பக்கம்:கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


அதுபோன்ற ஆனந்தமயமான கோலாகலமான வரவேற்பை ஒலிம்பிக் வெற்றி வீரன் எதிர்ப்பார்ப்பதும் உண்டு.

சிபாடஸ் என்ற ஒரு வீரன். 6வது ஒலிம்பிக் பந்தயத்தில் வெற்றிபெற்றுத் தன் தாயகம் திரும்பினான். அவ்வீரனைக் கண்டு யாரும் எதிர்கொண்டு அழைக்கவில்லை, வரவேற்கவில்லை. வாழ்த்தொலி எழுப்பவில்லை. மலர்மாரித் தாவவில்லை. மனம் திறந்து அழைக்கவில்லை. ஆத்திரம் கொண்ட அவ்வீரன், தன் நகரத்தைச் சபித்துவிட்டான். விளைவு என்ன தெரியுமா? அவன் இட்ட சாபம் 74வது ஒலிம்பிக் பந்தயம் நடக்கும்வரை தொடர்ந்து வந்தது.

அசையா என்ற அந்த நகரத்தில் இருந்து ஒரு வீரனால் கூட ஒலிம்பிக் பந்தயத்தில் வெற்றிபெற முடியவில்லை வீரன் வயிற்றெரிச்சலோடு இட்ட சாபமல்லவா அது சாபம் நின்று பேசியது எத்தனையோ முயன்றும் வெற்றியே அந்த நகரத்திற்குக் கிடைக்கவில்லை.

இந்த விவரம் அறிந்த அந்நகரத்திலுள்ள பெரியவர்கள் ஒன்றுகூடி, டெல்பி என்ற இடத்திற்குச் சென்று ஆண்டவனை வணங்கிக் கேட்டு என்ன காரணம்? என்று அறியத் துடித்தனர். அங்கிருந்து அசரீரீ ஒன்று எழுந்தது. அதன்படியே, சாபம் இட்ட வீரனான சிபாடஸுக்கு அந்நகர மக்கள் சிலை ஒன்றை அமைத்தனர். அதற்குப் பிறகு வந்த, அடுத்த ஒலிம்பிக் பந்தயத்திலேயே, ஓட்டப் பந்தயத்தில் சாஸ்தரதாஸ் என்ற வீரன் வெற்றி பெற்றான் என்று ஒரு நிகழ்ச்சி நவில்கின்றது. செத்தும் சிலை பெற்றான் சிபாடஸ்.