பக்கம்:கவியரசர் இரவீந்திரநாத் தாகூர்.pdf/64

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
6. அரசியல் தொண்டு

மனைவியாக மட்டுமன்று-மங்கையர்களுக்கு அரசி போல வாழ்ந்து கொண்டிருந்த மிருணாளினி தேவி மரணமடைந்த பிறகு, கவிஞர் தாகூர் ஒரு மகானைப் போல வாழ்ந்து கொண்டிருந்தார்.

கடைசி மருமகள் இறந்த அதிர்ச்சியால் கவிஞர் தாகூரின் தந்தையார் தேவேந்திரர் நாத் மிகவும் தளர்ச்சி அடைந்தார். கவிஞர் தாகூர், தனது தந்தையை ஆறுதல் படுத்தி, தந்தையார் இறை வழிபாட்டிலும் தியான நிலையிலும் இருக்கும்போது, அவருடன் இருந்து, தான் எழுதிய ‘நை வேத்தியம்’ என்ற நூலிலுள்ள பல பாடல்களைப் பாடி மன அமைதிப் படுத்தி வந்தார்.

மகன் எழுதிய பாடல்களைக் கேட்டுக் கேட்டு மகிழ்ச்சி அடைந்த தேவேந்திரர் தனது செல்வனைப் பார்த்து, “பழங்காலத்திலே வாழ்ந்த புலவர் பெருமக்கள் மன்னர்களிடமும், செல்வந்தர்களிடமும் சென்று, தாம் பாடிய பாடலைப் பாடிக் காட்டினால் பரிசு வழங்குவது வழக்கம். அதுபோல நானும் உனக்குப் பரிசு தருகிறேன்” என்று ஒரு பெருந்தொகையை ரவீந்திரருக்குப் பரிசாகக் கொடுத்தார். அந்தப் பரிசால் தனது நூலை அச்சிட்டு வெளியிட்டார்.