10
களத்து மேடு
"மெய்யாலுமா அப்பா?..." என்று கேட்டாள் தைலம்மை.
அவளது மா நிற மேனி குலுங்கியது. கழுத்தில் இழைந்த தங்கச் சங்கிலியும் குலுங்கியது. 'சிலட்டூரு மாப்பிள்ளை எனக்கு மச்சானா ஆகப்போறாங்கடாமே!' என்று அவள் மனம் ஆனந்தக் கடலாடத் தொடங்கியது!
கதிர்க் கொத்து : 2
"இவுகதான் மாப்புள்ளே!"
தைலம்மை, "மெய்யாலுமா?" என்று தொடுத்த வினாச் சரத்தின் உட்குரலை அனுமானம் செய்யத் துடிப்புக் கொண்டவர்போல, செங்காளியப்பன் சேர்வை அப்படிப்பட்ட பதட்டத்துடன் தம் மகளை ஆழ்ந்து நோக்கினார்.
அவளோ, தன் தந்தையின் மனக் கிட்டங்கியில் இருந்த திட்டக் கனவின் கருத்தினை ஊகம் செய்து கொள்ள முயலுபவளாக, அப்படிப்பட்ட ஆர்வத்திளைப்புடன் சேர்வையை உறுத்துப் பார்த்தாள். பெற்றவர் ரகசியம் பேசிய பான்மையும் பாவனையும் அவளுக்கே மலைப்பைக் கொடுத்திருக்கவேண்டுமோ?- அதனால்தான், அவள் தன்னையும் அறியாமல், அவ்வாறு கேள்வி கேட்டாளோ?- 'மெய்யாலுமா?' என்ற எதிர்க் கேள்வி மகிழ்வில் பிறந்ததா? இல்லை, ஏமாற்றத்தில் முளைத்ததா? - அவளுக்கே ஒன்றும் விளங்கவில்லை.
சேர்வை ஒரு கனைப்புக் கனைத்து விட்டு, மறுமுறையும் தைலம்மையை ஏறிட்டுப் பார்த்தார் "என்னம்மா, ஒனக்கு மனசுக்குச் சம்மதந்தானே?..." என்று மிடுக்குக்