பக்கம்:காஞ்சி வாழ்க்கை.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரசியல் அலைகள் :- தேர்தலும் தெளிதலும்

95


னும் சில தலைவர்கள் எங்களை வேற்றுக்கண்ணோடே நோக்கிய நிலை வருந்தத் தக்கதாக இருந்தது.

நான் தேர்தலில் வெற்றிபெற்றதும் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி என் நினைவுக்கு வருகிறது. என்னொடு முதலில் கைகுலுக்கி என்னை வாழ்த்திய அன்பர் அத்துடன் நிற்கவில்லை. அன்றைய அரசாங்கத்தில் அவர் செல்வாக்கு மிக்கவராக இருந்தமையின் அரசாங்க வழியே தொல்லை கொடுக்க முயன்றார். நான் பணியாற்றிய பள்ளி அரசாங்க மானியம் பெறுகின்ற பள்ளி ஆனமையின் நான் அதில் பணி செய்துகொண்டே, மாவட்டக் கழகத்தில் உறுப்பினறாக இருக்க முடியாதென்றும், இரண்டில் ஒன்றை விட்டு விட வேண்டுமென்றும் ஓலை அனுப்ப ஏற்பாடு செய்தார். ஆயினும் எனது தலைமை ஆசிரியர் அதற்கெல்லாம் சளைக்கவில்லை. பல ஆண்டுகளாகத் தலைமை ஆசிரியராக இருந்து எல்லா நுணுக்கங்களையும் அவர் அறிந்திருந்தவராதலின் அவர்கள் அதுபற்றிக் கலங்கவில்லை. பதிலுக்கு இரண்டையும் வைத்துக்கொண்டிருந்தால் என்ன நடக்கும் என்று பதில் ஓலை விடுத்தார். ஆனால் அதற்கு நேரடியாகப் பதில் எழுத முடியாத அரசாங்கம், கல்வித்துறையிலுள்ள ஒரு மேலதிகாரியை அனுப்பி நான் தொடர்ந்து இரண்டையும் வைத்திருந்தால் அரசாங்கம் பள்ளிக்குத் தரும் மானியத் தொகை நிறுத்தப்படும் என்று சொல்லவைத்தது. தலைமை ஆசிரியர் விதிகளை யெல்லாம் நன்கு அறிந்தவராதலின் சற்றும் தயங்காது ‘அவ்வாறு சட்டம் இருப்பின் செய்து கொள்ளட்டுமே’ என்று திட்டமாகச் சொல்லிவிட்டார். ஆனால் அதற்குமேல் அவர்களால் ஒன்றும் செய்ய இயல வில்லை, அத்துடன் அவர்கள் அந்தப் ‘பணி’யை விட்டு விட்டார்கள். நானும் வெளிப்படையாகவே அரசியலில் கலந்துகொண்டு தொண்டாற்றினேன். பின் நடைபெற்ற பல இந்தி எதிர்ப்பு மாநாடுகளில் பங்குகொண்டேன். அதே வேளையில் பள்ளிப் பணிக்கு யாதொரு இடையூறுமில்லாமல் பார்த்துக்கொண்டேன். இவ்வாறு பள்ளிப்பணி அமைதியாச் சென்றது.