58
இருளான பொருள்கண்ட தல்லால்-கண்ட
என்னையும் கண்டிலன் என்னேடி தோழி"
என்பார் தாயுமானவர்.
“அருட்கண்ணால் நோக்காதார் அல்லாதாரே” என்பது அப்பர் திருவாக்கு.
காரைக்கால் அம்மையார் அறிவால் ஆராயும் நிலை கடந்து, ஆண்டவன் அருளாலே எது மெய்யான பொருள் என்று நோக்கும் நிலையைப் பெற்றவர். அதுவே வியாதியாக நியமமாக உடையவர். அவர் இறைவன் அருளை இவ்வாறு காண்கிறார்.
அழகுள்ள இடத்தில் ஆண்டவன் அருள் நிரம்பியிருக்கிறது என்று நாம் நினைக்கிறோம். இன்பம் உள்ள இடத்தில் ஆண்டவன் திருவருள் உள்ளதென்று சொல்கிறோம். அழுக்கான இடத்தில் ஆண்டவன் அருள் இல்லை என்கிறோம். அவன் வாழ்வு உள்ளவரை ஆண்டவன் அருளற்றவர் என்று கருதுகிறோம்.
நமக்கே துன்பம் வரும்போது இறைவன் அருள் செய்ய வில்லையே என்று வருந்துகிறோம்.
காரைக்காலம்மையார் எப்போதும் எந்தப் பொருளிலும் எந்த அநுபவத்திலும் எந்த நிகழ்ச்சியிலும் அருளையே பார்க்கிறார். அது எப்படி?
எல்லாம் அவன் வடிவம், எல்லாம் அவன் செயல் என்று உணரும் நிலையை அடைந்தவர்களுக்கு எல்லாம் இறைவன் அருள் விளையாட்டு என்ற அநுபவம் கிடைக்கும். தமக்கு இன்பம் உண்டாகும் போது இறைவன் அருட்பிரசாதம் என்று மகிழ்வது போலவே, துன்பம் உண்டாகும்போதும் அதுவும் இறைவன் அருட்பிரசாதம் என்றே எண்ணுவார்கள். கணவன் காலால் உதைத்தால் அவன் காலின் பரிசம் கிடைத்ததே என்று மகிழும் கற்புக்கரசி போன்றவர்கள்