பாரதிதாசன்
15
அந்த நொடிதனிலே — கணக்கன்
ஆடி நடக்கலுற்றான்.
“ஆசைக் கொருமகளே — எனதோர்
அன்பில் முளைத்தவளே!
காசைக் கருதிவந்தான் — அவனோ
கண்ணாலத்தை மறுத்தான்.
காசைக் கருதுவதோ — அந்தக்
கணக்கனைக் கண்டு
பேசி மணம்முடிக்க — நினைத்துன்
பெற்றவர் சென்றுவிட்டார்.
ஏழைஎன் றெண்ணாதே — கணக்கன்
ஏற்ற அழகுடையான்.
தாழ இருப்பதுவும் — பிறகு
தன்தலை நீட்டுமன்றோ!
எழையென் றெண்ணாதே“ — எனவே
ஈன்றவள் சொன்னவுடன்
ஏழெட்டு வார்த்தைகள் ஏன்? — “மாப்பிள்ளை
யார்?“ என்று கேட்டனள்பெண்.
“அந்தக் கணக்கப்பிள்ளை“ — எனவே
அன்னை விளக்கிவிட்டாள்.
குந்தி இருந்தமயில் — செவிகள்
குளிரக் கேட்டவுடன்
தொந்தோம் எனஎழுந்தே — தனது
தோகை விரித்தாடி
வந்த மகிழ்ச்சியினைக் — குறிக்க
வாயும் வராதிருந்தாள்.
அந்த மணவறையில் — உரைத்த
அந்த நொடியினிலே
அந்தக் கணக்கனுக்கும் — அவனின்
ஆசைமயில் தனக்கும்
கொந்தளிக்கும் மகிழ்ச்சி — நடுவில்
கொட்டு முழக்கிடையில்
வந்தவர் வாழ்த்துரையின் — நடுவில்
மணம் முடித்தார்கள்.