பக்கம்:கவியரசர் இரவீந்திரநாத் தாகூர்.pdf/8

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

கவியரசர் இரவீந்திரநாத் தாகூர்




ஆங்கிலத்தில் பேசுவதும், எழுதுவதும், பெருமையாகப் பேசப்பட்ட நேரம்! வட மொழி என்கின்ற சமஸ்கிருதம் தமிழிலே புகுந்து; புலவர் பெருமக்களை மணிப் பிரவாளம் என்ற பைத்தியம் பற்றிக் கொண்டிருந்த சமயம்!

ஆங்கில மொழி, ஆட்சி மொழிப் பல்லக்கில் ஏறிச் சவாரி செய்து கொண்டு, தமிழர்களையும்: தமிழ்ப் புலவர்களையும் பல்லக்குச் சுமப்பவர்களாக்கி, அரசுப் பணியின் சுமைதாங்கிகளாக, அதிகாரச்சுமை தூக்கிகளாக வைத்துக்கொண்டிருக்கும் நிலைமை-அக்காலத்தில்!

ஆங்கிலப் பேரரசுக்கு அடிமைகளாக இருந்து கொண்டு, இங்கிலீஷ் மோகம் என்ற வியாதியுடன் வங்காள மாநிலத்திலே திரிந்து கொண்டிருக்கும் இந்தியர்கள்-அதவாது வங்காளியர்களைக் கண்டித்து, தாய்மொழிப்பற்றுணர்ச்சியின் முக்கியத்துவங்களை அறிவுறுத்திக் கொண்டிருந்தார்-வங்கக் கவிஞர் தாகூர்.

1912-ஆம் ஆண்டில் கவிஞர் தாகூர் நோபல் பரிசு பெற்றதற்குப் பிறகு இந்தியா முழுவதும் அவரைப் பெருமைப்படுத்த எடுக்கப்பட்ட விழாக்களில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர், தமிழ் நாட்டிற்கும் வருகை தந்தார்!

சங்கம் வைத்து மொழி வளர்த்த மதுரையில் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பாராட்டு விழாவிலே கலந்து கொள்ள தாகூர் மதுரை மாநகர் வந்தார். அவருடன் அவரது செயலாளர் பியர்சன் என்பவரும் வந்திருந்தார்.

தமிழ் நாட்டில், கவிஞர் திலகம் ரவீந்திரநாத் தாகூர் தங்கியிருந்த இடத்தில், அவரைக் காண வந்தவர்கள் எல்லாம் இங்கிலீஷிலே பேசினார்கள், விருந்துபசாரமும் நடத்தினார்கள் அறிமுகங்களும் செய்து வைக்கப்பட்டார்கள்.