2
காதல் நினைவுகள்
போந்து விசிறஒரு புன்னைப் பணிப்பெண்ணும்
சாந்து மகரந்தம் சாரும் நறுமலர்த்தேன்,
தீங்கனிகள், சங்கீதம் ஆன திருவெல்லாம்
ஆங்கு நிறைந்திருக்கும் ஆலின்நெடு மாளிகையில்!
கொட்டும் அனற்கோடைக் கொடும்பகைமை வெற்றிபெற்றுப்
பட்டத் தரசாக வீற்றிருந்த பாங்கினிலே
கொஞ்சம் உலவிவரும் கொள்கையினால் தென்னையிலே
அஞ்சுகம் வாழ்த்துரைக்க அன்னம் வழிகாட்டத்
தேய்ந்த வழிநடந்தேன்!-காதல் திருவுருவம்!
ஒன்றி உளத்தை உறிஞ்சிவிட அப்படியே
நின்றேன் வனிதை நெடுமாதுளை அருகில்!
தீங்குசெயும் மேலாடை யின்றித் திரண்டுருண்ட
தீங்கனியிரண்டு தெரிய இருக்கு மெழில்
மாதுளையே, கேளாய் மலர்ச்சோலை நீ, நான்தான்.
வாதுண்டோ என்றேன். மலர்க்கண் சிவந்துவிட்டாள்!
பிள்ளைமான் ஓடிப் பெருமாட்டி மாதுளைமேல்
துள்ளிவிழுந்து சுவைத்த சுவைக் கிடையில்
தாயன்புப் பெட்டகத்தில் தாங்காத காதலுக்கு
மாயமருந் தில்லை எனுங்கருத்து வாய்த்ததுவாம்.
மாதுளமும் அங்கு வருஷிக்கும் பேரன்பும்
தீதின்றி வாழ்க செழித்து!
காதலன் காதலிக்கு
“பறந்து வா!”
காதலியே,
என்விழிஉன் கட்டழகைப்
பிரிந்ததுண்டு! கவிதைஊற்றிக்
கனிந்ததமிழ் வீணைமொழி என்செவிகள்
பிரிந்ததுண்டு! கற்கண்டான
மாதுனது கனியிதழைப் பிரிந்ததுண்டென்
அள்ளூறும் வாய்தான்! ஏடி
மயிலே,
உன்உடலான மலர்மாலை
பிரிந்ததுண்டென் மார்பகந்தான்!