பக்கம்:கவியரசர் இரவீந்திரநாத் தாகூர்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70

கவியரசா் இரவீந்திரநாத் தாகூர்



வங்காள மாநிலத்தில் அடிக்கடி ஏற்படும் கங்கையாற்று வெள்ள கோர அழிவுகளால், துன்பங்களை அனுபவிக்கும் மக்களுக்கும் முன்னின்று பணம் சேகரித்துத்தக்க உதவவிகளை வழங்கினார்.

பீகார் மாநிலத்தில் ஏற்பட்ட பெரும் பூகம்ப அழிவுகளால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கும், குவெட்டா நகரினை ஆட்டிப்படைத்து உலுக்கிய பூகம்ப நாசங்களால் அவதிப்பட்ட மக்களுக்கும், தாகூர் செய்த உதவிகளை மக்கள் துயர் துடைத்த பணிகளை யாரும் மறக்க முடியாது. அவ்வளவு கடும் உழைப்புகளை ஆங்காங்குள்ள அரசு அதிகாரிகளுடனும் பொது மக்கள் நிறுவனங்களுடனும் சேர்ந்து செய்தார்.

பிரிட்டிஷ் கவர்னர் ஜெனரலாக இருந்த கர்சான் பிரபு, 1905ஆம் ஆண்டில் வங்காள மாநிலத்தை கிழக்கு வங்கம், மேற்கு வங்கம் என்று இரண்டாகப் பிளந்தார். வெள்ளையர் ஆட்சியின் இந்த ஆணவச் செயலை வங்க மக்கள் கங்கையின் பெருவெள்ளம் போல பொங்கித் திரண்டு எதிர்த்தார்கள். அந்தப் போராட்டங்களைப் பல அணிகள் செய்தன. அவற்றுக்குத் தலைமை தாங்கிப் போராட்டம் நடத்திய பெருமை ரவீந்திரநாத் தாகூரையே பெரும்பாலும் சாரும்! அவ்வளவு தீவிரமாக மக்களைத்திரட்டிப் போராடினார்.

அந்தப் போராட்டம் வெற்றி பெற அவர் கண்டன முழக்கமிட்ட கூட்டங்கள் பல. அவருடைய பேச்சுக்களின் இடிமுழக்க ஒசைகளை உலகமே கேட்டு வியந்தது எனலாம்! பெரிய போர்த் தளபதி போலவே வங்க மக்களும், இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கத்துத் தலைவர்களும் தாகூரை மதித்தார்கள். மரியாதை தந்தார்கள்.