கிள்ளையை யடைந்து கெஞ்சினான் தங்கவேல். கிள்ளையோ,
"தங்கவேல் என்னும் தமிழனைக் காண்கிலேன்
இங்கொரு கோழையை யான்காண் கின்றேன்"
என்று இடித்துரைத்து அனுப்பிவிட்டாள் அவனை.
மன்னன் மேலும்சிலரைச் சிறையிட்டான். மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லாதவாறும், கடைகளையும் தொழிற்சாலைகளையும் திறக்காதவாறும் படைத்தலைவனைக் கொண்டு செய்தான். தங்கவேல் பல கெஞ்சியும் பயனில்லை.
சிறையிலுள்ள தாரோன், மகிணன் முதலியோர் நாட்டையெண்ணி நைந்தனர். மக்களோ, இருந்த உணவை உண்டு, மேலும் உண்ண உணவின்றிக் 'கோ'வென்று கூக்குரலிட்டு அழுதுகொண்டு கிடந்தனர்.
ஒள்ளியோன் மன்னனை நோக்கி, விடிவதற்குள் பசியால் மக்கள் மடிவர்; கிள்ளையின் நிலையும் ஐயமே என்றான். பின்பு, மகிணன் முதலியோரையும் மக்களையும் வெளியில் விடுவித்துக், கிள்ளைபாற் சென்று நிலைமையை அறிவிக்கச் செய்தான் அரசன். அனைவரும் கிள்ளையை அடைந்தனர்.
மக்கள் பசியாற்றாது குய்யோ முறையோ என்றுகூவி
“மங்கை கிள்ளை மன்னனை மணக்க
மகிணன் இதனை மறுத்தல் வேண்டாம்”
என்று அறிவுறுத்தினர். மகிணனும் கிள்ளையும் செய்வதறியாது திகைத்தனர். மக்கட்குப் போதிய உணவளிக்கப்பட்டது. பசியாறிய மக்களை நோக்கி, நாளை தக்க ஏற்பாடு செய்யப்படும் எனச்செப்பி வழியனுப்பினான் வாட்பொறை.
மன்னனிடம் மக்கள் நிலையை உணர்த்தினான் வாட்பொறை. மன்னனோ கிள்ளையைப் பற்றிய பழைய
12