26
களத்து மேடு
"போச்சில்ல...! அதான் எம்பொண்ணு !..." என்பதாகத் தைலம்மையை சரவணனுக்கு அறிமுகப்படுத்தினாரே சேர்வை. அந்தப் பான்மையும் பாணியும் மிகுந்த பண்புடன் விளங்கின. சரவணம் மனத்திற்குள் அந்நிலையைப் போற்றினான். 'முந்தி ஒருவாட்டி இந்தக் கன்னியைக் கங்காணித் தோட்டத்திலே திருநாளப்ப கண்டு பேசின சங்கதி முச்சூடும் சேர்வைகாரவகளுக்குத் தெரியாதில்ல?...' -நினைவு, சிரிப்பின் கரையில் ஒதுங்கிற்று. 'எங்கணே போயிடுச்சு தைலாம்மை? காப்பித் தண்ணியும் விருந்துந் தானா இப்பைக்கு ஓசத்தி?...'
அவன் அவசரம் அவனுக்கு.
அவள் அவசரம் அவளுக்கு.
செங்காளியப்பன் குட்டிப்போட்ட பூனைபோல் அங்குமிங்கும் நடந்தார்; திரிந்தார். பிறகு, உட்பகுதிக்குச் சென்றார். திரும்பினார். திரும்பிய பொழுதில் அவர் லோட்டா காப்பியுடன் வந்தார். "சுடு தண்ணி துளி இருக்கு வாயிலே ஊத்திக்கிடுங்க!....." என்று வேண்டிக் கொண்டே, அன்றையக் கிழமையை ஞாபகப்படுத்திக் கொண்டார். 'சரி, ஞாயித்துக்கிழமை ராகுகாலம் அந்திக்குத் தான்!.... இருபத்தாறேகால் நாழிகைக்குத் தானே!....ம்!'
லோட்டாவை வாங்கினான் சரவணன். ஒருமுறை ஊதினான். 'அதுகையாலே கொண்டாந்து தரப்புடாதாமா?....'
"சுருக்கணக் குடியுங்க. அக்கம் பக்கத்திலே யாராச்சும் தும்மப் போறாங்க!..." என்று துருசுப் படுத்தினார் சேர்வை.
"தும்மலிலே என்னாங்க இருக்கு? நீங்களும் நானும் திடத்தோடே இருந்தாக்க, அப்பாலே என்னாங்க குந்தகம் வரும்?..."