலே உடம்பின் ஏதாவது ஒரு பாகத்தில் ஆரம்பித்துச் சிறிது நேரத்திற்கெல்லாம் அதன் பக்கத்தில் இருக்கும் பாகத்திற்குச் சென்று, மற்றும் சிறிது நேரத்திற்கெல்லாம் உடம்பு முழுவதுமே ஏற்பட்டுவிடும். ஆரம்ப நிலையில் உணர்ச்சி இருந்தாலும், உடம்பு முழுதும் நோய் பரவும்பொழுது உணர்ச்சி போய்விடும். இப்படி வலிப்பு இருந்துகொண்டே இருக்கும்பொழுது, முகம் கருநிறம் அடையும். உணர்ச்சி இல்லாததால், வலிப்பு இருக்கும் பொழுது, நாவானது பல்லிலே அகப்பட்டுக் கடிபட்டு இரத்தம் வரலாம். மலமும் நீரும் உணர்ச்சியின்றியே கழியலாம். வாயிலே எச்சில் நுரை நுரையாகத் தள்ளும். வலிப்பு இருக்கும்பொழுது கண்ணில் இருக்கும் பாவை நன்றாக அகன்று விடும். இப்படி 3 அல்லது 4 நிமிஷம் கழிந்த பின்பு வலிப்புக் குறைந்து நின்றுவிடும். நின்ற பிறகு, மயக்கம் ஏற்பட்டு, நோயாளி அந்த மயக்கத்திலேயே தூங்கி விடலாம். அந்தச் சமயத்தில் உடம்பின் சூடு முன்னையிலும் 4, 5 டிகிரி மிகுதியாக இருக்கலாம். இவ்வித மயக்கம் ஏற்பட்ட பின்பு 3 அல்லது 4 மணி நேரம் கழித்து நடந்தது ஒன்றும் அறியாமல் நோயாளி, தூங்கி எழுந்தவர்போல் எழுந்திருப்பார். ஆயினும் மெலிவு அதிகமாகக் காணப்படும். சிலருக்கு வலிப்பு