பக்கம்:கால ஆராய்ச்சி.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரிபாடலின் காலம் 93 9. கண்ணன் தமையனான பலதேவனுக்குப் பனைக்கொடியும் நாஞ்சிற்படையும் உரியவை. அவை இரண்டும் திருமாலுக்கும் உரியவையாகப் பரிபாடல்கள் (4, 13) கூறுகின்றன. மேலும், பலதேவனை வாசுதேவனுடன் (கண்ணனுடன்) இணைத்து வழிபட்டமை பரிபாடலில் (13) கூறப்பட்டுள்ளது. இங்ங்னம் இருவரையும் இணைத்து வழிபடும் முறை மிகத் தொன்மையானது. வட இந்தியாவில் கோசுண்டி, நானாகாட் என்னும் இடங்களிற் கிடைத்த கல்வெட்டுக்களில் வாசுதேவன்-பலதேவன் வணக்கம் இணைந்தே காணப்படுகிறது. இக்கல்வெட்டுக்கள் முறையே கி.மு. 3, 1 ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்தவை. எனவே, வாசுதேவன் - பலதேவன் வணக்கம் வட இந்தியாவில் கி.மு.3ஆம் நூற்றாண்டில் இருந்தமை நன்கு தெளிவாகும்." இவ்வணக்கம் சங்ககாலத் தமிழகத்திலும் இருந்தது; கண்ணனுக்கும் பலதேவனுக்கும் கோவில்கள் இருந்தன. புலவர்கள், “நீ பகைவரைக் கொல்வதில் கண்ணனையும் வலிமையில் பலதேவனையும் ஒப்பை"," எனத் தமிழரசரை வாழ்த்தினர். "இருபெருந் தெய்வமும் ஒருங்கிருந் தாங்கு" என்று அவர்களை இரண்டு பெருந் தெய்வங்களாகவே கருதி வழிபட்டனர் என்பன புறநானூறு, சிலப்பதிகாரம் முதலிய சங்க நூல்களால் அறியப்படும். பலதேவனுக்குப் பனைக்கொடி உரியது. தொல்காப்பியர் 'பனை என்னும் பெயர் முன் கொடி என்பது வருவதற்குத் தணிவிதி கூறியுள்ளதை நோக்க, அவர் காலத்திலேயே இவ்வணக்கம் தமிழகத்தில் இருந்தது என்று நினைத்தல் தகும். “கி.மு. முதல் நூற்றாண்டிலேயே சங்கருடன் வாசுதேவர்கள் (பலதேவரும் வாசுதேவரும்) மராத்தியரால் வழிபடப் பட்டனர். இதே காலத்தில் இம்மதம் தெற்கிலும் பரவியிருத்தல் வேண்டும். பரிபாடல் முதலிய நூல்கள் அக்காலத்தில் எழுந்தன ஆகலாம்." சங்ககாலம் என்பது முன்பு கூறியாங்கு மிகப் பரந்துபட்ட கால எல்லையை உடையது. அப் பரந்துபட்ட கால எல்லையில் கி.மு. நான்காம் நூற்றாண்டில் தொல்காப்பியம் செய்யப்பட்டது - அதற்கு முன்பு சிலவும் பின்பு பலவுமாகத் தொகைநூற் பாடல்கள் பல காலங்களில் பாடப்பெற்றன என்பதும், பிற்பட்ட சொல்லுருவங்களையும் வழக்குகளையும் புராணக் கதைகளையும் மிகுதியாகக் கொண்ட கலித்தொகை, பரிபாடல், சிலப்பதிகாரம், மணிமேகலை என்பன கி.பி. இரண்டாம், மூன்றாம் நூற்றாண்டுகளில் செய்யப் பெற்றிருக்கலாம் எனக் கொள்வதும் பொருத்தமாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கால_ஆராய்ச்சி.pdf/100&oldid=793094" இலிருந்து மீள்விக்கப்பட்டது