பக்கம்:கவியரசர் இரவீந்திரநாத் தாகூர்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

கவியரசர் இரவீந்திரநாத் தாகூர்



வீட்டுத்தோட்டம், முற்றம்,தெருத்திண்ணைக் காட்சிகளைப் பார்த்துப் பார்த்துச் சலித்துப்போன ரவீந்திரர், சில நேரங்களில் தனது அண்ணன்மார்களோடு விளையாடலாம் என்று அவர்களை நாடுவார். ரவீந்திரர், தேவேந்திர நாத் தாகூரின் கடைசி மகன்; அதாவது பதினான்காம் குழந்தை.

அதனால், எல்லா அண்ணன்களும் அவரைத் தம்மிடம் சேரவிடாமல்,அன்பாக, செல்லமாக, “ரவீந்திரா,நீ,நல்ல தம்பி தானே! தனியாகவே போய் விளையாடுதம்பி, போ,” என்று ரவீந்திரரைத் தட்டிக் கொடுத்து அனுப்பி விடுவார்கள்.

உடனே, தன்னை ஏன் எல்லாரும் சேர்த்துக் கொண்டு விளையாட மறுக்கிறார்கள்? என்ன காரணம் என்று அந்தச் சிறிய வயதிலேயே அவர் சிந்திக்கலானார்! பிறகு, வேறு வழியெதுவும் தெரியாமையால், தனது வீட்டிலிருக்கும் வேலைக்காரர்களிடம் நட்புக்கொள்வார்.

சிறுவரல்லவா ரவீந்திரர்? அதனால் கிராமத்துக் கதைகளை எல்லாம் வேலைக்காரர்கள் மூலம் கேட்பார். அவர்கள் ஆடியும்-பாடியும் கூறுவார்கள்.

அந்த வேலைக்காரர்கள் சொல்லும் கதைகள் ஒவ்வொன்றிலும் உள்ள சொற்களை, வாக்கியங்களை, நீதிகளை, ரவீந்திரர் ஆழ்ந்து கவனிக்கின்றார் என்று அந்த வேலைக்காரர்களுக்குக் கதை சொல்லும்போது தெரியாது!

ஆனால், வேலைக்காரர்கள் என்னென்ன சொன்னார்கள் என்பதை, ரவீந்திரர் மறுநாள் அவர்களிடம் சொல்லிக் காட்டி, நான் சொன்னது நீங்கள் கூறிய கருத்துக்கள் தானே! ‘சரியாக இருக்கின்றதா?’ என்று அவர்களைக் கேட்கும் நேரத்தில்தான், ஓ, சிறுவன் நாம் சொல்லும் எல்லாவற்றையும் ஆழமாகக் கூர்ந்து கேட்கிறான் என்பதைப் புரிந்து கொண்டார்கள்.