86
முடிவுரை
தொன்று தொட்டுப் பயிர்த்தொழிலில் ஈடுபட்ட நாடாதலால் அத் தொழிலடியாகப் பிறந்த பழமொழிகள் இங்கு மிகுதியாக வழங்கும், 'விளையும் பயிர் முளையிலே தெரியும்' என்பது ஒரு பழமொழி. 'காற்றுள்ள போதே தூற்றிக் கொள்' என்பது மற்றொரு பழமொழி. பண்டைத் தமிழறிஞர் இப் பழமொழிகளின் பெருமை யறிந்து போற்றினார்கள். முன்றுறை அரையர் என்னும் தொல்லாசிரியர் சங்க காலத்தில் வழங்கிய பழமொழிகளில் நானூற்றைத் தொகுத்துப் 'பழமொழி நானூறு' என்னும் பெயரால் ஒரு நூல் இயற்றினார். அதற்குப் பின்பு நெடுங்காலமாகப் பல்கிப் பரவிய பழமொழிகளைத் திரட்டித் தந்தவர் கிருஸ்தவத் தொண்டரே யாவர்.
பெர்சிவல் என்னும் பெரியார். ஏறக்குறைய இரண்டாயிரம் பழமொழிகளைத் திரட்டி அச்சிட்டு வெளிப் படுத்தினார்[1]. சென்னையில் சிறந்த தமிழறிஞராய் விளங்கிய லாசரஸ் ஐயர் தமிழ் நாட்டின் பல பாகங்களிலும் வழங்கிய பழமொழிகளைச் சேகரித்துப் பெரு நூலாக வெளியிட்டார். பத்தாயிரம் பழமொழிகள் அந் நூலிற் காணப்படும்.[2] அதனைப் பின்பற்றித் தமிழில் எழுந்த பழமொழி நூல்கள் பலவாகும்.