84
களத்து மேடு
சிந்தனை வசப்பட்டிருந்த சேர்வைக்கு, சற்றுமுன் முகம் காட்டி நின்ற சிலட்டூர் மாப்பிள்ளை சரவணனை இப்போது காணாததைக் கண்டு மனம் கிலேசப்பட்டது. அவர் சிங்காரத்தைவிட்டு விட்டு, நேர்வசமாகத் தம் மகளின் திசைக்குப் பார்வையை திசை திருப்பினார். அப்போது தைலம்மை வாசல் பகுதியில் தன்பார்வையை மேயவிட்டவாறு இருந்த கோலத்தையும் அவர் கண்டு கொண்டார். 'அது தன்னோட சிலட்டூர் மச்சானைத் தேடிக்கிட்டுதான் இருக்குது!’ என்ற உண்மையும் அவருள் பரவியது.
"ஒங்களுக்கு ராச்சோறு எங்க வீட்டிலேயுங்க!" என்றாள் தைலம்மை. அவள் சிங்காரத்திடம் சொன்னாள்.
"ஆமாம்பா சாப்பிடு!" என்று ஒத்துப் பாடினார் பெரியவர்.
"அதுக்கென்ன!" என்று பட்டும் படாமலும் சொன்னான் சிங்காரம், பிறகு எதையோ யோசித்தவன்போல, விருட்டென்று எழுந்தான், "கொஞ்சம் சோலி ஊருக்குள்ள இருக்குது; போயிட்டு வாரேன்!’’ என்று எழுந்தான்.
"நீ வந்துதான் நான் சாப்பிடுவேனாக்கும்!" என்றார் சேர்வை.
"அதுக்கென்ன!" என்று மீண்டும் அதே பல்லவியைப் பாடிவிட்டுப் பாட்டு முடியுமுன்னே நழுவிவிட்டான் சிங்காரம்.
சேர்வை மட்டும்தான் பெருமூச்செறிந்தாரென்று சொல்லுவதற்கில்லை!
"ஆமா, தைலி! சிலட்டூரு மாப்புள்ளே வந்ததாட்டம் எங்கண்கள் சொன்னுச்சே, எங்கே அவுகளை கண்ணுப் பொறத்தாலவே காணமே?" என்று கேட்கலானார்.
"அதான் புரியலைங்க அப்பா! வந்து உங்களைப் பார்த்திட்டு கொஞ்சம் பொழுதுக்கு நின்னாங்க. மறுகா,