மயிலை சீனி வேங்கடசாமி
52
செப்பேடு கூறுகிறது.[1]
'கற்றறிந்தோர் திறல் பரவக் களப்பாழரைக் களைகட்ட மற்றிரண்டோன் மாக்காடுங்கோன் மானம் பேர்த்தருளிய கோன்" என்று தளவாய்ப்புரச் செப்பேடு கூறுகிறது.[2]
பாண்டியன் கடுங்கோன், 'மானம்பேர்த்த தானை வேந்தன்' என்றும் 'மானம் பேர்த்தருளிய கோன்' என்றும் செப்பேடுகளின் தமிழ் வாசகம் கூறுவதைப் போலவே, சமஸ்கிருதச் கலோகமும் அவனை மானம் பேர்த்த கடுங்கோன் என்று கூறுகிறது.[3] எனவே 'மானம் பேர்த்த கடுங்கோன்' என்பது அவனுடைய சிறப்புப் பெயர் என்று தோன்றுகிறது.
பாண்டியன் கடுங்கோன் பாண்டிய நாட்டைக் களப்பிரரிடமிருந்து மீட்டுக் கொண்டபோது, ஏறக்குறைய அதே காலத்தில் தொண்டை நாட்டு அரசனான பல்லவ சிம்மவிஷ்ணு சோழ நாட்டைக் களப்பிரரிடமிருந்து கைப்பற்றிக் கொண்டான். இந்த வரலாற்றைப் பள்ளன் கோவில் செப்பேடும் வேலூர்ப்பாளையம் செப்பேடும் கூறுகின்றன.
"சிம்மவர்மனுடைய மகன் சிம்மவிஷ்ணு. அந்தச் சிம்மவிஷ்ணு, மற்றொரு சிம்மவிஷ்ணு என்னும் அரசனை வென்றான். அவன், பலத்தில் வெற்றி வீரனாகிய அர்ச்சுனனைப் போன்றவன். வில் வித்தையிலும் வீரன். போரிலே வெற்றி கொள்வதில் சமர்த்தன்" என்றும்,
"உண்மை தியாகம் வணக்கம் போன்ற பரிசுத்தமான நற்குணங்கள் யாரிடத்தில் உள்ளனவோ, வீர குணங்கள் யாரை அடைக்கலமாகக் கொண்டுள்ளனவோ (அந்தச் சிம்ம விஷ்ணு) கவேரன் மகளான காவிரி ஆற்றை மாலையாகவும் செழுமையான நெல்வயல் கரும்பு வயல்சளை ஆடையாகவும் கமுகத் தோட்டம் வாழைத் தோட்டங்களை ஒட்டியாணமாகவும் அணிந்த சோழ நாட்டைக் கைப்பற்றினான்" என்றும் பள்ளன் கோயில் செப்பேடு கூறுகிறது.[4]
"புகழ்வாய்ந்த திறலையுடையவனும் பகைவர்களின் ஆற்றலையடக்கும் பலமுள்ளவனுமான சிம்மவர்மனுக்கு வெற்றி வீரனான சிம்மவிஷ்ணு மகனாகப் பிறந்தான். அவன், கமுகத் தோட்டங்களும் நெல்வயல்களும் நிறைந்துள்ள கவேரன் மகளான காவிரி ஆற்றினால் அலங்கரிக்கப்பட்ட சோழ நாட்டைக் கைப்பற்றினான்" என்று வேலூர்ப்பாளையச் செப்பேடு கூறுகிறது.[5]
இவ்வாறு பல்லவ அரசருடைய செப்பேடுகள் கூறுகின்றன. இவற்றிலிருந்து சிம்ம விஷ்ணு என்னும் பல்லவ அரசனுடைய மகனான சிம்மவிஷ்ணு, சோழ நாட்டையாண்ட சிம்ம விஷ்ணு என்னும் அரசனை வென்று சோழ நாட்டைக் கைப்பற்றினான் என்றும் அறிகிறோம். சிம்மவிஷ்ணு பல்லவன் சோழ நாட்டைச் சோழரிடமிருந்து வென்று கொண்டானா, களப்பிரரிடமிருந்து வென்று கொண்டானா என்று