பக்கம்:காஞ்சி வாழ்க்கை.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

காஞ்சி வாழ்க்கை



இன்று நான் ஐம்பத்தைந்தை முடிக்கும் நிலையில் நிற்கின்றேன். பள்ளிப் படிப்பைப் பதினேழாம் ஆண்டில் முடித்த நான் கடந்த முப்பத்தெட்டு ஆண்டுகளை எண்ணுகிறேன். இன்று இங்கே ஏர்க்காட்டின் உச்சியில் உட்கார்ந்து கொண்டு கடந்தகால வாழ்வை எண்ணும்போது எத்தனையோ உணர்வுகள் அரும்புகின்றன. ஏர்க்காட்டின் உச்சியை அடையப் பத்தொன்பது குறுவளைவுகளைக் (Hair pin bends) கடக்க வேண்டியுள்ளது. கணக்கில் 20 வளைவுகள் உள்ளன; எனினும் ஒன்று வெறும் திருப்பமே. என் வாழ்நாளில் இரண்டு பத்தொன்பது ஆண்டுகளாகிய வளைவுகளை எண்ணும்போது ஒருபுறம் நடுக்கமும் ஒருபுறம் நல்லுணர்வும் அரும்புகின்றன. இந்த முப்பத்தெட்டு ஆண்டுகளில் என் வாழ்வில் குறுக்கிட்டவர் எண்ணற்றவர்-முன் வந்தவர் பலர். பின் நின்றவர் பலர்-தாக்கியவர் பலர்-தாங்கியவர் சிலர். இழந்தவர் பலர்-ஏற்றவர் பலர். மறைந்தார் சிலர்-பிறந்தார் சிலர், இவ்வாறு மக்களினத்தும் பிறர் உயிர்களிடத்தும் நானும் ஒருவகை-ஒன்றாகக் கழித்த நாட்களை எண்ண வியப்பு மேலிடுகிறது. வாழ்வின் பிற்பகுதியில் நிற்கும் நான், இது வரையில் நான் பிறந்த உலகுக்கோ வாழ்ந்த சமுதாயத்துக்கோ என்ன செய்தேன் என்பதை எண்ணிப் பார்க்கும் போது 'ஒன்றுமில்லையே' என வருந்த வேண்டியுள்ளது. இப்படி ஒன்றுக்கும் உதவாது வெற்றுடம்பினனாய் வாழ்ந்து கழிவது வருந்தத் தக்கதுதான். 'இருந்தமிழே உன்னல் இருந்தேன்’ என்று தமிழ்விடுதூது காட்டுவது போன்று தமிழ் எனக்குச் சோறுபோட்டு வழிகாட்டியதன்றி, நான் தமிழுக்கு என்ன செய்தேன்? அப்படியே எனக்கு எண்ணற்ற அறிவுரைகளை வழங்கிய சமுதாயத்துக்கும் உலகுக்கும் நான் செய்த கைமாறு யாது ? ஆம்! இந்த எண்ண அலைகளுக்கிடையில் கடந்து சென்ற வாழ்நாள் பற்றி வரையத் தொடங்கிவிட்டேன்.