பக்கம்:காஞ்சி வாழ்க்கை.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காஞ்சி வாழ்க்கைத் தொடக்கம்

75


 வாழ்ந்து வந்தேன். அக்காலத்தில் ஜிப்பா, கூலி உட்பட எட்டணாவில் அடங்கும். பாடி மூன்றணா. ஒரு வேட்டியும் துண்டும் எட்டணா. எனவே மிக எளிய நிலையிலேயே பலருடைய வாழ்க்கையும் அமைந்தது; என்னுடையதும் அப்படியே. எப்போதும் உடையிலோ பிறவற்றிலோ நான் எளிமையைக் கையாள அன்றே பழகிக்கொண்டேன். எனினும் உயர்நிலைப் பள்ளிக்குச் செல்வதால் கோட்டும் சூட்டும் அணிந்து, கிராப் வாரி விட்டுக்கொண்டு செல்ல வேண்டும் என்றனர் அன்பர்கள். அதுவரை குடுமியாண்டியாகயும், ஒட்டவெட்டிய மொட்டையயுைம் இருந்த நான் சில நாட்களில் 'கிராப்பு' சீவி சிங்காரிக்கும் நிலைபெற்றேன். இரண்டு சூட் தைக்க ஏற்பாடு செய்தேன். நல்ல துணியில் ஒரு சூட் முழுவதும் தையல் கூலியுடன் ஐந்து ரூபாய்தான்.

எனவே பள்ளிக்கூட முதல் நாளில் டை கட்டிக் கொண்டு சூட் அணிந்துகொண்டு வாலாஜாபாத்திலிருந்து இரெயில் வழி காஞ்சிக்குப் புறப்பட்டேன். வாலாஜாபாத்தில் உள்ள அனைவரும் என் புதுத் தோற்றத்தைக் கண்டு வியந்தனர். காஞ்சிபுரம் பள்ளியில் காலெடுத்து வைத்து முதலில் தலைமையாசிரியரைக் கண்டேன். அவர் என் தோற்றத்தைக் கண்டு வியந்தார்; போற்றினர். அக்காலத்தில் தமிழாசிரியர் சூட் அணிவதென்றால் அது ஆச்சரியப்படத்தக்க ஒன்று. எனவே என்னை மாணவரும் பிற ஆசிரியர்களும் ஏதோ காட்சிப் பொருளைப் போன்று கண்டு கண்டு சென்றனர். தலைமையாசிரியர் மட்டும் 'அவ்வாறு வருதல்தான் நல்லது' என அறவுரை கூறினர்; முன்னரே அங்கிருந்த வயதான தமிழாசிரியரை எனக்கு அறிமுகப்படுத்தி, அவருடன் செல்லுமாறு பணித்தார். அவரும் என்னை ஆசிரியர் அறைக்கு அழைத்துச் சென்று பிற ஆசிரியர்களுக்கு என்னை அறிமுகம் செய்து வைத்தார். நான் நடத்த வேண்டிய பாடங்களைப் பற்றிக் கூறினர். ஓரிருநாள் கழித்து வகுப்பிற்குச் செல்லலாம் என்றார். இவ்வாறு எனது வாழ்க்கைப் பணி-தமிழ்ப் பணி தொடங்கியது.