பக்கம்:கல்வி உளவியல் கோட்பாடுகள்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

96

கல்வி உளவியல் கோட்பாடுகள்


உடன்விளையாடுவோர் அவனிடமும், அவன் அவர்களிடமும் காட்டும் அன்பு, பரிவு, வெறுப்பு போன்றவையும் அவன் வாழ்க்கையில் முக்கியமானவை. ஆசிரியரின் பாடம் பயிற்றும் திறமையைவிட, அவர் காட்டும் அன்பையும் பரிவையுமே குழந்தை அதிகமாகக் கவனிக்கின்றது. கடுமையும் உறுதியும் இன்றியமையாதவையே; எனினும், குழந்தையின் ஆற்றல்கள் வளர்வதற்கு அன்புடன் தரும் வாய்ப்புகளே பெரிதும் மனநிறைவு தரக்கூடியவை. குழந்தைகளை வாளா இருக்கச் செய்தலாலும், பழகிய இயக்கத்தையே திரும்பத்திரும்பச் செய்யும்படி ஏவுதலாலும், அவர்களின் திறன்களுக்கு ஒவ்வாத செயல்களைச் செய்யும்படி ஏவுதலாலும், குழந்தைகளிடம் அலுப்பும் எதிர்ப்பு மனப்பான்மையும் தோன்றும் என்பதை ஆசிரியர்களும் பெற்றோர்களும் உணர்தல் வேண்டும்.

சமூகப்பண்பு வளர்ச்சி[1]

குழவி சுற்றுபுறச் சூழலால் மாறி வருவதனைப் பலமுறை குறிப்பிட்டுள்ளோம். பிறரோடு கூடி வாழ்வதே மக்கள் இயல்பு. சமூகத்தை விட்டுப் பிரித்துத் தனியாளை உணர்வது இயலாது. உணவுப்பொருள் விளைவிப்போர், உடை நெய்வோர், வணிகர் போன்ற பலருடைய துணையால் நம் வாழ்வு நடைபெறுகின்றது. எனினும் நான் எனது என் உரிமை போன்ற எண்ணங்கள் மக்களிடம் ஓயாமல் குடிகொண்டுள்ளன. சமூகம், தனியாள் என்ற இரண்டு எண்ணங்களிடையேயும் ஓயாமல் போராட்டம் நடைபெற்ற வண்ணமிருக்கின்றது. எனவே, குழவி சமூகத்திற்கு இணங்கத் திருந்திப் பொருத்தப்பாடு அடைந்து வருவதனையும் அறிந்தாலன்றி நாம் குழந்தை வளர்ச்சியைப்பற்றி முழுமையும் அறிந்தவர்களாதல் இலோம். தவிர, சமூக வளர்ச்சி உடல் வளர்ச்சி, இயக்க வளர்ச்சி, உள்ளக்கிளர்ச்சி வளர்ச்சி போன்ற வற்றுடன் நெருங்கிய தொடர்புடையது என்பதை என்றும் நினைவில் இருத்தல் வேண்டும். எனவே, குழந்தையிடம் சமூகப் பண்பு வளர்ச்சி நடைபெறுவதனைக் கவனிப்போம்.

இவ் வளர்ச்சியின் போக்கு: சமூக வளர்ச்சியில் திட்டமான நிலைகள் இன்னவை என்று வரையறை செய்து கூறுவதற்கில்லை. இங்குச் சில பொதுவான போக்குகளே கூறப் பெறுகின்றன.

பிறந்த குழவியிடம் சமூகஉணர்ச்சி இருப்பதாகச் சொல்ல முடியாது. அஃது உளது என்று கூறுகிறவர்கள் கற்பனையுலகில்


  1. சமூகப் பண்பு வளர்ச்சி-Social development.