பக்கம்:காஞ்சி வாழ்க்கை.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

144

காஞ்சி வாழ்க்கை



வற்றையும் விடுத்து, வேறு எங்கேனும் தனி இடத்தைச் சார்ந்து இறையருளில் ஒன்றிக் கிடக்கலாமா என்ற உணர்வும் அரும்புவதுண்டு. எது எப்படியாகும் என்று சொல்ல முடியாத வாழ்வுப் பாதையில், என் பிற்காலம் எப்படி அமையும் என நான் அறுதியிட முடியுமா? எல்லாம் அவன் செயலே என அமைதியுற்று வாழ்ந்து வருகின்றேன்.

எங்கோ கிராமத்தில் பிறந்து எப்படியோ வளர்ந்து பயின்று, எங்கெங்கோ திரிந்து, பச்சையப்பரில் பாதி வாழ்வைக் கழித்து, அன்னையின் பெயரால் அமைந்த பள்ளியின் முழுப்பொறுப்பினையும் ஏற்று, இன்று செயல் புரிகின்ற நான் இனியும் இக்காஞ்சி வாழ்வு பற்றியும் பிறவற்றைப் பற்றியும் அதிகமாகக் கூறி உங்கள் பொன்னான நேரத்தையும் வீணடிக்காது இந்த அளவோடு என் எழுத்தினை இப்போது நிறுத்திக் கொள்ளுகிறேன். அனைவருக்கும் வணக்கம்.