பக்கம்:காஞ்சி வாழ்க்கை.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

காஞ்சி வாழ்க்கை



கால வாழ்வை எண்ணிப் பார்ப்பார்களாயின் பற்பல உண்மைகள் அவர்கட்குத் தோன்றாமற் போகாது. அந்த உண்மைகளின் ஊடேதான் அவர்தம் உள்ளம் அமையும். அவ்வாறு அவர்கள் எண்ணும் எண்ணம் அவர் வாழ்வை மட்டுமன்றிச் சமுதாய வாழ்வையே செம்மைப் பாதையில் ஈர்த்துச் செல்லும். ஆயினும் அவ்வாறு எண்ணுகின்றவர் சிலரே! எண்ணினும் எழுத்தில் வடிக்கின்றவர் அவரினும் மிகச் சிலரே !

வாழ்க்கை வெறும் புறத்தோற்றத்தால் மட்டும் முடிவு செய்யப்பெறுவதன்று. அகத்தொடு பொருந்தியதே வாழ்வின் அடித்தளம். அதை உணர்ந்து கொள்ளாதவரே பிறர் புறவாழ்வைக் கண்டு பலப்பல வகையில் சிந்திப்பர்-பேசுவர். எனினும் ஒவ்வொருவர் வாழ்விலும் உள்ளே பொதிந்து கிடக்கும் எண்ணற்ற உண்மைகளை உணர்ந்து கொள்ள இயலாது, நானே என்னுடைய வாழ்வில் என் அனுபவத்தில் பெற்ற பல உண்மைகளை மறந்துவிட்டேன். தீயவற்றை மறக்க வேண்டியது முறை-ஆனால் நல்லனவும் அல்லவா மறந்து போகின்றன. வாழ்க்கையைப் பற்றி எழுத வேண்டும் என்ற உணர்வு தூண்டத்தூண்ட சிற்சில சம்பவங்களும் அவற்றால் பிணைந்த பயன்களும் அவற்றால் நான் கண்டுகொண்ட உண்மைகளும் புலனாகின்றன. அவற்றுள் ஒருசிலவற்றையே நான் இங்கே தொகுத்துள்ளேன்.

உதகையின் உச்சியில் இருந்துகொண்டு நான் எழுதி முடித்த எனது 'இளமையின் நினைவுகள்' வெளிவந்து பத்து ஆண்டுகள் கழிந்துவிட்டன. அதைப் பயின்ற அன்பர் பலர் அந்த அடிப்படையிலேயே தொடர்ந்து வாழ்வின் பிற பகுதிகளைப் பற்றியும் வடித்துத்தர வேண்டும் என்று விரும்பினர். அந்தத் தொகுதியிலும் நான் என் இளமை வாழ்வு முற்றிலும் காட்டினேன் என்று கொள்ள இயலாது. ஏதோ ஒருசில பகுதிகளைத்தான் தொட்டுக் காட்டினேன். அடுத்து எழுதும் இப்பகுதியிலும் அப்படியே ஒருசில நிகழ்ச்சிகளைத் தான் காட்டமுடிகின்றது. முன்னைய பகுதியில் நான் அறிவு