பக்கம்:காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகப்பொருள் தத்துவம் 161 பொருள் நூலார் குறிப்பிடும் 'அறத்தொடு நிலை', என்பதாகும். திருப்புலியூர் எம்பெருமான்மீதுள்ள திருவாய் மொழி(8:9) இதனையே நுவல்கின்றது. கருமா னிக்க மலைமேல் மணித்தடந் தாமரைக் காடுகள்போல் திருமார்பு வாய்கண் கைஉந்தி கால்உடை யாடைகள் செய்தபிரான் திருமால் எம்மான் செழுநீர்வயல் குட்ட நாட்டுத் திருப்புலியூர் அருமாயன் பேரன்றிப் பேச்சிலள், அன்னைமீர் இதற்கென் செய்கேனோ? (1) (மணித்தடம் - தெளிந்த தடாகம்; உந்தி - கொப்பூழ், கால் - திருவடி, உடை - தரித்திருக்கும், செய்ய ஆடை எனக் கூட்டுக, பேர் - திருநாமம்) என்று தோழி முதலில் இவ்வாறு தொடங்குகின்றாள். இதில் திருப்புலியூர் எம்பெருமானுடைய திருமேனியின் அழகினைக் கண்டு அதில் ஈடுபட்டாள் இத்தலைவி என்று தோழி தாய்மார்க்கு உரைக்கின்றாள். அநுபவிப்பார் நெஞ்சு குளிரும்படி கருமையுடையதாய் பிரகாசத்தால் மிக்கு இருப்பதாய், தனக்குமேல் ஒன்று இல்லாததான இனிமையுடையதாய் இருப்பது ஒரு மலை மேலே என்ற கருத்துத் தோன்ற கருமாணிக்கமலைமேல் என்கின்றாள். இத்தகைய ஒரு மலைமீது தெளிந்த ஒரு தடாகம் தாமரைக் காடுகள் பூத்தனபோல் எம்பெருமானது எழில் நீலமேனியில் திருமார்பு, திருவதரம், திருக்கண்கள், திருக்கைகள், திருவுந்தி, திருவடிகள் முதலிய உறுப்புகள் அமைந்துள்ளன என்பது தோன்ற 'மணித்தடம்..... ஆடைகள் செய்தபிரான் என்கின்றாள். பக்தர்களுக்குப் பற்றுக்கோடாகவுள்ள பெரியபிராட்டியார் எழுந்தருளியிருக்கும் திருமார்பாதலால் அது சிவந்து காணப் பெறுகின்றது.