பக்கம்:கவியரசர் இரவீந்திரநாத் தாகூர்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்.வி.கலைமணி

71



பேச்சு முழக்கங்களோடு மட்டுமா நின்றார் தாகூர்! வங்கத்து ஷெல்லி என்றல்லவா வங்கம் போற்றியது அவரை! அதனால், தனது கவிதை வரிகளால் மக்களை எழுச்சி பெற வைத்தார்! மக்களும் ஆயிரக் கணக்கில் திரண்டு போராடினார்கள்! அதற்குக் காரணம் ரவீந்திரருடைய கவிதைகளே. என்றால் மிகையன்று!

இன்றைய புதுச்சேரி மாநிலத்தில் அரவிந்தர் ஆசிரமம் என்ற ஒன்று உள்ளதல்லவா? அந்த ஆசிரம நிறுவனரான அரவிந்த மகரிஷி, அன்று கவிஞர் பெருமான் தாகூரின் பேச்சுக்களையும், கவிதை முழக்கங்களையும் கேட்டும், படித்தும் வங்கப் பிரிவினை தடுப்புப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

கவிஞர் தாகூர், கல்கத்தா நகரில் மிகப் பெரிய போராட்ட ஊர்வலத்தை தலைமையேற்று நடத்திக் காட்டினார். பல கூட்டங்களில் பேசி, ஏறக்குறைய ஐம்பதினாயிரம் ரூபாய் வரை போராட்ட நிதியாக மக்களிடையே திரட்டிக் கொடுத்தார். அவ்வளவு செல்வாக்கும், மக்கள் பலமும் இருந்தது அவருக்கு.

பகை கொள்ளாத ஒத்துழையாமை

“பகை கொள்ளாத ஒத்துழையாமை வேண்டும்” என்று பகிரங்கமாக மேடையிலே கூறியே போராட்டம் நடத்தினார் அவர். அரசு அதிகாரிகளைத் தாக்கக் கூடாது. அதிகாரிகளை வருத்த வேண்டிய அவசியமில்லை!

ஆனால் நாளா வட்டத்தில் கவிஞருடைய பகை கொள்ளாப் போரின் அன்பு நெறிகள் ஓடிவிட்டன; அதனால் தாகூர் அரசியல் போராட்டத்தை விட்டு அகன்றுவிட்டார். பழையபடி சாந்தி நிகேதன் சென்று அமைதித் தொண்டாற்றிடலானார்!